புதன், 2 மே, 2018

ஸ்ரீகிருஷ்ணர் கவசம்


  1. ஸ்ரீகிருஷ்ணர் கவசம்  தொடர்புடைய படம்
    இது திரு கண்ணதாசனால் இயற்றப்பட்டது.
    அவர் சொல்லுகிறார்:
    துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய்நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய்பிசாசுகள் பயம் நீங்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துகொள்ள, இந்தக் கவசத்தைத் தினமும்
    பாராயணம் செய்யவும்.

    கண்ணனை நினைப்போர் சொன்னது பலிக்கும்;
    இந்தக் கவசம் படிப்போர் கவலைகள் பறக்கும்.

    அகரம் முதலே அழியாப் பொருளே
    ஆயர் குலமே நேயர் கரமே
    இகமும் பரமும் இணையும் இடமே
    ஈதல் மரபாம் இதயத் தவமே
    உலகக் குடையே உயிரின் கலையே
    ஊதும் குழலுள் வேதப் பொருளே
    எரியும் கனலில் தெரியும் புனலே
    ஏழை மனதில் வாழும் அருளே
    ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே
    ஐவர் துணையே அன்புச் சிலையே
    ஒளியே விழியே உயிரே வழியே
    ஓடும் நதியில் பாடும் அலையே
    அவ்வவ்வுலகை ஆக்கும் நிலையே
    அடியேன் சரணம் சரணம் சரணம் ! 14

    அறமே அறமே அறமே அறமே
    திறமே திறமே திறமே திறமே
    தவமே தவமே தவமே தவமே
    வரமே வரமே வரமே வரமே
    வேதம் விளையும் வித்தே விளைவே
    நாதம் பொழியும் நலமே நிலமே
    ஓதும் பொழுதே உடனே வருவாய்
    உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
    அறியாக் கவலை அதிகம் அதிகம்
    அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் ! 24

    பொய்யா மொழியே பொங்கும் நிலவே
    பூமிக் குடையின் காவற் பொருளே
    பார்த்தன் பணியும் பாதம் காக்க
    பாஞ்ச சன்னியம் பக்தனைக் காக்க
    மூடர்கள் தமையும் மோகனன் காக்க
    முள்ளில் மலரால் முளைத்தோன் காக்க
    வாடும் உயிரை மன்னவன் காக்க
    தேடும் விழியைத் திருமால் காக்க
    கேலிப் பொருளைக் கிருஷ்ணன் காக்க
    கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
    துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க
    தூயோன் வருக துணையே தருக ! 36

    தகிடத் தகிடத் தகிடத் தகவென
    தறிபடு துன்பம் தறிகெட ஓட
    திகிடத் திகிடத் திகிடத் திகிடத்
    திசைவரு கவலை பசைஇல தாக !
    துருவத் துருவத் துருவத் துருவிடத்
    தொலையாப் பொருளே அலையாய் வருக !
    நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக
    கர்மசந் யாசக் களமே வருக
    ஞானம் யோகம் நல்குவன் வருக
    நல்லோர் வாழ்வில் நலமே நிறைக ! 46

    அடியேன் துயரம் அதிகம் அதிகம்
    அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்
    பொங்கும் வேலும் புண்ணாக் காது
    பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
    தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்
    தாளில் விழுந்தேன் சரணம் சரணம்
    மதுசூதனனே மனிதன் சரணம்
    இருடீ கேசா இயலான் சரணம் ! 54

    கீதா சாரிய கிருஷ்ணா சரணம்
    வேதா சாரிய வேந்தே சரணம்
    தேவகி மைந்தா சிறியேன் சரணம்
    யசோதா குமரா அடியேன் சரணம்
    உன்னை விட்டொரு உறவுகளில்லை
    என்னை விட்டொரு இனியவனில்லை
    நம்மை விட்டொரு நண்பர்களில்லை
    நன்மையில் உன்போல் நாயகனில்லை 
  2. எங்கெங் கேநான் இருந்திடும் போதும்
    அங்கங் கேநீ அருள்செய வருக
    கோசலலை ஈன்ற குமரா வருக
    கோதையின் மாலை கொண்டவன் வருக
    ரகுவம் சத்தின் நாயகன் வருக
    யதுவம் சத்தின் யாதவன் வருக
    மதுவை வென்ற மாதவன் வருக
    மலைக்குடி கொண்ட மாலவன் வருக ! 70

