வெள்ளி, 29 ஜூலை, 2016

வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் முறை

வரலட்சுமி விரதம்  கடைபிடிக்கும் முறை 

support and subscribe my  you tube channel tamilnattu  samayal 

வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்கள் முதல் நாளன்று வீட்டை சுத்தப்படுத்தி,செம்மை இட்டு ,மாக்கோலம் போட  வேண்டும். 


வீட்டின் தென்கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து,அதில் வாழை மரம்,மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.மண்டபத்தில் வாழை இலை மீது ஒரு படி அரிசியை பரப்பி, வைக்க வேண்டும்.

பித்தளை செம்பு அல்லது வெள்ளி செம்பின் உள்ளே அரிசி போட்டு,மஞ்சள் ,குங்குமம்,வெற்றிலை ,பாக்கு,1ரூபாய் நாணயம்,எலுமிச்சம் பழம், காதோலை,கருகமணி [ இவை உள்ள செம்பே கலசம் எனப்படும்]


  வாய்பகுதியில் மாவிலை வைத்து கலசத்தின்மீது தேங்காய் வைக்க வேண்டும்.
தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு,அம்மன் திரு முகத்தை வைக்க வேண்டும். அம்மன் முகம் சந்தனத்தால் செய்தோ,வெள்ளி முகம் வைத்தோ அவரவர் வசதிக்கு ஏற்ப வைக்கலாம்.வரலட்சுமிக்கு  ஆடை,ஆபரணம் தரித்து,அழகூட்ட வேண்டும்.வாசலுக்கு  அருகில் அம்மனை முதல் நாள் வைக்க வேண்டும்.



மறுநாள்,வரலட்சுமி விரதம் அன்று பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.வாசலில் வைத்த அம்மனை அழைக்கும் விதமாக,"எங்கள் வீட்டில் எழுந்தருளி எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேற, எல்லா ஐஸ்வர்யங்கள் தந்து  அருள்வாயே !"என்று கூறி ,அம்மனை வாசலில் இருந்து எடுத்து வந்து மண்டபத்தில் கிழக்கு முகம் பார்த்து வைக்க வேண்டும்.பூஜை செய்யும் போது வடக்கு முகமாக, உட் கார்ந்து பூஜிக்க வேண்டும்.





மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும்.மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும்.மலர்களால் ,தீபங்களால் அம்பாளை ஆதரித்து, 9 இழைகள் கொண்ட  மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கணவனிடம் கொடுத்தோ அல்லது மூத்த சுமங்கலிகளை கட்டிவிட சொல்லி , சரடை கட்டி கொள்ள வேண்டும்.பூஜைக்கு வந்திருக்கும் சுமங்கலி பெண்களுக்கும் கட்டி விடுதல் வேண்டும்.

அஷ்ட லக்ஷ்மிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை தூவி, வழிபட வேண்டும்.அஷ்ட லட்சுமி சுலோகம்,பாடல்கள் பாடி வழிபட வேண்டும். 





க்ஷ்மிக்கு சாதம்,பாயசம்,வடை,கொழுக்கட்டை,இட்லி,தயிர்,பசும்பால்,நெய்,தேன்   அல்லது கலந்த சாதம் 3 அல்லது 5 என்ற எண்ணிக்கையில் செய்து நிவேதனம் செய்ய வேண்டும்.






வரலக்ஷ்மி விரதத்தன்று நம் இல்லம் தேடி வருபவள் லட்சுமி .


சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து, அம்பாளாக எண்ணி, உணவளித்து வெற்றிலை,பாக்கு,மஞ்சள்,குங்குமம்,ரவிக்கை துணி ,பணம்  ,அம்மாளுக்கு பிடித்தமான பொருட்களை தாம்பூலமாக  வைத்து கொடுத்து உபசரிக்க வேண்டும். 


இவ்வாறு செய்வதால்  நாம் லட்சுமி தேவிக்கு பிடித்தமானவர்கள் ஆகின்றோம்.நம் கோரிக்கைகளை தீர்த்து , என்றென்றும் தீர்க்க சுமங்கலியாக வாழும் வரத்தை நமக்கு தருவாள் நம் தாய்.

சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுப்பதால் கொடுப்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும்  அன்னை மகாலக்ஷ்மியின்   அருள்பரிபூரணமாக  கிடைக்கும்.
தாம்பூலம் யார் கொடுத்தாலும் அதை பெறுவது அன்னை மகாலக்ஷ்மியின் அனுக்கிரகத்தை பெறுவதாகும்.

பூஜை முடிவில் லட்சுமி தேவிக்கு மங்களம் பாடி ஆரத்தி எடுக்க வேண்டும்.தெய்வங்களுக்கு எடுக்கும் ஆரத்தி மஞ்சளும்,குங்குமமம் கலந்த கலவையாக இருக்க வேண்டும்.ஆரத்தி எடுத்தவுடன்,யார் காலிலும் மிதிப்படாதவாறு மரத்தின் கீழ் ஊற்றிவிட வேண்டும்.



மறுநாள் காலையில், வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான பூஜை செய்து, வடக்கு முகமாக கலசத்தை நகர்த்தி அலங்காரத்தை அகற்ற வேண்டும்.  பூஜையின்போது" இந்த வருடம் போல் அடுத்த வருடமும் நான் பூஜை செய்யும் பாக்கியத்தை தர  வேண்டும் "என்று கூறி,அம்பாளை வழி அனுப்பும்விதமாக கலசத்தை வடக்கு முகமாக  நகர்த்த வேண்டும்.


கலசத்தை அரிசி பாத்திரத்துள் வைக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்தமாக நிறைந்திருக்கும்!அக்ஷயமாக  இருப்பவள் அம்பாள்!


பூஜையில் பயன்படுத்திய  பச்சரிசி, கலச தேங்காய் போன்றவற்றை கொண்டு,அடுத்து வரும்  வெள்ளிக்கிழமையன்று உடைத்து பாயசம் செய்து நிவேத்தியம் செய்யலாம். 


வரலக்ஷ்மியை  வழிபட்டால் அனைத்து செல்வங்களையும் பெறலாம்.இவ்விரதம் அனுஷ்டிப்பதால் ,குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிடைக்கும் .கர்ம நோய்கள் நீங்கும்.திருமணம் நடைபெறும்.புத்திர பாக்கியம் உண்டாகும். 







மங்கலவாழ்வு தரும் வரலக்ஷ்மி விரதம்

my  youtube channel Tamilnattu  samayal video .subscribe ,support and share your friends.give comments.

மங்கலவாழ்வு தரும் வரலக்ஷ்மி விரதம் 


ஆண்டுதோறும் ஆடி மாத வளர்பிறை வெள்ளியன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.வரலக்ஷ்மி என்றாலே வரங்களை தருபவள் .நாம் கேட்கும் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, வரத்தை  கொடுப்பவள் வரலக்ஷ்மி. 

பாற்கடலில் உதிர்த்த நன்னாளை,வரலக்ஷ்மி விரத நாளாக அனுஷ்டிக்கிறோம்.லட்சுமி பொறுமைமிக்கவள்.பெண்களுக்கு உரித்தான கருணை உள்ளம்,அழகு,வெட்கம்,புத்தி,அன்பு போன்ற நற்குணங்கள் கொண்டவள். 


 செல்வங்களை வாரி வழங்குபவள் அன்னை லக்ஷ்மி.மஞ்சள் பட்டு உடுத்தி மகாவிஷ்ணு திருமாலில் குடியிருப்பவள் லட்சுமி தேவி.எங்கு லட்சுமி இருக்கிறாளோ அந்த இடம்  செல்வ செழிப்பு பெறும்.அதர்வண வேதத்தில் அனைவருக்கும் நன்மை தருபவள் லட்சுமி.



எட்டு  லட்சுமிகள் 

மகாலக்ஷ்மியை தனலட்சுமி,தான்யலக்ஷ்மி,தைரியலட்சுமி,ஜெயலட்சுமி,வீரலட்சுமி,சந்தானலட்சுமி,கஜலட்சுமி,வித்யா லட்சுமி  என அஷ்டலட்சுமியாக வழிபடுவர்.இவ்வாறு அஷ்டலக்ஷ்மிகளுடன் வரலக்ஷ்மியையும் சேர்த்து 9லட்சுமிகள் என்கிறது சாஸ்திரங்கள்.எனவே,9நூல் இழைகளால் ஆன,ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோம்பு கயிற்றை [சரடை]பூஜையில் வைத்து வழிபடவேண்டும்.

வரலட்சுமி விரதத்தின் மேன்மையை  சொல்லும்  புராணக் கதைகள்  


பார்வதியின் சாபத்திற்கு  ஆளான சித்ரநேமி என்ற தேவதை வரலக்ஷ்மி விரதம் அனுஷ்ட்டித்து,சாப விமோசனம் பெற்றார்.

சௌராஷ்ட்டிர நாட்டின் ராணியாக இருந்த கரசந்திரிகா செல்வவளத்தின் மமதையால்,ஒருமுறை  மகாலட்சுமியை அவமதித்தாள்.கர்வம் கொண்டு லக்ஷ்மியை அவமதித்ததால்,செல்வம் அனைத்தும் இழந்து வறுமையால் வாடினாள்.

ராணி கரசந்திராவின் மகள் சியாம பாலா ,தெய்வாதீனமாக  ஒருமுறை வரலட்சுமி விரதத்தைப்பற்றி அறிந்தார்.அதுமுறை, அந்த விரதத்தை கடைபிடிக்க தொடங்கினாள்.


 சியாம  பாலாவின்  விரதத்தால் மகிழ்ந்த அன்னை மகாலட்சுமி,அவளுக்கு நலன்கள் அனைத்தும் அருளினாள் தன்  மகளின் நிலையைப் பார்த்து,அவள் கடைபிடித்த வரலட்சுமி விரதத்தை தானும் கடைபிடித்தாள் .   இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றாள் கரசந்திரா.

மகத நாட்டில்,குணதினபுரம் என்ற ஒரு நகரம் இருந்தது.அங்கு சாருமதி  என்ற பெண் தன்  கணவனுடன் வாழ்ந்து வந்தாள்.அவள் தன் குடும்பத்தின்மீது அக்கறை கொண்டாள்.சிறந்த பக்தி உடைய சாருமதி கனவில் வந்த லட்சுமி தேவி ,தன்னை வரலட்சுமியாக வழிபட்டால் அவளுக்கு அனைத்து செல்வங்களையும் தருவதாக கூறினாள்.அதன்படி,வரலட்சுமி விரதம் இருந்து அனைத்து செல்வங்களையும் பெற்று சிறப்பாக வாழ்ந்தாள்.

சாருமதியின் முன்னேற்றத்தை பார்த்த பெண்கள் ,அவளிடம்  வரலட்சுமி விரதத்தைப் பற்றி கேட்டு,தெரிந்து விரதத்தை கடைபிடித்து,பெரும் பயனை அடைந்தனர்.  

இவ்விரதம் மேற்கொண்டால் நீண்ட ஆயுள்,செளபாக்கியம் கிட்டும்.

திருமணதோஷம் உள்ள கன்னிபெண்கள்  விரைவில் திருமணம் நடக்கும். 

வரலக்ஷ்மி விரதத்தன்று,புண்ணிய நதியில் நீராடுவது ஒரு வருடம் தொடர்ந்து வரலக்ஷ்மி விரதம் இருப்பதற்கு பலனைத்தரும்.ஆகவே,கங்கை,யமுனை,கோதாவரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடுவது வரலக்ஷ்மி விரதம் இருந்த பலனை பெறலாம்.




பூஜைக்கு உதவும் எளிய மந்திரம்

1.சகல சித்தியளிக்கும் ஆதிலட்சுமியே  போற்றி! 

2.பிள்ளைப்பேறு அளிக்கும் சந்தான லட்சுமியே போற்றி!

3.ராஜ மரியாதை தரும் கஜலக்ஷ்மியே போற்றி!

4.செல்வச்செழிப்பை தரும் தனலட்சுமியே போற்றி!

5.தான்ய விருத்தியளிக்கும் தான்ய லட்சுமியே போற்றி!

6.எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தரும் விஜயலட்சுமியை போற்றி!

7.செளபாக்கியம் தரும் மகாலட்சுமியே போற்றி!

8.மனதிலும்,உடலிலும் சோர்வை அகற்றி தைரியத்தையும்,தெம்பையையும்,வீரத்தையும் அருளும் வீரலக்ஷ்மியே போற்றி!

9.அனைத்து நன்மைகளையும் வரமாகத் தரும் வரலக்ஷ்மியே போற்றி!போற்றி!  

வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமியும் மகிழ்வதாக ஐதீகம்.வரலக்ஷ்மியை பூஜிக்கும்போது  கனகதாரா ஸ்தோத்திரம் , அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்,லக்ஷ்மி துதி   படித்தால், ஸ்ரீ மகாலட்சுமி மகிழ்ந்து வேண்டும் வரத்தை அள்ளித் தருவாள். 


என்றென்றும்,உங்கள் இல்லம் சிறக்க என்னுடைய பிராத்தனைகள் பல.

நன்றி வணக்கம் 























   











செவ்வாய், 26 ஜூலை, 2016

ஓம் என்ற மந்திரம்

ஓம் என்ற மந்திரத்தை நாம் அன்றாட வாழ்வில் சொல்லி கொண்டு வருகிறோம்.அது எதற்காக?என்பது நம்மில் சில பேர்களுக்கு  தெரியாது.புத்தகத்தில் போட்டு இருக்கிறது சொல்கிறோம் என்று சொல்பவர்களும் உண்டு.


எந்த காரியத்தை செய்யும் போதும் ஏன் செய்கிறோம்? என்று அர்த்தம் தெரிந்து சொன்னால் நல்லது.

 ஓம் என்றால் பிரணவம்.பிரணவம் என்பது பஞ்ச பூதங்களை குறிக்கிறது.உலகம் விரித்தலை குறிக்கிறது.ஓம் என்ற சொல் அகமும்,புறமும் சொல்லப்படுகிறது.அகம் என்றால் உள் உறுப்புகள், புறம் என்றால் பஞ்ச பூதங்கள் ஆகும்.




ஓம் என்ற மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன.


"ஆதி பகவானாகிய இறைவனே!ஜீவனாகிய என்னை உன்னோடு சேர்த்துக் கொள்" என்பது இதன் பொருள் ஆகும்.அதனால்தான் ,அவரவர் இஷ்ட தெய்வங்களை வணங்கும் போது ,[ஓம் முருகா,ஓம் நமச்சிவாயா,ஓம் நமோ நாராயணா என்று  சொல்லும் போது] அந்தந்த தெய்வத்திடம் என்னை உன்னோடு சேர்த்து கொள்  என்று தெரிந்தோ,தெரியாமலோ கெஞ்சிகிறோம்.காலம் வரும்போது,இந்த மந்திரம் சொல்வதால் பலன் கிடைக்கும் என்பது உறுதி.

ஓம் என்பதில் அ --உ --ம  என்பது உள் அடங்கியுள்ளது.
அ ----பிரம்மா உ ---விஷ்ணு ம ----ஈஸ்வரன் 
ஓம் என்ற மந்திரத்திற்குள் பிரம்மா,விஷ்ணு,ருத்திரன் அடக்கம். 


ஓம் மந்திரத்தை ஜெபிக்கும் முறை 


ஓம் என்ற மந்திரத்தை கிழக்கு பார்த்து அமர்ந்து,கண்களை மூடி ஜெபிக்க வேண்டும்.வாய் விட்டு ஜெபிக்காமல் மனத்திற்குள் ஓம் ஓம்  என ஜெபிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஓ ..............ம்  என நீட்டிய படி மனதால் ஜெபிக்கலாம்.

எந்த மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பித்தாலும் ,குறைந்தது ஒரு லட்சம் முறை உருயேற்றிய பின்தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.


மாடி வீட்டிலிருந்து ஜெபித்தால் பலன் கூடும்.மலை மேல் உட்கார்ந்து ஜெபிப்பதால்  பலமடங்கு சக்தி கிடைக்கும். 


ஓம் என்று சதா காலமாகும் ஜெபிப்பவர்களுக்கு நெருக்கடியான காலத்தையும் சமாளித்து,இறுதியில் வெற்றி கிட்டுகிறது.சமாளிக்கும் பக்குவம் உண்டாக்குகிறது.
ஓம் என்ற மந்திரத்தை ஜெபிக்காதவர்கள் வாழ்வானது நெருக்கடி நேரத்தில் சமாளிக்க முடியாத மனநிலையும் அதிலிருந்து மீளவும் முடியாமல் போகிறது.
இறைவனின் நாமங்களை நாம் அன்றாடம் உச்சரிக்கும்போது நம் தீவினை அகலுகிறது.

வாகனம் ஓட்டும்போது,தெருவில் நடக்கும் போது எந்த மந்திரத்தையும் ஜெபிக்கக்  கூடாது.ஒரே சிந்தனையுடன் இறைவனை நம் மனதினில் இருத்தி,  மந்திரங்களை சொல்வதால் மட்டுமே பலன் கிடைக்கும்.

ஓம் என்ற மந்திரத்தால் பயன் 

யார் ஓம் ஓம் என்று சதா காலமும் ஜெபிக்கிறார்களோ அவர்களுக்கு நவகிரக கதிர்விச்சுகளால் அதிகம் பாதிப்பு ஏற்படுவதில்லை.


எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.மன சாந்தி ஏற்படும்.


குழந்தைகள் நாவில் வேப்பங்குச்சியால் ஓம் என எழுத கல்வி மேன்படும்.

கர்ப்பமான பெண்கள்,எந்நேரமும் ஓம் ஓம் ஓம் என்று ஜெபித்து கொண்டிருந்தால்,தெய்வ குழந்தை பிறக்கும்.


கந்த சஷ்டியில் குழந்தை வரம் வேண்டும் பெண்கள் "ஓம் முருகா" என சொல்லி, வழிபடுவதை நாம் காணலாம்.

சிறு குழந்தைகளுக்கும் நமக்கு தெரிந்த நல்ல விஷயங்களை  சொல்லி கொடுத்தால், அவர்கள் வாழ்வும் செம்மையாக அமையும்.அவர்களுக்கும் "ஓம் " என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி கொடுத்து,அவர்கள் வாழ்வை சிறப்பிற செய்வோம். 


உங்கள் தோழி ஈஸ்வரி 



























திங்கள், 25 ஜூலை, 2016

நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை

நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை 


வணக்கம் நண்பர்களே 
போனபதிவில்,64லீலைகள் என்ன? என்பதைப் பற்றி எழுதியிருந்தேன்.சிவபெருமானின் லீலைகளை தெரிந்திருப்பது இந்துக்களின் கடமையாகும். 


திருவிளையாடல் 64 நிகழ்ச்சிகளும் சிவனின் லீலைகள் ஆகும்.அதில் ஒன்று மீனாட்சி அம்மன் கோவிலில் நாரைக்கு முக்தி கொடுத்த படலம் ஆகும்.

மதுரையில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் ஆவணிமூல  திருவிழாவாக 10நாட்கள் கொண்டாடப்படுகிறது. 

நாரையின் கதை 


முன்னொரு  காலத்தில் ,பாண்டிய நாட்டின் தென்பகுதியில் இருந்த பெரிய தாடகம் ஒன்றில் வாழ்ந்த மீன்களை உண்டு நாரை ஒன்று வசித்து வந்தது.ஒருசமயம், மழை பெய்யாமல் போனதால் குளம் வற்றி போனது.நாரைக்கு உணவு கிடைக்கவில்லை.எனவே,அது வனத்திற்கு  சென்று,அங்கிருந்த நீர் நிலைகளில் சிக்கிய மீன்களை தின்று வாழ்ந்தது.


அங்கு "அச்சோ " என்ற குளம் இருந்தது..இதன்கரையில் பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர்.இந்த புண்ணியசீலர்கள் பயன்படுத்தும் குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன .இருந்தாலும்,அந்த முனிவர்கள் இருக்கும் இடத்தில் மீன் பிடித்து சாப்பிடுவது ' மகா பாவம் 'என 
நாரை நினைத்தது.

அங்குள்ள சத்தியன் என்ற முனிவர் ,மதுரை தலம் பற்றியும்,அங்கு குடி கொண்டிருந்த சுந்தரேஸ்வரர் பற்றியும் தன்சக முனிவருடன் பேசி கொண்டிருந்தார்.இதை கேட்ட நாரை,மதுரை மாநகரை நோக்கி பறந்தது.



மதுரை மீனாட்சியம்மன்  கோவிலில் உள்ள பொற்றாமரைக்  குளத்திலுள்ள  நீர் தன்மீது படும்படியாக தலையை மூழ்கிவிட்டு பறந்தது.அன்னை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வர்  சன்னதி மேலுள்ள இந்திர விமானத்தில் சுற்றி சுற்றி பறந்தது.

15நாட்கள் இவ்வாறே செய்து,16ம் நாள் பொற்றாமரை குளக்கரைக்கு வந்தது.குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடின.அவற்றை பிடித்து உண்ண  எண்ணிய வேளையில்,ஞானம் பிறந்தது. நாரைக்கு மீனைப்  பிடித்து தின்பது பாவம் எனத் தோன்றியது.அது பசியை பொறுத்து கொண்டது.

தனது இயற்கையான சுபாவத்தை கூட கருணையின் காரணமாக,தன் மீது கொண்ட நம்பிக்கையாலும் மாற்றி கொண்ட நாரையின் முன்னால் சுந்தரேஸ்வரர் தோன்றி,"என்ன வரம் வேண்டும் நாரையே?"என்றார்.

"ஐயனே!எங்கள்  இனத்தவர் மீன்களை பிடித்து உண்ணும் சுபாவமுடையவர்.  ஆனால் இந்த புண்ணிய குளத்தில் அதை செய்யாமல்  இருக்க தாங்களே அருள வேண்டும்.எனவே,இக்குளத்தில் மீன்களே இல்லாமல் செய்ய வேண்டும்.மேலும்,எனக்கு சிவலோகத்தால் தங்கும் பாக்கியம் வேணும்" என்றது.சிவபெருமானும் நாரை கேட்ட வரத்தை தந்து அருளினார்.

நாரை நான்கு புயங்களும்,மூன்று கண்களும் பொருந்திய சிவவடிவம் பெற்று,வானுலகத்தோர் தூவிய  மலர்கள் மூழ்கியவாறு விமானத்தில் ஏறி,சிவலோகத்தை அடைந்தது.

பின்னர் நந்தி கணங்களுள் ஒன்றாய் தங்கியிருந்தது.

நாரையின் வேண்டுகோளுக்கு இணங்க, இன்று வரை பொற்றாமரைக் குளத்தில் மீன்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி வணக்கம்.உங்கள் தோழி  ஈஸ்வரி 



















சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள்

சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் 

support and subscribe my  you tube channel tamilnattu  samayal 

பரஞ்சோதி முனிவர் ஒருசமயம்,மதுரை வந்த போது அவர் கனவில் அன்னை மீனாட்சி அம்மன் தோன்றி,சிவம்பெருமான் மதுரையில் நிகழ்த்திய லீலைகளை அழகிய தமிழில் தெள்ளத்தெளிவாக பாடுமாறு உத்தரவுயிட்டார்.


அன்னையின் உத்தரவின்படி,பாடப்பட்டதே திருவிளையாடல் புராணம்.திருவிளையாடல்கள் 64 உள்ளன.முதல் 18படலங்கள் மதுரை காண்டத்திலும்,19 முதல் 48 படலங்கள் கூடற் காண்டத்திலும்,49 முதல் 64படலங்கள் திருவாலவாய் காண்டத்திலும் இடம் பெற்றுள்ளன.  

  1. இந்திரன் பழிதீர்த்தப் படலம்!
  2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!
  3. திருநகரங்கண்ட படலம்!
  4. தடாதகைபிராட்டியாரின் திருஅவதாரப் படலம்!
  5. தடாதகையாரின் திருமணப் படலம்!
  6. வெள்ளியம்பல திருக்கூத்தாடிய படலம்!
  7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்!
  8. அன்னக் குழியும் வையையும் அழைத்த படலம்!
  9. ஏழுகடல் அழைத்த படலம்!
  10. மலையத்துவஜனை அழைத்த படலம்!
  11. உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்!
  12. உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்!
  13. கடல் சுவற வேல் விடுத்த படலம்!
  14. இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்!
  15. மேருவை செண்டால் அடித்த படலம்!
  16. வேதத்திற்கு பொருளருளிச் செய்த படலம்!
  17. மாணிக்கம் விற்ற படலம்!
  18. கடலை வற்றச் செய்த படலம்!
  19. நான் மாடக்கூடலான படலம்!
  20. எல்லாம் வல்ல சித்தரான படலம்!
  21. கல் யானைக்கு கரும்பு தந்த படலம்!
  22. யானை எய்த படலம்!
  23. விருத்த குமார பாலரான படலம்!
  24. கால் மாறி ஆடிய படலம்!
  25. பழியஞ்சின படலம்!
  26. மா பாதகம் தீர்த்த படலம்!
  27. அங்கம் வெட்டின படலம்!
  28. நாகமெய்த படலம்!
  29. மாயப் பசுவை வதைத்த படலம்!
  30. மெய் காட்டிட்ட படலம்!
  31. உலவாக்கிழி அருளிய படலம்!
  32. வளையல் விற்ற படலம்!
  33. அட்டமா சித்தி உபதேசித்த படலம்!
  34. விடையிலச்சினையிட்ட படலம்!
  35. தண்ணீர் பந்தல் வைத்த படலம்!
  36. இரசவாதம் செய்த படலம்!
  37. சோழனை மடுவில் வீழ்த்திய படலம்!
  38. உலவாக்கோட்டை அருளிய படலம்!
  39. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்!
  40. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்!
  41. விறகு விற்ற படலம்!
  42. திருமுகம் கொடுத்த படலம்!
  43. பலகையிட்ட படலம்!
  44. இசை வாது வென்ற படலம்
  45. பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்!
  46. பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்!
  47. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்!
  48. நாரைக்கு முக்தி கொடுத்த படலம்!
  49. திருவால வாயான படலம்!
  50. சுந்தர பேரம்பு எய்த படலம்!
  51. சங்கப் பலகை கொடுத்த படலம்!
  52. தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்!
  53. கீரனைக் கரையேற்றிய படலம்!
  54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்!
  55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்!
  56. இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்!
  57. வலை வீசிய படலம்!
  58. வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்!
  59. நரியை பரியாக்கிய படலம்!
  60. பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்!
  61. மண் சுமந்த படலம்!
  62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்!
  63. சமணரைக் கழுவேற்றிய படலம்!

 64.வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்!

மகா பெரியவாளின் சமையல் விளக்கம்

மகா பெரியவாளின் சமையல் விளக்கம் 




குழம்புக்கும் ,ரசத்திற்கும் என்ன வித்தியாசம்?

இரண்டிலுமே பருப்பு ,புளி ,உப்பு,சாம்பார் பொடி,பெருங்காயம் தானே சேர்க்கிறார்கள். 
 என்ற விவாதம் ஒரு சமயம் பெரியவாளின் முன் வைக்கப்பட்டது.அதற்கு நம் குருநாதராகிய மகா பெரியவா அருமையான பதிலை கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

அங்கிருந்த பக்தர்கள் "சாம்பாரை முதலிலும்,ரசத்தை பிறகும் சாப்பிடுவதாக தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

இதைக் கேட்டு மகான் பெரிதாக சிரித்தார்.

தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்றுவிட்டதால்,நாம் குழம்பி போகிறோம்.அதாவது சாம்பாரை போல ....

இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல.இவைகளை மறக்கக்கூடாது என்பதற்காகதான் தினமும் குழம்பு,ரசம் வைக்கிறோம்.

விருந்தில் முதலில் குழம்பு,ரசம்,பாயசம்,மோர் என வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா?இந்த உணவு கலாச்சாரம் வேறு எங்கேயும்  இல்லை.மனிதன் பிறக்கும்போதே அவன் மனதில் "தான்" என்ற அகங்காரம் இடம் பிடித்து வருகிறது.அவன் பலவிதமான குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது.

இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் குழம்பு  எடுத்து காட்டுகிறது.அது தெளிந்து விட்டால் ரசம் போல் ஆகி விடுகிறது.

இவற்றை தொடர்வது இனிமை,ஆனந்தம்.அவைதான் பாயசம்,மோர் ,பட்சணம்.

இதைப்போல் மனிதனின் வாழ்க்கைக்கும்,சாப்பிடும் சாப்பாட்டிற்கும்  பலவித ஒற்றுமை உண்டு.மோர் தனித்தன்மை வாய்ந்தது.பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது.

பாலிலிருந்து தயிர்,வெண்ணெய்,நெய்,மோர் என்று தொடராக பொருட்கள் நமக்கு கிடைக்கின்றன.மோர்தான் கடைசி நிலை.அதிலிருந்து எதையும் பிரித்து எடுக்க முடியாது.அதனால்தான் பரமாத்மாவைக் கலந்தபின்,மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது.

நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டை இதுபோல் யாரும் சொன்னதே இல்லை.  

ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கரா 
நடமாடும் தெய்வம் பாதம் சரணம் 













சனி, 23 ஜூலை, 2016

கருட பஞ்சமி

கருட பஞ்சமி 

ஆவணி மாதம் வார்பிறை சதுர்த்தியில் நாக சதுர்த்தியும்,மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகிறது.

இந்த இரு பண்டிகைகளும் சகோதரர்களின் செளபாக்கியத்திற்காக வேண்டி சகோதரிகள் கொண்டாடும் பண்டிகையாகும். 

பிரம்மதேவன் மகன் கஷ்யபன்.கஷ்யபருக்கு அநேக பத்தினிமார்கள் உண்டு.அவர்களுள் கத்ரு,வினதை என்ற இரு சகோதரிகளும் அவரது பத்தினிகள் ஆவர்.

கத்ரு நாகர்களுக்கு தாயாகவும்,வினதை அருணைக்கும்,கருடனுக்கும் தாயாக விளங்கினார்கள்.

ஒருமுறை,இந்த இரு சகோதரிகளிடையே விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து முடிந்தது.அந்த போட்டியில், இருவரும் ஜெயித்தவர்களுக்கு தோற்றவள் அடிமையாக வேண்டும் என்ற நிபந்தனையை வகுத்து கொண்டனர்.

போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்றாள்.நிபந்தனைப்படி அவள்,கத்ருவிற்கு அடிமையானாள்.கத்ரு அடிமையானதால் அவள் பெற்ற அருணனும்,கருடனும் அடிமையாயினர்.

கருடன்,கத்ருவிற்கும் அவனது பிள்ளைகளுக்கும் வாகனம் போல் ஆனான்.இதனால் கருடன் மனம் வருந்தினான்.எப்படியும் தனது தாயை அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்ற சபதம் கொண்டான்.

அதுசமயம் கத்ரு,கருடனிடம்,தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டு வந்துகொடுத்தால்,அடிமைத் தளத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை அளிப்பதாகச் சொன்னாள்.

கருடன் மனமகிழ்ச்சிக் கொண்டான்.அடிமைத்தளத்திலிலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று தனக்குள் மகிழ்ச்சி கொண்டான்.அன்னையை நமஸ்கரித்து,தேவலோகம் சென்றான்.

தேவலோகத்தில்,தேவர்களுக்கும்,கருடனுக்கும் கடும்போர் மூண்டது.
இறுதியில் கருடன் வெற்றி பெற்றான்.கருடன் தேவேந்திரனை நமஸ்கரித்து,தோத்திரம் செய்து,தேவேந்திரனிடமிருந்து,அமிர்த கலசத்தைப் பெற்றுக் கொண்டு வந்தான்.

கருடன் அமிர்த கலசத்தை கொண்டு வந்து கத்ருவிடம் கொடுத்தான்.அன்னைக்கும்,தனக்கும்,அருணனுக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி ஆனந்த வாழ்வு ஏற்படச் செய்தான் கருடன்.

அந்த கருடன் பிறந்தது பஞ்சமி திதியில்தான்.அதனால் கருட பஞ்சமி என்று பெயர் ஏற்பட்டது.


கருடன் மகா விஷ்ணுவிற்கு வாகனமானது எவ்வாறு? 



யாருக்கும் அஞ்சாதவன் கருடன்.கருடன் தேவேந்திரனிடமிருந்து அமிர்தத்தை எடுத்துவரும் போது தேவர்களால் தடுக்க முடியவில்லை.இவரின் வீரத்தை கண்டு மகிழ்ந்த திருமால்",உனக்கு என்ன வரம் வேண்டும் ?"

என்று கருடனிடம் கேட்டார்.அவரோ பரந்தாமனைப் பார்த்து,நானே உனக்கு வரம் தருகிறேன்;என்ன வரம் வேண்டும்?என்று திருப்பி கேட்டார்.

புன்னகைத்த திருமால்,'நான் எப்போதும் உன் தோளுக்கு மேல் இருக்க வேண்டும் என்று கேட்டார் .அவ்வாறே ஆகட்டும்' என்கிறார் கருடன். பிறகு திருமால் கருடனிடம்,நீ வரம் ஏதும் கேட்கவில்லையே?என்று வினவ,நான் உமது தலைக்கு மேல் இருக்க வேண்டும் என்று கேட்க,திருமாலும் அருளினார்.அதனால்தான், திருமால்  கருடனின் தோளில்  அமர்ந்து,தான் செல்லும் இடங்களுக்கு தம்மை அழைத்து  செல்லும் வாகனமாக ஏற்றுக் கொண்டார்.

கருடனை  தன் கொடியாக ஏற்று, தன் தலைக்குமேல் பறக்கும் கொடியாக கருடனை இருக்க செய்தார்.இதனால்தான் நாம் திருக்கோவில்களில் பார்க்கும் கொடி  மரத்தின் தத்துவம் ஆகும்

கருடன் வானத்தில் வட்டமிடுவதும்,கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.கோவில்களில் கும்பாபிஷேகம்,யாகம்,சிறப்பு வழிபாடு நடக்கும் போது கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை காணலாம்.

கருட தரிசனம் சுப தரிசனம்.

தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து மீட்ட நாள் நாகபஞ்சமி என்பதால் கருடனை பூஜிப்பது விஷேசம்.கருட பஞ்சமி அன்று வீட்டிற்கு சகோதரரை அழைத்து சாப்பாடு போட்டு பணமோ,துணியோ வைத்து தாம்பூலம் கொடுத்து ஆசி பெற வேண்டும்.




























  


வியாழன், 21 ஜூலை, 2016

தோஷங்கள் விலக நாக சதுர்த்தி

தோஷங்கள் விலக நாக சதுர்த்தி

 ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் பெண்கள் விரதமிருந்து நாக தெய்வத்தை வழிபடுவது நாக சதுர்த்தி விரதமாகும்.

சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணமாகவும்,மகா கணபதியின் திருவயிற்றை சுற்றியும்,மஹா விஷ்ணுவிற்கு படுக்கையாகவும் பாம்பே இருக்கிறது.

கருடனை வாகனமாக கொண்ட விஷ்ணுவுக்கு நின்றால்  குடையாகவும், அமர்ந்தால் சிம்மாசனமாகவும்,படுத்தால்  படுக்கையாகவும் இருப்பது நாகம்தான். 
மாரியம்மனிடம் பாம்பு வந்து அருள்புரிவதாகவும்,புற்றை உறைவிடமாக கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிவதாக நம்பப்படுகிறது.சக்தியின் வடிவமாக நாகங்கள் போற்றப்படுகின்றன.

தெரிந்தோ,தெரியாமலோ இப்பிறவியிலோ அல்லது முப்பிறவியிலோ நாகத்திற்கு தீங்கு விளைவித்திருந்தால் அது நாகதோஷமாக நம் பரம்பரையையே ஆட்டி வைக்கும்.  நாக தோஷம் உள்ளவர்களுக்கு  குழந்தை இல்லாமை,குடும்ப ஒற்றுமையின்மை,ஊனமான குழந்தை,அடிக்கடி நோயின் தாக்கம்,குடும்பத்தில் பிரிவு போன்ற பலவும் ஏற்படுகிறது.

நாக பாம்பு கடித்து இறந்துபோன சகோதரர்களுக்காக சகோதரியானவள்,நாகராஜனுக்குப் பூஜை செய்து சகோதரர்களை உயிர்பெற்று எழச் செய்தாள்  என்று புராணங்களில் கூறப்படுகிறது.



நாகதோஷம்  நீங்க செய்ய வேண்டியவை 


செய்வாய்,வெள்ளி ,ஞாயிற்றுக் கிழமைகளில் பாம்பு புற்றுக்கு  பால் ஊற்றுவது,நாக பூஜை செய்வது,நாகம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் நாகசிலைகளுக்கு அபிஷேக ஆராதனை செய்வது நாக தோஷத்தை குறைக்கும்.

அரசமரம் அல்லது வேப்பமரம் மரத்திற்கு அடியில் வைத்து வணங்கப்படும் நாகங்களுக்கு எண்ணெய்  தடவி பால் அபிஷேகம் செய்து மஞ்சள் பூசி,குங்குமம் ,சந்தனம் இட்டு வெற்றிலை,பாக்கு ,சர்க்கரை பொங்கல் போன்றவை நைவேதியமாக வைத்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபடுதல் வேண்டும்.

ராகு,கேது நாகதோஷம் 

நாகத்தின் வடிவமான ராகு,கேது  கிரகங்களுக்கு செவ்வாய்,சனி கிழமைகளில் பச்சரிசி மாவால் கோலம் போட்டு விளக்கேற்றி ,ராகு கேது உரிய நாமாவளிகளை சொல்லி மலரால் அர்ச்சித்து வழிபட நாகதோஷம் விலகும்.விருப்பம் ஈடேறும். 


திருமணமாகாதவர்கள் ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபம் ஏற்றி ,11வாரங்கள் தொடர்ந்து வழிபாடு செய்தால் 12வது  வாரம் குங்குமத்தால் அர்ச்சனை செய்தால் தோஷங்கள் நீங்கி திருமணம் நடக்கும். 

ஆடி வெள்ளிக்கிழமைகளில் நாகப்புற்றில் பால் ஊற்றுவது நலம் பயக்கும்.


ராகு,கேது தலங்களான காளஹஸ்தி ,திருநாகேஸ்வரம் போன்றவைகளுக்கு சென்று வழிபடுவது 
தோஷங்கள் விலகி பெருவாழ்வு வாழ வழிவகுக்கும்.


ஆதிசேஷன் காயத்திரி மந்திரம்

ஓம் சஹஸ்ர சீர்ஷாய வித்மஹேவிஷ்ணு தல்பாய தீமஹிதன்னோ சேஷ ப்ரசோதயாத்


ஓம் சர்பராஜாய வித்மஹேபத்ம ஹஸ்தாய தீமஹிதன்னோ வாசுகி: ப்ரசோதயாத்


  




















புதன், 20 ஜூலை, 2016

வளம் தரும் அஷ்ட மங்கலங்கள்

வளம் தரும் அஷ்ட மங்கலங்கள் 

மங்கலம் என்றால் நல்ல அறிகுறி காட்டும் பொருட்கள் எனலாம்.

அஷ்ட மங்கலங்கள் என்பன எட்டு திசைகளிலும் இருந்து சிவபெருமானின் மேன்மையை போற்றி அளிக்கப்பட்ட பொருட்களாகும்.

இந்துக்கள் பூரணகும்பம்,ஸ்வஸ்திகம்,வட்டக்கண்ணாடி,தீபம்,குங்குமச்சிமிழ்,சந்தனக்கிண்ணம்,சங்கு மற்றும் தாம்பூலம் போன்றவற்றை மங்கல பொருட்களாக கருதுகின்றன.திருமண விழா,பூப்புனித நீராட்டு விழா,புதுமனை புகுவிழா போன்ற   இடங்களில் மங்கல பொருட்களை வைத்து சிறப்பாக விழாக்களை நடத்துவது இந்துக்களின் வழக்கம்.

பூரண கும்பம்

 மகா லக்ஷ்மி தேவியின் வடிவம் பூரண கும்பம்.கும்பத்தில் நீரை நிரப்பி தேவியை அதில் ஆவாகரணம்  செய்து வழிபடுவதே சிறந்தது.மழைக்கு  அதிபதியாக விளங்கும் வர்ண பகவான் நீர் வடிவத்தில் கும்பத்துக்குள்ளிருந்து இல்லத்தின் தூய்மையை காக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ஸ்வஸ்திக் 


உலகில் அனைவருக்கும்  இன்ப,துன்பங்கள்  சுழற்சியாக வரும் என்று கூறும் வடிவம் இது.துன்பங்களை விலக்கி  விடும் சக்தி வடிவம். 

வட்டக்கண்ணாடி 


நம் முகத்தை நாமே காண்பதால் ஒரு உத்வேகம் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் கண்ணாடி மங்கலப்  பொருட்களாக கருதப்படுகிறது.

