வியாழன், 29 செப்டம்பர், 2016

நவராத்திரியில் 9நாளும் செய்ய வேண்டியவை

நவராத்திரியில் 9நாளும்   செய்ய வேண்டியவை 










 

 

9நாள்களும் போட வேண்டிய கோலங்கள்:

• முதல் நாள் – அரிசி மாவு பொட்டு 

• இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம்

• மூன்றாம் நாள் –முத்து  மலர்

• நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு

• ஐந்தாம் நாள் – கடலை பறவையினம்

• ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம்


• ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர் களால் ஆன கோலம்)

• எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்)

• ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம்  (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிட்டால் சிறப்பு)

ஒன்பது நாள்களும் பாட வேண்டிய ராகங்கள்:• முதல்நாள் – தோடி

• இரண்டாம் நாள் – கல்யாணி

• மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை

• நான்காம் நாள் – பைரவி

• ஐந்தாம் நாள் – பந்துவராளி

• ஆறாம் நாள் – நீலாம்பரி

• ஏழாம் நாள் – பிலஹரி

• எட்டாம் நாள் – புன்னாகவராளி

• ஒன்பதாம் நாள் – வஸந்தா

ஒன்பது நாள்களும் அணிவிக்க வேண்டிய மாலைகள்:


• முதல் நாள் – மல்லிகை

• இரண்டாம் நாள் – முல்லை

• மூன்றாம் நாள் – செண்பகம், மரு

• நான்காம் நாள் – ஜாதிமல்லி

• ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்

• ஆறாம் நாள் – செம்பருத்தி

• ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை

• எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ

• ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து

ஒன்பது நாள்களும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்:
• முதல் நாள் – வாழைப்பழம்

• இரண்டாம் நாள் – மாம்பழம்

• மூன்றாம் நாள் – பலாப்பழம்

• நான்காம் நாள் – கொய்யாப்பழம்

• ஐந்தாம் நாள் – மாதுளை

• ஆறாம் நாள் – ஆரஞ்சு

• ஏழாம் நாள் – பேரிச்சம்பழம்

• எட்டாம் நாள் – திராட்சை

• ஒன்பதாம் நாள் – நாவல் பழம்

ஒன்பது நாள்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்:


• முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல்

• இரண்டாம் நாள் – புளியோதரை

• மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்

• நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)

• ஐந்தாம் நாள் – ததியோதனம் தயிர்சாதம், பொங்கல்

• ஆறாம் நாள் – தேங்காய் சாதம்

• ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்

• எட்டாம் நாள் – பாயஸôன்னம் ( பால் சாதம்)

• ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரை பொங்கல்

நவராத்திரியை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி ,அன்னையின் அருளைப் பெற நான் பிரார்த்திக்கின்றேன்.

மற்றவர்களையும்  சந்தோஷப்படுத்தி,அதன்மூலம்  நாமும் சந்தோஷம் அடைவோம்.

உங்களுடன் நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியில்,அன்னைக்கு நன்றி சொல்லி ,  நான் இந்த பதிவை முடிக்கிறேன். 

உங்கள் அன்பு ஆன்மீகத் தோழி ஈஸ்வரி  




புதன், 28 செப்டம்பர், 2016

நவராத்திரியில் அம்பாள் பிரசாதங்கள்

நவராத்திரியில் அம்பாள் பிரசாதங்கள்


  நவராத்திரியில் அம்பாளுக்கு 9நாட்களும்  நைவேத்யம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

முதல் நாள் காலை வெண்பொங்கல் படைப்பதால் வறுமை நீங்கி வளம் பெருகும்.ஆயுள் விருத்தி உண்டாகும்.மாலை அந்தந்த கிழமைக்குரிய நவதானியங்கள் சுண்டல் செய்து,நம் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு   வெற்றிலை,பாக்கு தாம்பூலம் கொடுத்தல் வேண்டும்.சனிக்கிழமை இந்த வருடம் முதல்நாளாக இருப்பதால் சனி பகவானுக்கு உரிய கருப்பு கொண்டைக் கடலையை அம்பாளுக்கு பிரசாதமாக வைக்கலாம்.

2ம் நாள் காலை  பிரசாதம் புளியோதரை . ஞாயிற்றுக் கிழமை என்பதால் சூரியபகவானுக்கு உரிய கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு பொருளை பிரசாதமாக படைக்கலாம்.

3ம் நாள் காலை சர்க்கரை பொங்கலும் ,மாலை  சந்திர பகவானுக்கு உரிய அரிசி கலந்த தேன்குழல்,தட்டை முதலியவற்றை தாம்பூலத்துடன் கொடுக்க வேண்டும்.தானிய விருத்தியும்,வாழ்வும் சிறக்கும்.

4ம் நாள் காலை பலவிதக் காய்களும்,பருப்பும் கலந்த கதம்ப சாதம் செய்து வழிபடுவதால் பகை விலகும்.எதிர்ப்புகள் அகலும்.இன்னல்கள் தீர்ந்து இன்பம் சேரும்.மாலை செய்வாய் கிழமை என்பதால் அங்காரகனுக்கு,துர்க்கைக்கு உகந்த சிவப்பு காராமணி சுண்டல் செய்து வழிபட வேண்டும்.