    திருப்பதி யாளும் திருமால் வருக
    திருவரங் கத்துப் பெருமாள் வருக
    இராவணன் கொடுமை தீர்த்தாய்; துன்பம்
    'இரா'வணம் எமக்கும் இன்னருள் புரிக
    கம்சன் கொடுமை களைந்தோய் வருக
    காலனை வெல்லக் கைவலி தருக
    நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்
    காதில் குண்டலம் கையில் வில்லொடு. 78

    தண்டைக் காலில் சலங்கை குலுங்க
    அண்டையில் வந்து அருளே புரிக
    கவுரவர் தம்மைக் களத்தில் வென்றாய்
    கவுரவம் காக்கக் கண்ணா வருக
    பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
    படித்தவன் மகிழப் பரமே வருக
    மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய
    சான்றோன் பாதம் தாவி அணைத்தேன். 86

    சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
    பக்கென உந்தன் பாதம் பற்றினேன்
    கொக்கென நின்று குறிவைத் திருந்தேன்
    அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன்
    இக்கணம் என்னை ஏங்க விடாமல்
    தக்கவ னேநீ தயவுடன் அருள்க !
    கல்லாய்ப் போனவள் காலடி பட்டு
    பெண்ணாய் ஆனது பிழையே அன்று ! 94

    உன்னால் தானே உலக இயக்கம்
    கண்ணனில் லாமல் கடல்வான் ஏது ?
    கண்ணனில் லாமல் கடவுளு மில்லை
    கண்ணனில் லாமல் கவிதையு மில்ல
    கண்ணனில் லாமல் காலமு மில்லை
    கண்ணனில் லாவிடில் காற்றே இல்லை
    எத்தனை பிறவி எத்தனை பிறவி
    அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால் 102

    சத்திய நாதன் தாள்களை மறவேன்
    தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்
    உன்னை நம்பி உனையே சேர்ந்தால்
    பிறவிக ளிலை நீபேசிய பேச்சு
    உலகில் போதும் ஒருமுறை மூச்சு
    உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு
    இங்கே நாங்கள் இருக்கும் வரையில்
    சங்கு முழங்கு தர்மம் நிலைக்க ! 110

    பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்
    மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
    இல்லை என்றொரு நாளில் லாமல்
    இன்னும் என்னும் ஆசை வராமல்
    தொல்லை என்பது துளியு மிலாமல்
    தொற்றும் நோய்கள் பற்றி விடாமல்
    முதுமைத் துயரம் மூண்டு விடாமல்
    படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல் 118

    சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு
    நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
    என்றும் பதினா றிளமை வழ்ங்கு
    இப்பணி தொடர அற்புதம் காட்டு
    தளரா மேனியில் சக்தியைக் கூட்டு
    தாய்போ லிருந்து சாதம் ஊட்டு
    வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென
    ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு ! 126

    உலகில் ஒருவன் உத்தமன் இவனென
    உயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு
    சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்
    சரிசரி சரியெனத் தலையை அசைக்க
    பொலிபொலி பொலியெனப் புகழும் விளங்க
    மளமள மளவென மனையிருள் நீங்க
    கலகல கலவெனக் காசுகள் சேர
    தளதள தளவெனத் தர்மம் தழைக்க 134

    வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க
    ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க
    ஐயா சரணம் சரணம் சரணம்
    அடியவன் வாழ்வில் நீயே கவசம்
    கவசம் கவசம் கவசம் கவசம்
    வந்தது வாழ்வில் மன்னவன் கவசம்
    கவசம் கவசம் கவசம் கவசம்
    வாழ்க்கை என்றும் கோபுரக் கலசம் ! 142

    அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
    அவனே துணையென அறிவோம் அறிவோம்
    அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
    அவனிடம் எதையும் தருவோம் தருவோம்
    ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா
    ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய
    ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய !



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக