வெள்ளி, 28 அக்டோபர், 2016

தீபாவளி பண்டிகையின் கதையும்,கொண்டாடும் விதமும்

தீபாவளி பண்டிகையின் கதையும்,கொண்டாடும் விதமும் 

 

என் இனிய ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .இந்துக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை மிகச்சிறப்பாக வருடம் தோறும் 

கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.ஏழை ,பணக்காரர்,சிறியவர்,முதியவர் அனைவரும் கொண்டாடி மகிழக்கூடிய நாள்தான் தீபாவளி .

தீபங்களின் வரிசை தீபாவளி ஆகும்.


ஐப்பசி மாதம் (அக்டோபர்-நவம்பரில்)தீபாவளி பண்டிகை வருகிறது.


தீபாவளி என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடிக்கச் செய்தும், தீபங்களாக ஒளிரச் செய்தும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி 

விஷ்ணு அவதாரமான கிருஷ்ணர், கொடிய நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் நாளே தீபாவளி ஆகும்.


பிரக்யோதிஷ்பூர் என்ற பகுதியின் மன்னனாக இருந்த நரகாசுரன், பொதுமக்களுக்கும், தேவர்களுக்கும் எண்ணற்ற தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.
பூதேவியின் மகனான நரகாசுரன், பிரம்மாவை வேண்டி கடும் தவம் இருந்து, தனது தாயைத் தவிர வேறு யார் கையாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றவன்.தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற மமதையில் அனைவரையும் கொடுமைப்படுத்தி வந்தான்.

நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், தேவர்களும், கடவுள்களும் கிருஷ்ணரைச் சந்தித்து முறையிட்டனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
நரகாசுரனை ஒழிக்க கிருஷ்ணரே நேரடியாக களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் பற்றி அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி பூதேவியின் மறுஉருவமான சத்யபாமாவை அழைத்துச் சென்றார்.
நரகாசுரனுக்கும், கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற போரின் போது, நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணர் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனை குறிவைத்து ஏவுகிறார். நரகாசுகரன் வீழ்கிறான்.
  நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். 
அந்த நாளே தீபாவளியாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்படுகிறது.


இராவணனை வீழ்த்தி அயோத்திக்கு ராமர், சீதையுடன் திரும்பிய நாளாகவும் தீபாவளி குறித்து ம‌ற்றொரு புராண‌க் கதை கூறப்படுகிறது.

தீப ஒளி திருநாள்


ராவணசம்ஹாரம் முடிந்து சீதாதேவியுடன் ஜயராமனாக அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமன். அப்போது அதிகாலை மூன்று மணி. பதினான்கு ஆண்டுகளாக ஸ்ரீராமரை தரிசிக்காத அயோத்தி மக்கள், அந்த இரவில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, ராமரைத் தரிசித்து வரவேற்று மகிழ்ந்தனர். ஸ்ரீராமபிரான், சீதாப்பிராட்டியுடன் அரண்மனைக்குள் நுழைந்தார். அப்போது கௌசல்யாதேவி விளக்கேற்ற வந்த திருமகளே.. சீதா ! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்துவிட்டது. நீ தீபஒளி ஏற்று. அந்தகாரம் விலகி அருள் பரவட்டும் என்றாள். உடனே, தீபங்களை ஏற்றிவைத்து வழிபாடு செய்தாள் சீதை. இந்த நன்னாளே தீபாவளித் திருநாள் !


தீபாவளி பண்டிகை கொண்டாடும் விதம் 

தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீரை கொதிக்க வைத்து விடுகிறோம். தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் தனிச்சிறப்பு இருக்கிறது. அன்றைய தினத்தில் நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையைக் கண்டால் அபசகுனம் என்பதை நாம் சொல்வோம். ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும். அதுபோல நம் வீட்டிலிருக்கும் சுத்தமான நீரில் கங்கை தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறாள். அதனால் கங்கையில் குளித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். இதனால்தான் தீபாவளி குளியலை கங்கா ஸ்நானம் என்றே சொல்கிறார்கள்.


தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும்குங்குமத்தில் கௌரியும்சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள்ஏரிகள்குளங்கள்கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். முற்றும் துறந்த துறவிகளுக்கும் கூட அன்று எண்ணெய் குளியல் உண்டு. கங்கா ஸ்நானத்தால் நம் பாவங்கள் நீங்குகின்றன. 




அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் உப்பு


தீபாவளியன்று பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் கடாட்சம் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. எண்ணெய்-லட்சுமி; சிகைக்காய் - சரஸ்வதி; சந்தனம் - பூமாதேவி; குங்குமம் - கௌரி; தண்ணீர் - கங்கை; இனிப்புப் பலகாரம் - அமிர்தம்; நெருப்புப் பொறி - ஜீவாத்மா; புத்தாடை - மகாவிஷ்ணு; லேகியம் - தன்வந்தரி. தீபாவளியன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதிகம். 



தீபாவளிக்கு இரண்டு அல்லது மூன்று நாள் முன்னதாக, ஒரு காரம், ஒரு இனிப்பு செய்து வைத்துக் கொள்ளலாம்.செய்த பலகாரங்களில் 3/5/7/9/12 என்ற எண்ணிக்கையில் பாத்திரங்களில் எடுத்து, விளக்கு முன்னால் பூஜையறையில் வைக்கவும்.

வீட்டில் அனைவருக்கும் எடுத்திருக்கும் புதுத் துணிகளில் மஞ்சள்/குங்குமம் தடவி, விளக்கு முன்னால் ஒரு பேப்பரை விரித்து, அதன் மேல் அடுக்கி வைக்கவும்.

வீட்டுத் தலைவிக்கு எடுத்திருக்கும் புதுப் புடவை/புத்தாடையை எல்லா உடைகளுக்கும் மேலாக வைக்கவும்.

பூஜையறையை சுத்தப்படுத்தி, படங்களுக்கும் விளக்குக்கும் சந்தனம் குங்குமம் வைத்து, முதலிலேயே தயார் படுத்திக் கொள்ளவும்.

ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்.

பிள்ளையார், குலதெய்வம், இஷ்ட தெய்வம், அதிர்ஷ்ட தெய்வங்களை நினைத்து வணங்கி, சூடம் ஏற்றி ,  தீபாராதனை காட்டி, நைவேத்தியம் செய்யவும்.

அவரவருக்கு உண்டான புது உடைகளை வீட்டுத் தலைவரிடம் ஆசி பெற்று, வாங்கி, உடுத்திக் கொள்ளவும்.

புதுத் துணி உடுத்திக் கொண்ட பின், வீட்டுப் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி, ஆசி பெற்று, பணம் /பரிசு பெற்றுக் கொள்ளவும்.

அக்கம்பக்கம்/உறவினர்/நண்பர்கள் வீடுகளுக்கு பலகாரம் கொடுக்கவும்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பட்சணம்/பலகாரம் சாப்பிட்டதும், கோவிலுக்கு அனைவரும் சென்று வரலாம்.

வரவிருக்கும் தீபத்திருநாளை அனைவரும் சேர்ந்து சந்தோசமாக கொண்டாடுவதுடன் ஏழை  ,எளிய மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து,தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.












\

செவ்வாய், 25 அக்டோபர், 2016

முயலாக மாறிய மங்கண முனிவர்


முயலாக மாறிய மங்கண முனிவர்


சிவபெருமானின் மீது அதீத பக்தி கொண்டவர் மங்கண முனிவர். இவர் அனுதினமும் இறைவனை அழகிய மலர்களைக் கொண்டு அலங்கரித்து வழிபடுவது வழக்கம். இறைவழிபாட்டிற்காக, தினமும் அருகில் உள்ள காட்டிற்குச் சென்று, அழகிய மலர்களைப் பறித்து வருவார்.

அன்றைய தினமும் மலர்களைப் பறிப்பதற்காகக் காட்டிற்குள் சென்றார். அப்போது ஒரு இடத்தில் இனிமையான நறுமணம் வந்தது. நறுமணம் வந்த திசையை நோக்கிச் சென்ற அவர், ஒரு முட்செடிகளுக்கிடையில் பூத்திருந்த மலர்களில் இருந்து அந்த நறுமணம் வந்ததை அறிந்து கொண்டார்.

நறுமணம் மிகுந்த அந்த அழகிய மலர்களைப் பறித்துச் சென்று, சிவலிங்கத்தை அலங்கரிக்கலாம் என்று முடிவு செய்தார். அந்த மலர்களை பறித்த போது, அவரது கை, கால் மற்றும் உடலின் சில பகுதிகளில் முட்செடிகளில் இருந்த முட்கள் குத்தி காயப்படுத்தின. அதைப் பொருட்படுத்தாத முனிவர், இறை வழிபாட்டிற்காக மலர்களைப் பறிப்பதிலேயே குறியாக இருந்தார்.

அப்போது அவர் ஒரு ஆச்சரியத்தை உணர்ந்தார். முட்கள் குத்திய இடங்களில் இருந்து ரத்தம் வரவில்லை. மாறாக, நறுமணம் மிகுந்த வெந்நீர் கசிந்தது. முள் குத்திய இடங் களில் வலி இல்லாமல் போனது. இது அனைத்தும் இறைவன் செயல் என்று எண்ணியவர், மகிழ்ச்சியில் ஆடிப்பாடினார். துள்ளிக்குதித்தபடியே தன் இருப்பிடம் செல்லத் தொடங்கினார்.

சாபம்


பரவச நிலையில் இருந்த அவருக்கு எதிரில் இருந்த எதுவும் கண்களுக்குப் புலப்படவில்லை. வழியில் ஒரு மரத்தடியில், தூமாப்பர் என்ற முனிவர் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். அவரைக் கவனிக்காத மங்கண முனிவர், அவரை தன் கால்களால் மிதித்தபடி சென்றார்.

தன்னை மிதித்தது மட்டுமில்லாமல், அதற்கு எந்த வருத்தமும் தெரிவிக்காமல் மகிழ்ச்சியோடு, ஆடிப்பாடி செல்லும் மங்கண முனிவரைப் பார்த்து, தூமாப்பருக்கு கோபம் வந்தது. அவர், ‘என்னை மிதித்து அவமதித்ததுடன், என் தவத்தையும் கலைத்துச் செல்லும் மங்கண முனியே, நீ செய்தது தவறு என்று உனக்குத் தெரியவில்லையா?’ என்று சத்தம் போட்டார்.

ஆனால் இறைவனின் அற்புதத்தால் உற்சாகத்தில் இருந்த மங்கண முனிவருக்கு, தூமாப்பரின் வார்த்தைகள் எதுவும் காதில் விழவில்லை.

இதனால் தூமாப்ப முனிவருக்கு கோபம் அதிகரித்தது. ‘தவறு செய்தது தெரியாமல், அந்த தவறைச் சுட்டிக்காட்டி நான் எச்சரித்ததையும் கண்டுகொள்ளாமல் செல்லும் மங்கண முனியே, உன் இரண்டு கால்களும் முடமாகி போகட்டும். என் தவத்தைக் கலைத்த உன்னுடைய உருவம், தாவிச் செல்லும் முயலாக மாறித் துன்பம் அடையட்டும்’ என்று சாபமிட்டார்.

அவர் கொடுத்த சாபத்தால் மங்கண முனிவரின் கால்கள் முடமாகிப் போனது. அதன் பின்புதான், அவருக்குத் தான் செய்த தவறும், அதற்கு தூமாப்ப முனிவர் கொடுத்த சாபமும் தெரிய வந்தது. தன்னுடைய தவறுக்கு முனிவரிடம் வருத்தம் தெரிவிப்பதற் காக அவர் நொண்டியபடியே திரும்பி வந்தார்.

‘சுவாமி! இன்று எனது இறை வழிபாட்டுக்காக மலர் பறிக்கச் சென்ற போது, அங்கிருந்த முட்செடியின் முட்கள் என் உடலின் பல இடங்களில் குத்தியது. ஆனால் அந்த இடங்களில் ரத்தம் வராமல் நறுமணமான வாசனைத் திரவமே வந்தது. மேலும், முட்கள் குத்திய இடங்களில் எந்த வலியும் இல்லை. இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் செல்லும் போதுதான், என்னையும் அறியாமல் இந்தத் தவறு நிகழ்ந்து விட்டது. என்னை மன்னித்து, எனக்குத் தகுந்த சாப விமோசனம் தந்தருள வேண்டும்’ என்றார்.

அவருடைய அமைதியான வேண்டுதலில் மனமிரங்கிய தூமாப்ப முனிவர், ‘மங்கண முனிவரே! இறை வழிபாட்டிற்கு மலர் பறிக்கச் செல்லும்போது, அங்கிருக்கும் முட்செடிகள் எதுவும் குத்தி துன்பம் தராமலிருக்க, தனது கையும், கால்களும் புலிக்கால் போன்ற அமைப்பில் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிப் பெற்றார் வியாக்ரபாத முனிவர். அவ்வாறு அவர் வேண்டி வழிபட்ட சிவாலயத்திற்குச் சென்று வழிபடும் போது உம்முடைய இந்த சாபம் தீரும்’ என்று விமோசனத்திற்கான வழியைக் கூறினார்.

அதைக் கேட்ட மங்கண முனிவர் மகிழ்ச்சியடைந்து, தூமாப்பர் முனிவரை வணங்கினார். சிறிது நேரத்தில் மங்கண முனிவர் முயலாக மாறிப் போனார்.

விமோசனம்


முன்னங்கால்கள் இரண்டும் முடமாகி இருந்ததால், அந்த முயலால் தாவிக் குதித்து வேகமாக ஓட முடியவில்லை. தன்னுடைய இயலாமையை நினைத்து முயல் வருத்தமடைந்தது. காட்டுநாய் போன்ற விலங்குகளால் தனது உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று நினைத்துப் பயந்த முயல், மெதுவாகப் பதுங்கிப் பதுங்கிச் செடி கொடிகளின் மறைவிலேயேச் சென்று கொண்டிருந்தது.

அதனால், முயலின் உடல் முழுவதும் முட்செடிகளிலிருந்த முட்கள் குத்தி காயங்கள் ஏற்பட்டன. தன்னுடைய உடலில் ஏற்பட்ட காயத்தின் வலியால் முயல் பெரும் துன்பமடைந்தது.

இப்படியே மிகுந்த துன்பத்துடன் சென்று கொண்டிருந்த முயல், ஒரு ஆண்டுக்குப் பிறகு, கன்னிமாவனம் எனும் காட்டிற்குள் நுழைந்தது. அந்தக் காட்டிற்குள் இருந்த சிவாலயத்தைக் கண்டதும், தான் மங்கண முனிவர் என்பதும், தூமாப்பர் முனிவர் கொடுத்த சாபத்தால் முயல் உருவத்திற்கு மாறியிருப்பதும், அதன் நினைவுக்கு வந்தது.

உடனே அந்த முயல் சிவாலயத்துக்குள் சென்று, அங்கிருந்த சிவலிங்கத்தின் முன்பாக நின்று, தனக்குச் சாப விமோசனம் அளிக்க வேண்டி வழிபட்டது. பின்னர் சில முறை சிவலிங்கத்தைச் சுற்றி வந்து, இறைவனை வேண்டியபடியே சிவலிங்கம் முன்பாக களைப்பில் படுத்து விட்டது.

முயலின் நிலை கண்டு இரங்கிய ஈசன், ‘தூமாப்பர் முனிவரால் சாபம் பெற்ற நீ, முயல் உருவில் இருந்து சுய உருவம் பெற்று எழுக’ என்றார். அந்தக் குரல் முயலின் காதிலும் ஒலித்தது. உடனடியாக முயல் உருவில் இருந்த மங்கண முனிவர் விமோசனம் பெற்று எழுந்தார். இறைவனைத் தேடினார். இறைவனின் உருவம் அவரது கண்களுக்குத் தெரிய வில்லை. எனவே தன் எதிரில் இருந்த சிவலிங்கத்தை வணங்கினார்.

பின்னர், ‘இறைவா! எனக்குத் தாங்கள் நேரடியாக காட்சியளிக்காவிட்டாலும், எனக்குச் சாப விமோசனம் கிடைக்கத் துணை நின்றதில் மகிழ்ச்சி. தாங்கள் இங்கு வந்து வழிபடும் அனைவருக்கும், அவர்களின் துன்பங்களை நீக்கி அருள வேண்டும்’ என்று வேண்டினார்.

இறைவனும், ‘முனிவரே! நீ வேண்டியபடி நான் இந்த தலத்தில் ‘தோன்றாத் துணைநாதர்’ என்னும் பெயரில் வீற்றிருந்து, இங்கு வரும் அன்பர்களின் துன்பங்களை நீக்கி, வாழ்வில் வளம் பெருகச் செய்வேன்’ என்று அருளினார்.

வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் சிறிய மகிழ்ச்சியில், பலரும் தங்களை மறந்து போய் விடுகின்றனர். இந்தநிலையில், தங்களை அறியாமல் அவர்கள் செய்யும் தவறுக்கும், தகுந்த தண்டனை உண்டு என்பதையே மங்கண முனிவர் பெற்ற சாபமும், விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன. 

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

நவபாஷாணம்

நவபாஷாணம்


"நவம்" என்றால் ஒன்பது ஆகும். "பாஷாணம்" என்றால் விஷம் என்று பொருள்." நவ பாஷாணம்"என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள்  முறைப்படி கட்டுவதாகும்.

 


பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு.நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..,

1.சாதிலிங்கம்.2.மனோசிலை3.காந்தம்4.காரம்5.கந்தகம்6.பூரம்7.வெள்ளை பாஷாணம்8.கௌரி பாஷாணம்9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான  விஷயமாகும்.நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.


தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில்,கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,குழந்தை வேலப்பர் கோயில்.மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது,இதில் இரண்டு போகர் உருவாக்கியவை.
தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை? என தெரியவில்லை.


நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.



வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற மங்களகரமான நிறங்கள் :

வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற மங்களகரமான நிறங்கள் :





வாரத்தில் ஒவ்வொரு நாளும் சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளினை அடிப்படையாகக் கொண்டது .இந்த கோள்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதோடு நம்முடைய வாழ்வை பல்வேறு விதமாக பாதிக்கக்கூடியவையும் கூட.
ஒவ்வொரு கோளும் தனக்கே உரிய வண்ணத்தையும் முன்னிறுத்துவதாக உள்ளது.
அதேப்போல் ஒவ்வொரு நாளுக்கும் உரிய வண்ணமும் உண்டு. இந்து மதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் ஒரு கடவுளுக்குரியதாகக் கருதப்படுகிறது.

எனவே, அந்தந்த நாளுக்குரிய வண்ணத்தை அணிந்து அந்தந்த கோளின் நல்ல பலன்களை அடைந்து அந்த நாளை சிறப்பானதாக்குங்கள்.

திங்கள்: 

வெள்ளை நிறத்துடன் தொடர்புடையது திங்கள் சந்திரனைக் குறிக்கும் சொல் என்பதால் அதன் வெள்ளை நிறம் அனைத்திலும் சிறந்ததைக் குறிக்கிறது.

எனவே வெள்ளை நிற உடைகளை அணிவது நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.
இந்த உடைகள் வெள்ளை நிற நகைகள் அதாவது முத்து, வைரம் ஆகியவற்றினையும் குறிக்கும்.

செவ்வாய்: 

சிவப்பைச் சார்ந்த நிறங்களைக் குறிக்கும் சிவப்பு வண்ண உடைகளையும், சிவப்புக்கல் அல்லது பவளம் ஆகிய நகைகளையும் அணியுங்கள்

புதன்: 

பசுமையைக் குறிக்கும் புதன்கிழமையில் பச்சை நிறம் முக்கியத்துவம் பெறுகிறது. பச்சை நிற உடைகள், மரகதம் உள்ளிட்ட பச்சை நிறக் கற்கள் ஆகியவற்றை அணியலாம்.

வியாழன்:

மஞ்சள் வியாழக்கிழமைகளில் மஞ்சள் நகைகள் மற்றும் தங்க நிற உடைகளை அணிவது மங்களகரமாக இருக்கும்.

வெள்ளிக்கிழமை: 

இளம்சிவப்பு (பிங்க்) வெள்ளிக்கிழமைகளில் இளம்சிவப்பு நிறத்தை தேர்வு செய்யுங்கள்.இந்த பிங்க் நிறத்தில் உடைகள், மாணிக்கம் உள்ளிட்ட சிவப்பு நிறக்கற்களை கொண்ட நகைகள் ஆகியவற்றை அணியலாம்

சனிக்கிழமை: 

கருப்பு சனிக்கிழமை கருப்பு நிறம் சிறந்தது.அதேப்போல் நீலம், ஊதா மற்றும் வாடாமல்லி நிறங்களையும் அணியலாம்.நீலக்கல் உள்ளிட்ட இந்த நிறங்களை ஒத்த கற்களைக் கொண்ட நகைகளையும் அணியலாம்.

ஞாயிற்றுக்கிழமை: 

சூரியனுக்குரிய நிறங்கள் இந்த நாளில் சூரியனை ஒத்த நிறங்கள் சிறந்தவை. மஞ்சள் நிறம் எதிரிகளை விலக்க வல்லது மற்றும் உடனடியாக பலன் தர வல்லது.விஷம் உள்ளிட்ட ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கவல்லது. எனவே அன்று ஆரஞ்சு நிற உடைகள் மற்றும் நகைகளை அணிவது பொருத்தமானதாக இருக்கும்.

சனி, 22 அக்டோபர், 2016

வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம் ?

வீட்டில் எந்தெந்த  தெய்வங்களை  வைத்து வணங்கலாம் ?

பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது. உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக்கூடியதாகும். இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும். அவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இல்லையேல் நமது வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும்.


வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள் / தெய்வங்கள் / தேவதைகள்:-

அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும். குல தெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும். குல தெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை. குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது.

அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும். நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே. குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே.

எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழு முதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம். காரியசித்தி உண்டாக்குபவர் இவரே. விக்கினங்களையும், வினைகளை களைபவரும் இவரே. நல்வழி காட்டுபவரும் இவரே.

குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும். குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். நல்ல குழந்தைகள் பிறக்கும். பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல்லை.
மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும். திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும். இல்லறம் நல்லறமாக நடக்கும்.

அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும். தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.


சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சிவசக்தி கலப்பே உலகம். சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை. சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம். எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.

குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.

ராதையுடன்  இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும். இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு, பாசம், காதல், நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும். தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.



ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.

லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் திருமகளின் அருள் கிட்டும். நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.


 

ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று. இதனால் அறிவும், ஞாபக சக்தியும் உண்டாகும். கல்வி ஞானம் கிட்டும். ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே. கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிட்டும்.

கலைமகளான சரஸ்வதி  படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும். நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.

லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். குபேரனுக்கு அருள் பாலிக்கும் லட்சுமி படமும், லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள் பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை. இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும். மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.

சாந்த சொரூபமான துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும். கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். வியாபாரம் பெருகும்.

அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது. இதன் மூலம் வறுமை அகலும். பசி, பட்டினி, பஞ்சம் தீரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.

சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் குருவருள் வந்து சேரும். தோஷங்கள் விலகும். கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும். வளமான, நிம்மதியான வாழ்க்கை கிட்டும்.

எனக்கு  தெரிந்த, அறிந்த விஷயங்களை இந்த பதிவில் எழுதியுள்ளேன். இதனை படிக்கும் ஆன்மீக அன்பர்கள் தங்கள் கருத்துரையை தெரிவித்தால் இப்பதிவினை மேலும் மேம்படுத்த உதவும். 


நன்றி…!



புதன், 19 அக்டோபர், 2016

ஷீரடி சாய்பாபா வழிபாட்டு முறைகள்

ஷீரடி சாய்பாபா  வழிபாட்டு முறைகள் 

சாய் சத்யவிரத பூஜை என்று ஒன்று உண்டு. இந்த பூஜையில் சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம். பாபாவிற்குப் பிடித்த செண்பகப்பூ சாத்தி நவவித பக்தியாலும் அவரை ஆராதிக்கலாம்.
 


 


 


பாபாவின் வழிபாட்டு முறையில் ஒன்று, சர்க்கரையில் அக்கறை இல்லா லீலை. ஒரு வியாழக்கிழமை சின்ன டப்பாவில் சர்க்கரையை எடுத்து வைக்க வேண்டும். 21 நாட்களுக்கு எந்த இனிப்பையும் எந்த வகையிலும் சாப்பிடக் கூடாது. எந்நேரமும் பாபாவை மனதார துதித்தபடி இருக்க வேண்டும். மிகச் சரியாக 21ம் நாள் நாம் எதிர்பார்க்கிற இனிப்பான செய்தி நம்மைத் தேடி வரும்.  










































 
 

 கல்கண்டு நைவேத்யம் செய்து பரீட்சை எழுதும் மாணவ மாணவியருக்கு அதை பிரசாதமாக அளித்தால், அவர்கள் தேர்வுகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். திருமணத் தடை உள்ளவர்கள் தாமரை மாலையை அவர்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று பாபாவிற்கு சாத்தி 108 நெல் பொரி உருண்டைகளை 108 எளியவர்களுக்கு தானமாக அளித்தால் பாபாவின் திருவருளால் அவர்களுக்கு உடனே திருமணம் நிச்சயமாகிறது.


 

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 11 மட்டைத் தேங்காய்களை எடுத்துக் கொண்டு பாபா ஆலயத்திற்குச் சென்று, அவற்றில் 10 தேங்காய்களை ‘துனி’ (அணையா நெருப்பு) முன் வைத்துப் பிரார்த்திக்க வேண்டும். மீதி ஒரு தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதிலிருந்து தமக்குத் தெரிந்த ஏதேனும் இனிப்பைச் செய்து பாபாவிற்கு நிவேதிக்க வேண்டும். பிறகு அதிலிருந்து சிறிதளவு பிரசாதமாக உண்டு, மீதியை தானம் செய்தால் அந்த நோயின் கடுமை நிச்சயம் குறைந்து விடும். நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய் உடையவர்கள் ஒரு வியாழக்கிழமையன்று துனி விரத பூஜையை ஆரம்பிக்கலாம்.


அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்

நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில் வழிபடக்கூடிய அமைப்பு அஷ்டலட்சுமி என்றழைக்கப்படுகிறது.

1.மஹாலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் (அனைத்து உயிர்களிலும்) ஸ்ரீலக்ஷ்மி உருவில் உள்ள ஸ்ரீமஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

2.வித்யா லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு வித்யா (புத்தி) ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். அந்த புத்தி உருவில் உறைபவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

3.ஸந்தான லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) ,எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் உள்ள ஸந்தான லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

4.காருண்யலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு காருண்ய ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) , எல்லா உயிரிங்களிலும் தயையுருவில் உள்ள காருண்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

5.சௌபாக்ய லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு துஷ்டி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) , எல்லா உயிரினங்களிலும் துஷ்டி (மகிழ்ச்சி) உருவில் உள்ள சௌபாக்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.



6.தனலக்ஷ்மி: 

யாதேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), புஷ்டி (நிறைவு / பலம் ) உருவத்தில் உள்ள தனலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

7.வீரலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு த்ருதி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), எல்லா உயிரினங்களிலும் தைர்ய உருவில் உள்ள வீரலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

8.தான்யலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு ஸூதா ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), எல்லா உயிரினங்களிலும் பசியை நீக்கும் தான்ய உருவில் உள்ள தான்ய லக்ஷ்மியை வணங்குகிறேன் . நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்



















செவ்வாய், 18 அக்டோபர், 2016

22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும் - இராமேஸ்வரம்

22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும் - இராமேஸ்வரம்




இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!



இராமேஸ்வரம் தலவரலாறு ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீக்க  ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு “ராம ஈஸ்வரம்” என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.


22தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்

1. மகாலெட்சுமிதீர்த்தம் :

இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸனானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.


2. சாவித்திரி தீர்த்தம், 3. காயத்ரி தீர்த்தம், 4. சரஸ்வதி தீர்த்தம் :

இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று தீர்த்தங்களில்  ஸ்நானம்  செய்வதால் மத சடங்குகளை விட்டவர், சந்ததியில்லாதவர் இஷ்டசித்தி அடையலாம்.


5. சேது மாதவ தீர்த்தம் : 

இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் ஸ்ரீராம பிரானால் சகல லெட்சுமி காடாட்சமும்,சித்த சக்தியும்   பெறலாம்.


6. நள தீர்த்தம் : 

மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் கடவுளின் அனுக்கிரகம் பெற்று, சொர்க்கலோக பதவி அடைவர்.


7. நீல தீர்த்தம் : 

மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது. இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.


8. கவாய தீர்த்தம் : 

இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் தேக ஆரோக்கியம் கிடைக்கும்.


 


9. கவாட்ச தீர்த்தம் : 

இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.


10. கந்நமாதன தீர்த்தம் : 

சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.


11. சங்கு தீர்த்தம் : 

இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.


12. சக்கர தீர்த்தம் : 

இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.


13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம் : 

இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் பிரம்மஹத்தயாதிதோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சூனியமும் நீங்கும்.

14. சூர்ய தீர்த்தம் : 

இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.


15. சந்திர தீர்த்தம் :  

இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.


16. கங்கா தீர்த்தம் 17. யமுனா தீர்த்தம் 18. காயத்ரி தீர்த்தம்:

இம்மூன்று தீர்தத்தங்களும்திருக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள  கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. இவைகளில் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம். 


19. சாத்யாம்ருத தீர்த்தம் :

திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடினால் கோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.


20. சிவ தீர்த்தம்

இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் ஸ்நானம்  செய்தால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.


21. சர்வ தீர்த்தம் : 

இந்த தீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாதசுவாமி சன்னதி  முன் உள்ளது. இதில் நீராடினால் பிறவிக்குருடு, நோயம் நரை திரையும் நீங்கி வளமடையலாம். கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள். இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.


22. கோடி தீர்த்தம் : 

இந்த தீர்த்தமானது, இராமர் லிங்கப் பிரதிஸ்டை  செய்தபோது, அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ராமர், தன் அம்பின் நுனியைப்  பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.பக்தர்களுக்கு தீர்த்தத்தை பாட்டில்களில் சேமித்து விற்கிறார்கள்.


சிவனாரின் அருளையும் ஸ்ரீராமரின் அருளையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கும் மகா தீர்த்தம் இது. இந்த 22 தீர்த்தங்களையும் தவிர, கடலிலேயே கலந்திருக்கிறது அக்னி தீர்த்தம். இதில் நீராடிவிட்டே ஆலய தரிசனத்துக்குச் செல்கிறார்கள் பக்தர்கள்.


 






பூரி கோயிலில் பெருமாள்

பூரி கோயிலில் பெருமாள் 


பெருமாளுக்கும் பூமாதேவிக்கும் திருமணம் ஆயிற்று. அவரது முதல் மனைவி பூமா தான். புதிதாக திருமணமானவர்களை விருந்துக்கு அழைப்பது நமது கலாசாரம். தேவலோகத்திலும் இப்படி நடப்பதுண்டு. தம்பதிகளை சிவபார்வதி கைலாயத்துக்கு அழைத்தனர். பூமாதேவி வர மறுத்துவிட்டாள்.

""அன்பரே! தங்களோடு நான் வந்துவிட்டால், இந்த பூலோகத்திலுள்ள பொருட்களெல்லாம் எங்கு போய் இருக்கும்? எனக்கு இன்னொரு பெயர் "அசலா'. அதாவது, இருந்த இடத்தை விட்டு நகராதவள் என்பதை தாங்கள் அறிவீர்கள் அல்லவா! நான் நகர்ந்தால் பூகம்பம் அல்லவா ஏற்படும். நீங்கள் திடீர் திடீரென எங்காவது செல்வீர்கள்? அப்போதெல்லாம் நான் உங்களுடன் வந்து கொண்டிருக்க முடியுமா? நீங்கள் மட்டும் போய் வாருங்கள்,'' என்று அனுப்பி விட்டாள்.

பெருமாளுக்கு வருத்தம். மேலும், போகும் இடங்களில் பெருமாளைப் பார்ப்பவர்கள் எல்லாம், ""ஆத்துக்காரி வரலையா?'' என்று கேட்பார்கள். பெருமாளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் சங்கடப்பட்டார். இந்த பூமாதேவி அசையவே மாட்டாள். எனவே, இரண்டாம் திருமணம் செய்வோமே என்று சமுத்திரராஜன் பெண்ணான லட்சுமியை மணந்து கொண்டார்.
அவளோ வீட்டிலேயே இருக்கமாட்டாள். ஒரு வீட்டில் ஒருநாள் இருந்தால், மறுநாள் இன்னொரு வீட்டுக்குப் போய்விடுவாள். செல்வத்தின் அதிபதியல்லவா! நிலையில்லாமல் ஓடிக்கொண்டேயிருந்தாள். பெருமாள் அவளை அழைக்கச் செல்லும் நேரம், "எங்காவது போயிருக்கிறாள்' என்றே பதில் கிடைக்கும்.


அவளோ அசைய மறுக்கிறாள், இவளே ஓடிக்கொண்டே இருக்கிறாள். பெருமாள் லட்சுமியுடன் சேர்ந்து ஓடினார். ஆனால், அவள் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நின்றுவிட்டார்.


பிறகு தன் மகன் மன்மதன் வீட்டுக்குச் சென்று அங்கே தங்கலாம் என்று சென்றார். செல்லும் வழியில் ஒரு முனிவர் பார்த்தார். ""உமது மகன் செய்த வேலையைப் பார்த்தீரா! அந்த பரமசிவனிடம் போய் அவர் மேல் அம்பு விட்டிருக்கிறான். அவர் கோபத்தில் நெற்றிக்கண்ணைத் 

திறந்திருக்கிறார். பஸ்பமாகி விட்டான்,'' என்று சொன்னதும், மகன் இறந்த துக்கம் தாளாமல் தவித்தார் அவர். மீண்டும் பாற்கடல் வந்த அவர், ஆறுதலாக ஆதிசேஷன் மீது படுத்தார். அவனோ விஷக்காற்றை வெளியிட்டபடியே இருந்தான். சற்று வெளியே போய்வரலாம் என கருடன் மீது ஏறி அமர்ந்தார்.


 பூரி என்ற ஊரின் மேலாக பறக்கும் போது, பூமியில் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்த கருடன், ""சுவாமி! இதோ! என் உணவான பாம்பு செல்கிறது. அதைப் பிடிக்கப் போகிறேன்,'' என 
நடுவழியில் அவரை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டான். தன்னைக் கவனிக்க யாருமே இல்லாததால், பகவான் ஒரு கட்டையாக தன்னை மாற்றிக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டார். இதனால் தான் பூரி கோயிலில், பெருமாள் கம்பு வடிவில் இருக்கிறார். பார்த்தீர்களா! அனுபவிக்க வேண்டுமென்ற விதியிருந்தால், யாராக இருந்தாலும் அதை அனுபவித்தே ஆக வேண்டும். அதனால் துன்பம் வந்தால் கலங்காதீர்கள். அதையும் ரசித்து அனுபவிக்கும் பக்குவ நிலையைப் பெறுங்கள்.