5ம் நாள் காலையில் தயிர் சாதம் .இதன்மூலம் விரும்பிய செல்வம் பெறலாம்.மாலையில் புதன் பகவானுக்கு உரிய நைவேத்யம் பாசி பருப்பு சுண்டல் ஆகும்.

6ம்  நாள் தேங்காய் சாதம்.கவலைகள் நீங்கி தனம் பெருகும்.எதிர்ப்புகள் விலகும்.மாலை வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நாள். கொண்டைக் கடலை சுண்டல்.

7ம் நாள் எலுமிச்சை சாதம்.கல்வி வளர்ச்சி,ஞான விருத்தி உண்டாகும்.மாலை வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்கு அரிசியுடன் வெல்லம்,தேங்காய் சேர்த்து அரிசி புட்டு செய்து அம்பாளை வழிபடலாம்.

8ம் நாள் காலையில் பாசி பருப்பு,கடலை பருப்பு சேர்ந்த பருப்பு பாயாசம்,வடையுடன் படைத்தால் கேட்கும் வரங்கள் எளிதில் கிடைத்து நலம் பெறலாம்.மாலை நவதானிய சுண்டல் .

9ம் நாள் காலை சர்க்கரை பொங்கல் நெய் அதிகம் சேர்த்த அக்கார வடிசாலை நிவேதனம் செய்யலாம்.குழந்தை வரம் பெறலாம்.மாலை கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்  செய்து வழிபட வேண்டும்.    
















ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

லலிதா சகஸ்ரநாமத்தில் கூறும் அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்

லலிதா சகஸ்ரநாமத்தில் கூறும் அம்பிகைக்கு  பிடித்த நைவேத்தியங்கள் 


சக்திதேவிக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அந்தப் பெயர்களால் அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நூலே லலிதா சகஸ்ரநாமம். இந்த நூலிலேயே தேவிக்கு பிடித்த நைவேத்ய வகைகள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த நூல் தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது.


பெருமாளின் அவதாரமாகக் கருதப்படுபவர் ஹயக்கிரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். கல்விக்கு அதிபதி. இவரது தரிசனம் ஒருமுறை அகத்திய முனிவருக்கு கிடைத்தது. கல்விக்கதிபதியான அவரை தன் குருவாகவே பார்த்தார் அகத்தியர். அதன் காரணமாக சக்தியின் வரலாற்றை அறிந்தார். சக்திக்கு "லலிதா' என்ற திருநாமம் சூட்டி, அவளது கதையைக் கூறினார் ஹயக்கீரிவர்.

அதைக் கருத்துடன் கேட்டு மகிழ்ந்த அகத்தியர், "குருவே! தாங்கள் எனக்கு லலிதா தேவியின் சரித்திரத்தை மட்டும் கூறினீர்கள். அவளுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே! அதையும் சொல்லுங்கள்!' என்றார்.


"அது மிக, மிக ரகசியம். தேவியின் அனுமதியின்றி யாருக்கும் சொல்லக் கூடாது. இருந்தாலும் தேவியின் அதிதீவிர இறைபக்தர்களுக்கு இதைச் சொல்வதில் தவறில்லை!' என்று கூறிய ஹயக்கிரீவர், ஆயிரம் நாமங்களையும் கற்றுக் கொடுத்தார். அதில் வரும் 480வது ஸ்லோகமான, "பாயஸான்ன ப்ரியாயை' என்பதற்கு, "பால் பாயசத்தை விரும்புபவள்' எனப் பொருள்.
501வது ஸ்லோகமான, "குடான்ன ப்ரீத மானஸாயை' என்பதற்கு, "அம்பிகை சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள்' என்று அர்த்தம்.
526வது ஸ்லோகமான, "ஹரித் ரான்னைக ரஸியை' என்ற ஸ்லோகத்திற்கு, "மஞ்சள் பொடி கலந்த எலுமிச்சை சாதத்தை ரசித்து உண்பவள்' என பொருள் வருகிறது.


அம்பிகை குறித்த இன்னொரு ஸ்லோகமான, "தத்யான்ன ஸக்த ஹ்ருதயாயை' என்ற ஸ்லோகத்திற்கு, "இவள் தயிர் சாதம் என்றால் இதயத்தையே கொடுப்பவள்!' என்று பொருள்.
"முத் கௌத நாஸக்த...' என்ற ஸ்லோகத்திற்கு, "பாசிப்பருப்பு, அரிசியில் சமைத்த வெண்பொங்கலை விரும்புபவள்!' என்று அர்த்தம்.