தீபம் 


பூஜை அறையில் அதிகாலை 4.30  மணி முதல் 6மணி வரை பிரம்ம மூர்த்தம் எனப்படும் இவ்வேளையில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.வீட்டில் திருமகள் நிலைத்திருக்க தீப வழிபாடு ஏற்றது.

முன்னொரு காலத்தில் இறைவனை ஒளியாக எண்ணி,தீபம் ஏற்றி வழிபட்டனர்.நம் முன்னோர்கள் வகுத்த வழியில் நாமும் செல்வதே இறைவனை அடையும் வழியாகும்.

குங்குமச் சிமிழ் 







பெண்கள் திலகமாக வைக்கும் தெய்வீகக் குங்குமத்தைத் தாங்குகிற பேழை இது.இல்லத்திற்கு வரும் சுமங்கலிகளை வரவேற்க குங்குமச்சிமிழ் பயன்படுகிறது.அனைவரையும் தம்பால் ஈர்க்கும்  தன்மையுள்ளது.

சந்தனக்கிண்ணம்


பழங்காலத்தில் "சந்தனப் பேலா "என்ற பெயரில் சந்தனத்தை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் சந்தனக்கிண்ணம் .

திருமணத்திற்கு  வருபவர்களை வரவேற்க்கும் விதமாக சந்தனக் கிண்ணத்தில் சந்தனத்தை வைத்து இருப்பர்.நாராயணின் தர்மபத்தினி மகாலட்சுமி வாசம் செய்வதும் சந்தனத்தில்தான்.வீட்டு பூஜைகளிலும்,விழா மேடைகளிலும் சந்தனம் மங்கல பொருளாக விளங்குகிறது.

சங்கு 


வலம்புரி,இடம்புரி என இருவகையான சங்குகள் உள்ளன.வலம்புரி சங்கு வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்குவர்.


புதிய வீடுகள் கட்டும்போது நிலைவாசலில் சங்கு ஸ்தானம் என்ற விதிப்படி பூஜை செய்து பதிப்பார்கள்.இதனால் குபேர சம்பத்து கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தாம்பூலம் 

வெற்றிலையும்,பாக்கும் சேர்த்து வைப்பது தாம்பூலம் என்பர்.மகாலட்சுமிக்கு விருப்பமான பொருள்.வெற்றிலை நுனியில் லட்சுமியும்,நடுவில் சரஸ்வதியும்,காம்பில் பார்வதி தேவியும் உள்ளனர்.

அம்பாளுக்கு தாம்பூல நெய்வேத்தியம் செய்வது நல்லது.எந்த பூஜையானாலும் தாம்பூலப் பொருட்கள் வைத்து பூஜை செய்தால்தான் அந்த பூஜை நிவர்த்தி அடையும்.

அஷ்ட மங்கல பொருட்களை வீட்டில் வைத்து,செளபாக்கிய லக்ஷ்மி பூஜை செய்து வந்தால் இல்லத்தில் துர்சக்திகள் விலகி நல்லதே நடக்கும் என்று சமய நூல்கள் கூறுகின்றன. 







   

செவ்வாய், 19 ஜூலை, 2016

ஆனித் திருமஞ்சனம்

ஆனித் திருமஞ்சனம் 


ஆனி மாதம் பெளர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்பொழுது,ஆனித் திருமஞ்சனம் கொண்டாடப்படுகிறது.


 அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, ஆடல் நாயகனை அலங்காரத்துடன் அவருடைய நடனத்தை காணும் திருநாள்.

சிவலிங்கத்திற்கு அன்றாடம் அபிஷேகம் உண்டு.ஆனால் இந்த திருமஞ்சனம் விசேஷமானது. 

சிவபெருமானின் நடனம் காண தேவர்களும்,முனிவர்களும் தவம் இருந்தார்கள்.விஷ்ணு பகவானும்,சிவபெருமானின் நடனத்தை காண விரும்பினார்.
"சிவ-சக்தி ஒன்றே" என்று பிருங்கிமுனிவருக்கு சிவபெருமான் சொன்னார்.அதை கேளாமல் இருந்த பிருங்கி முனிவர்,பராசக்தியின் கோபத்திற்கு ஆளாகி தன்  சக்தியை இழந்தார்.


சிவலிங்கத்தை தரிசித்தால் அம்பிகையையும் தரிசிக்க வேண்டும்.ஆனால் நடராஜரை தரிசித்தால் அம்பிகையையும் தரிசித்தது போன்றது என்கிறது சாஸ்திரம்.காரணம்,நடராஜரின் இடதுபாகம் சக்திதேவியின் பாகம்.அதனால் நடராஜரை தரிசிக்கும் போது,அவரது இடதுகாலையும் தரிசித்து வணங்கினால் சிவ-சக்தியின் அருளாசி முழுமையாக கிடைக்கும்.


மார்க்கண்டேயரை காப்பாற்ற எமனை அந்த இடது கால்தான்   உதைத்தது என்கிறது புராணம்.

நடராஜரின் வலதுபாகம் பக்தர்களின் வாழ்வில் வளங்களை சேர்க்கும்.இடதுபாகம் சக்திதேவியின் பாகமானதால்  பக்தர்கள் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும்.

சிவபெருமானின் நடனத்தை காண கண் கோடி  வேண்டும்.அத்தனை சிறப்புமிக்க நடனம் அது.ஆனி திருமஞ்சனத்தில் சிவபெருமானின் அபிஷேகத்தையும்,நடனத்தையும் தரிசித்து வழிபடுவது சிறந்தது.ஆனி திருமஞ்சனத்தில் நடராஜரைக் கண்டு தரிசித்தல் பல நன்மைகளைக் கொடுக்கும்.

சிவ-சக்தியின் பேரருள் கிடைத்து,கஷடங்கள் அனைத்தும் நீங்கி,ஏற்றங்களையும்,நல்ல மாற்றங்களையும் பெற்று வளமோடும்,நலமோடும் வாழ்வாங்கு வாழ உமா மகேஸ்வரன் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

                           
 "ஓம் நம சிவாய "
தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 

                               திருச்சிற்றம்பலம் 
நன்றி வணக்கம் 
ஈஸ்வரி