"ஸர்வெளதன ப்ரீதசித்தா' என்ற ஸ்லோகத்திற்கு, "அம்பிகை கதம்ப சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை உண்ணும் மனதைக் கொண்டவள்!' எனப் பொருள்.
இதையெல்லாம் முடித்த பிறகு 559வது ஸ்லோகத்தில், "தாம்பூல பூரிதமுகிச்யை' என்ற ஸ்லோகம் வருகிறது. இதற்கு, "தாம்பூலம் தரித்ததால் லட்சணமாக இருக்கும் முகத்தைக் கொண்டவள்!' எனப் பொருள்.





"தாம்பூலம்' என்பது வெற்றிலை, பாக்கைக் குறிக்கும். எனவே தான் கடவுளுக்கு நாம் நிவேதனம் படைத்து வழிபடுகிறோம். 

இதைத்தவிர அவரவருக்கு என்ன நைவேத்யமாக வைத்து பூஜிக்க முடியோமோ அதை வைத்து வணங்கலாம்.அம்பாள் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான, ஆத்மார்த்தமான பக்தியே!நாமும் நமக்கு தெரிந்த முறையில் அம்பாளை மனதார நினைத்து, தாயின்  அருளை  பெறுவோம்.

நன்றி வணக்கம்  



சனி, 24 செப்டம்பர், 2016

நவராத்திரி கொலு படி தத்துவம்

நவராத்திரி கொலு படி தத்துவம் 


நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும்.கொலு  என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும்."ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலன்களையும் தருவேன்" என்று  அம்பிகையே கூறியிருக்கின்றாள்.நவராத்திரியில் இச்சா சக்தி,ஞான  சக்தி,கிரியா சக்தி என மூன்று சக்திகளின் அருளை பெற நவராத்திரி வழி செய்கிறது. கொலுமேடை 9படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.

படிகள் சொல்லும் 3குணங்கள் 

கீழே உள்ள 3படிகளில் அரிசி,பருப்பு,பாத்திரம் தாமச குணத்தை குறிக்கும்.
4,5,6படிகள்  அரசர்,ராணி,மந்திரி ரஜோ குணத்தை காட்டுகிறது.
7,8,9படிகள் தெய்வ உருவங்கள் சத்துவ குணத்தை அடையும் வழியை காட்டுகிறது. 


கொலுப்படி எந்தெந்த பொம்மைகளை எந்த படியில் வைக்கலாம் ?
கீழேயிருந்து மேலாக ஓரறிவில் தொடங்கி உயர்நிலையுள்ள  இறைவன் பொம்மைகள்  வைக்கப்படுகின்றன.

முதலாம் படி ---ஓரறிவு உயிர்களான புல்,செடி,கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள் 
இரண்டாம் படி---ஈரறிவு கொண்ட நத்தை,சங்கு போன்ற பொம்மைகள்.
மூன்றாம் படி ----மூன்றறிவு உயிர்களான கரையான்,எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.
நான்காம் படி----நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள் .
ஐந்தாம் படி ----ஐந்தறிவு உள்ள மிருகங்கள்,பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள்.
ஆறாம் படி----ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும்,சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார். 
ஏழாம் படி ----மனித நிலையிலிருந்து உயர் நிலைகளை அடைந்த சித்தர்கள்,ரிஷிகள்,மகரிஷிகள் (ரமணர்,வள்ளலார்)போன்றோரின் பொம்மைகள்.
எட்டாம் படி ---தேவர்கள்,அட்டதிக்பாலர்கள்,நவக்கிரக ஆதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
ஒன்பதாம் படி ----பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதி சக்தி வைக்க வேண்டும்.

ஒன்பதாம் படியில் முதலில் விக்னங்களை தீர்த்து வைக்கும் விநாயக பொம்மையை வைத்தப்பிறகு மற்ற மொம்மைகளை வைக்க வேண்டும் என ஆதிபராசக்தி சொல்லி இருப்பதாக 'தேவி பாகவதம்' சொல்கிறது.அடுத்ததாக ,மூம்மூர்த்திகள்,3 தேவியர்களையும் வைக்கலாம்.லட்சுமிக்கும்,சரஸ்வதிக்கும் இடையே சக்திதேவியை வைக்க வேண்டும்.

மனிதன் படிப்படியாக தன்  ஆன்மீக சிந்தனைகளை வளர்த்து,இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவது கொலு படியாகும்.






வெள்ளி, 23 செப்டம்பர், 2016

நவராத்திரி பூஜையும்,சொல்ல வேண்டிய மந்திரங்களும்

நவராத்திரி பூஜையும்,சொல்ல வேண்டிய மந்திரங்களும் navaratri poojai க்கான பட முடிவு


நவராத்திரி 9நாட்களிலும் ஒவ்வொரு அம்பிகையை ஒவ்வொரு விதமான மந்திரங்கள் சொல்லி பூஜிக்க வேண்டும். முதல் 3நாள் துர்காவிற்கும்,அடுத்த 3நாள் லக்ஷ்மிக்கும் ,கடைசி 3நாட்கள் சரஸ்வதிக்கும் உரிய நாட்கள் ஆகும்.



முதல் நாள்--- மகா கணபதி பூஜையுடன் தொடங்கி ,கலசபூஜை செய்து கலச ஆவாஹனம் செய்து துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்யலாம்.மஹிஷாஸுரமர்த்தினி மந்திரம் பாராயணம் செய்யலாம்.

2ம்நாள்---இச்சாசக்தியான துர்க்கையை துர்கா அஷ்டோத்திரம்,ஸ்ரீ லலிதா திரிசதி ,ஸ்ரீ காமாட்சி மந்திரம் பாராயணம் செய்து வழிபட வேண்டும்.

3ம்நாள்---துர்கா அஷ்டோத்திரம்,ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா நவரத்தின மாலா பாராயணம் செய்தல் வேண்டும்.

4ம்நாள்----ஸ்ரீ மகாலக்ஷ்மியை தியானம் செய்து,லக்ஷ்மி அஷ்டோத்திரம் படித்து ,பூஜை செய்வது நல்லது.ஸ்ரீ கனகதாரா மந்திரம்,ஸ்ரீ அன்ன பூரணாஷ்டகம் ,அஷ்டலக்ஷ்மி மந்திரம் சொல்ல வேண்டும்.

எல்லா நாட்களிலுமே பூஜை முடிவில் "ஸ்ரீ துர்கா லக்ஷ்மி சரஸ்வதீப்யோநம :"என்று கூறி மலர்களுடன்,குங்குமம்,அட்சதை ஆகியவற்றை அம்மாளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

 5ம்நாள்----லக்ஷ்மி அஷ்டோத்திரம்,ஸ்ரீ கனகதாரா மந்திரம்,ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் பாராயணம்,ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்வது நன்மை பயக்கும்.

6ம் நாள்---லக்ஷ்மி அஷ்டோத்திரம்,மகாலக்ஷ்மி ஸஹஸ்ரநாம பூஜை செய்தல் வேண்டும்.

7ம் நாள்----சரஸ்வதி அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்து ,ஸ்ரீசாரதா புஜங்க மந்திரம் மற்றும் ஸ்ரீ தேவி கட்கமாலா படிக்க வேண்டும்.

8ம்நாள்----சரஸ்வதி நாமாவளி,ஸ்ரீ பவானி புஜங்கள் ,சரஸ்வதிக்கு உரிய பாடல்கள்,மந்திரங்கள் சொல்லுதல் நன்று. இன்று தேவி நரசிம்மி வடிவில் சினம் தனிந்த கோலத்தில் காட்சி தருகிறாள். 

9ம் நாள் ---சாமுண்டி மாதா  அம்பு,அங்குசம் தரித்த   ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியாக இன்று தோன்றுகிறாள்.சரஸ்வதி அஸ்டோத்திரம்,ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் சிறந்த பலன் தரும்.

10ம் நாள்---வெற்றியை குறிக்கும் விஜயதசமி நாளாகும்.வெற்றி திருமகளாக தேவியை  அலங்கரிக்க,நவநிதியும் பெற்று நீடுழி வாழலாம் என்பது ஐதீகம்.

நவராத்திரி 9நாட்கள் என்கிற கணக்கில் சில சமயம் குறைவு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் எவ்வெவ் தேவியருக்கு  எத்தனை நாட்கள் என்ற பிரச்சனை எழுவதுண்டு.இந்த ஆண்டு 10நாட்கள் [1.10.2016 முதல்10.10.2016 வரை]வருகின்றன. 11வது  நாள் செவ்வாய் கிழமை விஜயதசமி .

முதல் மூன்று நாட்கள் ஸ்ரீதுர்கா தேவியையும்,இந்த வருடம்  நான்கு நாட்கள் லக்ஷ்மி தேவியையும்,அடுத்த 3நாட்கள் சரஸ்வதியையும் பூஜித்து வழிபடவேண்டும்.


சரஸ்வதி தேவியை மூல நட்சத்திரத்தன்று ஆவாஹனம் செய்து வழிபடத் தொடங்கி திருவோண நட்சத்திரம் உத்வாசனம் செய்ய வேண்டும்.அதனால் சரஸ்வதிக்குரிய நாட்களை உசித்தப்பாடி துர்க்கை,லக்ஷ்மி உரிய நாட்களை பிரித்து கொள்ளலாம்.

கன்னிகா பூஜை 

நவராத்திரி ஒவ்வொரு  நாளிலும் அன்னை பராசக்தியை ஒவ்வொரு ரூபத்திலும் ஆராதனை செய்ய வேண்டும்.7அல்லது 10வயதிற்குட்பட்ட சிறு பெண் குழந்தைகளை நம் இல்லத்திற்கு அழைத்து, அவர்களை அன்னை பாலா திரிபுரசுந்தரியாக பாவித்து நல்விருந்தளித்து,புத்தாடை,வளையல் , சீப்பு,கண்ணாடி,  தேங்காய்,பழம்,வெற்றிலை பாக்கு முதலியவற்றை தாம்பூலமாக கொடுக்க வேண்டும்.

தினமும் கொடுக்க இயலாதவர்கள் கடைசிநாளில் 9கன்னிகைகளுக்கும் ஒருசேர விருந்தளித்து ஆடை,அணிகலன்கள் அளிக்கலாம்.இந்த உபசாரங்களை தேவி பராசக்தி அன்புடன் ஏற்றுக் கொண்டு நமக்கு நல்வாழ்வை தருவாள்.

அம்பிகையை நவராத்திரி  காலங்களில் வணங்கி, அவள் அருளை பெறுவோமாக !


  















வியாழன், 22 செப்டம்பர், 2016

அம்பிகையின் 8ஆத்ம குணங்கள்

அம்பிகையின் 8ஆத்ம குணங்கள் 



அம்பிகையின் கருணை கடாட்சத்தை பெற அம்பிகையின் திருநாமங்களை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.தாய்க்கு தாயான அம்பிகை,நம்முடைய  நியாயமான  கோரிக்கைகளை ஏற்று,அருள்பாவிக்கிறாள்.

1.தயை =சகல ஜீவன்களிடமும் இரக்கம் காட்டுதல் 
2.சாந்தி=தீமை செய்பவரிடம் இரக்கம் கொண்டு,அவர்களை  மன்னித்தல் 
3.அநஸூயை=பொறாமை இல்லாமை 
4.கெளசம்=உடல்,மனம்,வாக்கு ஆகிய மூன்றிலும் தூய்மையாக இருந்தல் 
5.அநாயாசம் =மற்ற உயிரினங்களுக்கு எந்தவகையில் சிரமம் கொடுக்காமல் இருப்பது 
6.மங்களரூபிணி=சமய ஆசாரங்களைக் கடைப்பிடித்து,தூய்மையுடன் இருப்பது 
7.அகார்ப்பண்யம் =எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் தைரியமாக இருப்பது.முடிந்தவரை சத்காரியங்களைச் செய்து கொண்டிருப்பது 
8.அஸ்ப்ருஹா=பிறர் பொருளில் ஆசையின்மை 

இந்த எட்டு குணங்களுடன்  நாம் வாழும்போதுதான் நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும்.இந்த குணங்களை பெற்று நாம் சிறப்புற வாழ வேண்டும்.அதற்கு இருப்பிடமான அம்பிகையை சரணடைவதை  தவிர,வேறு வழி  இல்லை.தன்னை ஆத்மாத்தமாக வழிபடும் பக்தனுக்கு,இந்த குணங்களை தந்து,அவனை உயர்நிலைக்கு அழைத்து சென்று, சந்தோஸம் அளிப்பதே அம்பிகையின்குணமாகும் .தேவியின் திருவருளை பெற வேண்டுமானால்,நம் வீட்டு பெண்களை ஆதிசக்தியாகவே கருதி போற்ற வேண்டும்.பராசக்தியாக அம்பிகையே! பெண்கள் வடிவில் ஒவ்வொரு இல்லத்திலும் ஆட்சி செய்கிறாள்.

பராசக்தியிடம் அத்தனை சக்தி இருந்தாலும்,தமது சக்தியை அடக்கி ஒடுக்கிக் கொண்டு 'ஸதி'என்ற பெயருடன் மஹா பதிவிரதையாக ஸ்ரீ பரமேஸ்வரனின் சாந்தத்தில் தமது மனநிறைவைப் பெறுகிறார்.அதனால்தான் அம்பிகைக்கு "சிவசக்தி ரூபிணி" என்ற பெயரும் வந்தது. இதுபோன்று,மனைவி தன் கணவனுக்கு அனைத்து காரியங்களிலும் ஊறுதுணையாக இருந்தால்,குடும்பநலம் பெருகும்.


அபிராமிபட்டர் அருளிய பாடலை தியான நிலையில் இருந்து சொல்லி வந்தால் சகல நலனும் கிட்டும்.


நாயகி,நான்முகி,நாராயணி,கைநளின பஞ்ச
சாம்பவி,சங்கரி,சாமனை,சாதிநச்சு
வாய் அகிமாலினி,வாராகி,கூலினி,மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம் --அரண் நமக்கே!

ஸ்ரீவியாசமுனிவர் ஒருமுறை நாதரிடம் யாரை முதலில் பூஜிக்க வேண்டும்?என்று கேட்டார்.அம்பிகையான பராசக்தியிடமிருந்து மும்மூர்த்திகள் தோன்றினர்.அவளே இந்த பிரபஞ்சத்தையும் தோற்றுவித்தாள்.அம்பிகையின் சக்தியால்தான் மும்மூர்த்திகள் செயல்புரிகின்றன.உலகமே அம்பிகையின் இயக்கத்தில் இயங்குகிறது.எனவே,அம்பிகையை தான் முதலில் பூஜிக்க வேண்டும்.



 







   
















புதன், 21 செப்டம்பர், 2016

புரட்டாசி சனிக்கிழமை மகிமை

புரட்டாசி சனிக்கிழமை மகிமை 


பொதுவாக,இந்துக்கள் எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம் இருப்பார்கள்.அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளிலும் ஒரு சிலர்,அந்த மாதம் முழுவதும் விரதம் இருப்பார்கள்.எல்லா நாட்களிலும் விரதம் இருக்கமுடியாத பட்சத்தில், புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது நல்ல பலனைத் தரும்.எனவேதான்,புரட்டாசி மாதம் விரத மாதமாகக்  கருதப்படுகிறது.

புரட்டாசி மாதம் பெருமாளை வழிபட, ஏற்ற மாதமாகும்.பெருமாளின்  மகிமையை   விளக்கும் கதைகள் புராணங்களில் உண்டு.

புராண கதை  

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அருகில் பீமன் என்ற ஏழை குயவர் வாழ்ந்து வந்தார்.அவர் தீவிர பெருமாள் பக்தர்.வாழ்நாள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்து கொண்டார்.இவருக்கு சாஸ்திர,சம்பிரதாயம்,பூஜை வழிமுறை எதுவும் தெரியாது.


தொழில் மற்றும் ஏழ்மைநிலை காரணமாக கோவிலுக்கு போகவும் நேரம் இருக்காது.அப்படியே சென்றாலும் "பெருமாளே!நீயே எல்லாம் என்று மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.ஒருநாள் ஓர்  எண்ணம் தோன்றியது.கோவிலுக்கு போக நேரமில்லை.ஆகையால் பெருமாளை இங்கே வரவழைத்தால் என்ன?என்று நினைத்து களிமண்ணால் பெருமாள் சிலையையும் ,பூ  வாங்க பணம் இல்லாததால் சிறு பூக்களாக  உருட்டி மாலையாக தொடுத்து அணிவித்து வணங்கினார்.

அவ்வூர் அரசர் தொண்டைமானும்  திருப்பதி பெருமாளின் பக்தர்.அவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு தங்க பூமாலை அணிவித்து வழிபடுவார்.ஒருதடவை மாலை அணிவித்துவிட்டு, மறுவாரம் வந்து பார்த்தபோது  பெருமாள் கழுத்தில் மண்ணால் செய்த பூமாலை தொங்கியது.அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. அர்ச்சகர்கள் ஏதாவது தவறு செய்கிறார்களோ என்ற குழப்பத்திலேயே அரண்மனைக்கு சென்று படுத்தார்.அன்று அரசன் கனவில் தோன்றிய பெருமாள்,பீமனின் பக்தியையும்,தாம் அதனால் மகிழ்வுற்றதையும் விளக்கினார்.உடனே,மன்னர் தொண்டைமான் அந்த குயவரின் இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு வேண்டிய உதவிகளையும்,பொன்னையும்,பொருளையும் அள்ளி கொடுத்தார்.ஆனால்,அதைக் கண்டு சிறிதும் மயங்காத குயவர் இறுதிவரை தன்  விருப்பப்படி பெருமாள் விரதம் இருந்து வைகுண்டபதவி அடைந்தார்.  அந்த பக்தரின் நினைவாக இன்றும் ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் பிரசாதமாக வைக்கப்படுகிறது.

பரந்தாமன், பீமய்யாவின் கனவில் தோன்றி, "உன் பக்தியின் பெருமையை என்று பிறர் கூற அறிகின்றாயோ அன்றே! உனக்கு முக்தி அளித்து,வைகுண்டத்தில்  அழைத்து கொள்வேன்" என்று கூறியிருந்தார்.அதன்படியே தொண்டைமான்,பீமய்யாவின் பக்தியை பாராட்டியதை கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது.


 பெருமாளுக்கு அக்காரவடிசல் நைவேத்யமாக வைக்க காரணமான கதை   

புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்காரவடிசல் செய்து வணங்குதல் சிறப்பு.நாம் கேட்கும் வரம் கிடைக்கும்.

திருமாலிருஞ் சோலை அழகரிடம் ஆண்டாள்,"மாதவா! என்  மனதுக்கு பிடித்த அரங்கனே !எனக்கு மணவாளனாக வந்தால் 100 அண்டா வெண்ணையும்  ,100அண்டா அக்காரவடிசலும்  உனக்கு நைவேத்யமாக தருகிறேன்" என்று வேண்டிக் கொண்டாள் .அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூட்டி தன்னுடன் ஐக்கியமாக்கி கொண்டார்.

ஆண்டாள் தான் வேண்டி கொண்டதுபோல் வெண்ணையும்,அக்காரவடிசலும் பகவானுக்கு கொடுத்தாரா? என்ற சந்தேகம் 300ஆண்டுகளுக்கு பிறகு யதிராஜரான ராமானுஜருக்கு வந்தது.உடனே,மகான் 100அண்டா வெண்ணையும்,100அண்டா அக்காரவடிசலும் நைவேத்யம் செய்து அழகரை ஆராதித்து,ஆண்டாள் வேண்டுதலை தானே நிறைவேற்றினார்.அதனால் ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது,வாசலுக்கே ஓடிவந்து, "வாருங்கள் !அண்ணா! நம் கோவிலுக்கு"  என்று  கூப்பிட்டாளாம் ஆண்டாள்.ஆண்டாளைவிட  ராமானுஜர் வயதில் குறைந்தவராக    இருந்தாலும் ,ஆண்டாள் அண்ணா! என்று அவரைக்கூப்பிட காரணம், ஒரு  தங்கைக்கு செய்யவேண்டிய கடமையை  அண்ணன் ஸ்தானத்தில் இருந்து  தனக்கு செய்ததால்தான்.

இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்திற்கு ஒருமுறை இந்த சம்பவம் மிகச்சிறப்பாக அக்காரவடிசல் பிரசாதத்துடன்  கொண்டாடப்படுகிறது.  


பக்தி என்பது குளித்து முடித்து நாமம் இட்டு, மந்திரம் சொல்லி,பூஜை செய்து சாமி கும்பிடுவதோடு முடிந்து விடுவதில்லை.நாளின் ஒவ்வொரு நொடியும் உங்களை பெருமாள் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு,மனம்,மெய் ,வாக்கு  ஆகிய மூன்றாலும் தவறேதும் செய்யாதிருப்பதே பக்தியாகும்.

அனைத்து  ஜீவராசிகளிடம் அன்பு வைத்தால், பகவானின் அனுக்கிரகத்தை எளிதில் அடையலாம். 

நீங்களும் சந்தோஷமாக  இருங்கள்.உங்களை சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள். 




























செவ்வாய், 20 செப்டம்பர், 2016

ஞாயிறு முதல் சனி வரை தினமும் சொல்ல வேண்டிய பாடல்கள்

support,like  and subscribe  my you tube channel Tamilnattu samayal.comments and share your friends.

ஞாயிறு முதல் சனி வரை தினமும் சொல்ல  வேண்டிய பாடல்கள்

அன்பார்ந்த ஆன்மீகத் தோழிகளுக்கு வணக்கம்.

இறைவனைப் பற்றி எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். என் பதிவு பயனுடையதாக தாங்கள் கருதினால் என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் கருத்தை தெரிவிக்க பணிவுடன் வேண்டுகிறேன். 

என் போன்ற சக தோழிகளும் பார்த்து,படித்து பயன் பெறுவதே நான் ஆண்டவனுக்கு செய்கின்ற சேவையாக கருதுகிறேன்

ஞாயிற்றுக் கிழமை: 

வினாயகர் வழிபாடு:

ஐந்து கரத்தனை யானைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

சிவன் வழிபாடு:

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசந்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை யல்லாள் இனியாரை நினைக்கேனே
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கில வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே

அம்மன் வழிபாடு:

பூத்தவளே, புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே; கறைகண்டவனுக்கு
மூத்தவளே; என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

முருகன் வழிபாடு:

வருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

பெருமாள் வழிபாடு:

பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி இன்மையின் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின் உள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா! பண் புரைக்க மாட்டேனே!

சூரியன் வழிபாடு:

சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.

கேது வழிபாடு:
கேதுத்தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி


திங்கட் கிழமை: 


வினாயகர்:

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத்தமிழ் மூன்றும் தா.

சிவன் வழிபாடு:

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே

அம்மன் வழிபாடு:

துணையும் தொழுந் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பனையும் கொடுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர் பூங்
கனையும் கரும்பும் சிலையும் மென் பாசாங்குசமும் வகையில்
அனையுந் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே

முருகன் வழிபாடு:

கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரிக் கனக சபைக்கோ ரரசே!
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்

திருமால் வழிபாடு;

வாராய் நாக்கே! கேசவனை ஸ்தோத்திரம் செய்!
நெஞ்சே! முராசுரனைக் கொன்ற கண்ணனைத் தியானம்செய்!
கைகளே! திருமாலை ஆராதியுங்கள்!
காதுகளே! தன்னை யடைந்தவர்களை ஒருகாலும் நழுவ
விடாதவனான கண்ணனுடைய கதைகளைக் கேளுங்கள்!
கண்களே! எம்பெருமான் திருக்கோயிலுக்குச் செல்லுங்கள்!
மூக்கே! முகுந்தனுடைய திருவடிகளில் ஸமர்ப்பித்த துளசியை நுகரு!
தலையே! எம்பெருமானை வணங்கு!

சந்திரன் வழிபாடு:

எங்கள் குறைகள் எல்லாந் தீர்க்கும்
திங்களே போற்றி, திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி



செவ்வாய்க் கிழமை:


வினாயகர் வழிபாடு:

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு

சிவன் வழிபாடு:

நல்லவை பெருகவேண்டும் நாடெல்லாம் வாழவேண்டும்
அல்லவை ஒழியவேண்டும் அனைத்துயிர் வாழவேண்டும்
பொல்லவைக் கலியும் நீங்கிப் புதுயுகம் பூக்கவேண்டும்
செல்வமிக் கோங்கும் அண்ணா மலைவளர் தேவதேவ!

முருகன் வழிபாடு:

அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் எனவேல் தோன்றும் நெஞ்சில்
ஒருக்கால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவார் முன்

சக்தி வழிபாடு:

தனந்தரும் கல்விதரும் , ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும், தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும், நல்லன எல்லாந்தரும், அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

அனுமன் வழிபாடு:

வானரரில் முதலோனை மற அரக்கர் குலத்தோர்கள்
ஆனவராம் குமுதவனம் அழிகிரண ஆதவனை
தீனர்களின் துயர்திடைக்கத் திடவிரதம் கொண்டவனை
மானவளி தவமகனை மனக்கண்முன் கண்டேனே

செவ்வாய் வழிபாடு:

சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு

புதன் கிழமை: 

வினாயகர் வழிபாடு:

திகடசக்கரச் செம் முகம் ஐந்துளான்
சகடச் சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியா உறை
விகடச் சக்கரன் மெய்பதம் போற்றுவோம்

சிவன் வழிபாடு:

பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப்பெறுந் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரே மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகங் கலைமறந் தாலும்
கண்கள்நின்றிமைப் பதுமறந்தாலும்
நற்த வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே

அம்மன் வழிபாடு:

மங்கள ரூபிணி மதியணி சூலினி
மன்மத பாணியளே!
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே!
கங்கண பாணியன் கரிமுகங் கண்டநல்
கற்பகக் காமினியே!
ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி

முருகன் வழிபாடு:

ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானைச் சகோதரனே.
நாளென் செய்யும்வினை தானென் செயுமென நாடிவந்த
கோளென் செயும் கொடுங் கூற்றென் செய்யுங் குமரே சரிரு
தாளுஞ் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

ராமன் வழிபாடு:

கண்ணிரண்டும் ராமனைக் காணவே
காதிரண்டும் ராமனக் கேட்கவே
பண்ணிசை ராமனை பாடவே
பாதமிரண்டும் ராமனை நாடவே
எண்ணி எண்ணி ராமனை நேசிப்போம்
இதயப் பூவால் ராமனைப் பூசிப்போம்

புதன் வழிபாடு:


இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி



வியாழக்கிழமை: 

விநாயகர்:

வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து

சிவன்:

தோடுடைய செவியன் விடைஏறி
ஓர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி
என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள்
பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய
பெம்மான் இவன் அன்றே

அம்மன்:

நின்றும் இருந்தும் கிடந்தும் 
நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்
தால் எழு தாமரையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே
உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா
முத்தி ஆனந்தமே


முருகன்:

மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி - காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலரடி போற்றி - அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி

பெருமாள்:
பச்சைமாமலை போல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம்
கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே.

வியாழன்:

குணமிகு வியாழக் குரு பகவானே
மனமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்
ப்ருஹஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
கிரகதோஷ மின்றிக் கடாக்ஷித்தருள்வாய்


வெள்ளிக் கிழமை: 

விநாயகர்:

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியக் கைதொழுதக் கால்

சிவன்:

சிவனோடொக்குந் தெய்வந் தேடினுமில்லை
அவனோ டொப்பாரிங்கு யாவருமில்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

அன்புஞ் சிவமு மிரண்டென்பரறிவிலார்
அன்பே சிவமாவ தாரு மறிகிலார்
அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்
அன்பே சிவமா யமர்ந்திருந்தாரே

அம்மன்:

நாயகி நான்முகி நாராயணிகை நளினபஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண்நமக்கே

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளை புவிஅடங்கக்
காத்தாளை அங்குச பாசாங் குசமும் கரும்பும்அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒருதீங்கில்லையே

முருகன்:

ஆறிரு தடந்தோள் வாழ்க
அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியாரெல்லாம்

விஷ்ணு:

அச்சுதன் அமலன் என்கோ
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மாமருந்தும் என்கோ
நலங்கடல் அமுதம் என்கோ
அச்சுவைக்கட்டி என்கோ
அறுசுவை அடிசில் என்கோ
நெய்ச்சுவை தேறல் என்கோ
கனிஎன்கோ பால் என்கேனோ

சுக்கிரன்:

சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே

சனிக்கிழமை: 

விநாயகர்:

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் யானை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை

சிவன்:

வேண்டத் தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உந்தன் விருப்பன்றே

அம்மன்:

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் 
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே
பயிரவி பஞ்சமி பாசாங் குசைபஞ்ச பாணிவஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வாராகி யென்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே


முருகன்:

சங்கரன் மகனே சரவண பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே
பழனிமா மலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்

பெருமாள்:

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக்காப்பு
அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் ஜோதி வலத்துறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே!

சனி 

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா

ராகு:

அரவெனும் இராகு அய்யனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கு
ஆகவருள்புரி அனைத்திலும் வெற்றி
இராகுக் கனியே ரம்மியா போற்றி

என்றென்றும் இறைவன்,இறைவி  அருள் அனைவருக்கும் எப்போதும்  கிடைக்க நான் வேண்டுகின்றேன்.


நன்றி! வணக்கம்!