செவ்வாய், 15 மே, 2018

ஸ்ரீவைபவ லட்சுமி விரத பூஜை முறை:

ஸ்ரீவைபவ லட்சுமி விரத பூஜை முறை:ஸ்ரீவைபவ லட்சுமி விரத பூஜை க்கான பட முடிவு
பூஜைக்குரிய பொருட்கள்: 
  • ஸ்ரீவைபவ லட்சுமிபடம் மற்றும் யந்திரம்
  • வெள்ளி, பித்தளை, செம்பு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றினால் செய்த குடம் அல்லது செம்பு - தீர்த்தம்
  • அரிசி
  • தேன்
  • மஞ்சள் பொடி
  • குங்குமம்
  • சந்தனம்
  • வெற்றிலை பாக்கு
  • பழம்
  • புஸ்பம்
  • ஊதுபத்தி
  • கற்பூரம்
  • சாம்பிராணி
  • தேங்காய்
  • தாலிச்சரடு
  • அர்ச்சனை செய்ய குங்குமம், புஸ்பம் அல்லது நாணயங்கள் -
  • ஆசன பலகை
  • நைவேத்தியம் - சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயாசம்.
பூஜையை வெள்ளிக் கிழமை மாலை விளக்கேற்றும் நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும். பூஜை செய்யும் இடம் மிகவும் தூய்மையாகவும், அமைதியாகவும் இருத்தல் அவசியம். பூஜையை ஆரம்பிக்கும் முன் கை, கால்களை சுத்தம் செய்து விட்டு திருவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். 

ஒரு மனைப்பலகையை போட்டு கிழக்கு முகமாக உட்கார வேண்டும். ஆசன பலகைக்கு முன் ஸ்ரீ வைபவ லக்ஷ்மி கோலம் போட்டு அதன் மேல் அரிசியை சதுரமாக பரப்பி சமமாக நிரவி விட வேண்டும். அரிசியின் மேல் பூர்ண கும்பத்தை வைத்து அதில் ஏலக்காய், கிராம்பு, வாசனை கலச திரவியங்கள், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ இவைகளைச் சேர்த்த தீர்த்தத்தால் நிரப்பி வைக்கவும். 

கலசத்தின் மேல் தட்டு அல்லது கிண்ணம் வைத்து நாணயங்களால் நிரப்ப வேண்டும். கலசத்தின் அருகில் ஸ்ரீ வைபவ லட்சுமி யந்திரத்தையும், ஸ்ரீ வைபவ லட்சுமி படத்தையும் வைக்க வேண்டும். கலசம், யந்திரம் மற்றும் லட்சுமி படத்திற்கு சந்தனம் குங்குமமிட்டு பூக்களால் அலங்கரித்துக் கொள்ளவும்.

கலசத்தின் முன் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு தாம்பூலம் மற்றும் நிவேதனப் பொருட்களை ஒரு தட்டில் நிரப்பி கலசத்தின் முன்பு வைக்க வேண்டும். 

முதலில் விக்னேச்வர பூஜையைச் செய்த பிறகு ஸ்ரீவைபவ லக்ஷ்மீ பூஜை செய்ய வேண்டும்.
“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபசாந்தயே” என்ற கணபதி மந்திரம் சொல்லி பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
மகாலக்ஷ்மி அருளிய 

“மங்களே மங்களதாரே
மாங்கல்ய மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேஹி
மாங்கல்யம் தேஹிமே ஸதா.”
என்ற மந்திரத்தையும், “ஸ்ரீசூக்தம்” மற்றும் லக்ஷ்மி ஸ்தோத்ரம் சொல்லி ஸ்ரீ வைபவ லக்ஷ்மியை வழிபடலாம்.

கலசத்திலுள்ள நீரை பூஜை செய்தவர் சிறிதளவு உட்கொண்டு தன் விரதத்தை முடித்துக் கொள்ளலாம். மீதியுள்ள தீர்த்தத்தை தன்மீதும், வீடு முழுவதும் தெளித்தும், வந்தவர்களுக்கும் தீர்த்தமாக கொடுக்கலாம். மீதமுள்ளதை துளசிச் செடியில் ஊற்ற வேண்டும். கலசத்தின் கீழ் உள்ள அரிசியை அரிசிப் பானையில் போட்டு வைத்துக் கொள்ளலாம். 

விரதத்தை பூர்த்தி செய்கின்ற அன்று சர்க்கரைப் பொங்கல் நைவேத்திய பிரசாதத்துடன் , வெற்றிலை பாக்கு, மஞ்சள் குங்குமம், தாலிச் சரடு, ஒரு ரூபாய் நாணயம் ,வாழைப்பழம் ஆகிய மங்களப் பொருட்களை வைத்து சுமங்கலிகளுக்கு  கொடுக்க வேண்டும். பூஜையில் வைத்துள்ள நாணயத்தை பத்திரப்படுத்தி ஒவ்வொரு பூஜைக்கும் உபயோகப்படுத்தவும். அந்த நாணயங்களை செலவு செய்யக்கூடாது. 


ஸ்ரீ வைபவ லட்சுமி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கும், அதில் கலந்து கொள்பவர்களுக்கும் செல்வம் பெருகும், அஷ்ட ஐஸ்வர்யமும் உண்டாகும். மாங்கல்ய பாக்கியம் பாக்கியம் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும்.

விரதமகிமை : 

இந்தக் கதையை வெள்ளிக்கிழமைதோறும் விளக்கேற்றி வைத்து படித்தால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பூஜை முடிந்தபின் உங்களால் இயன்ற அளவு வைபவ விரத பூஜை புத்தகங்களை வாங்கி அதனுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் குங்குமம், தாலிச் சரடு, ஒரு ரூபாய் நாணயம் வாழைப்பழம் ஆகிய மங்களப் பொருட்களை வைத்து சுமங்கலிகளுக்கு தானம் செய்தால் செல்வம் பெருகும். புத்திரபாக்கியம், தாலி பாக்கியம், உடல் ஆரோக்கியம், உண்டாகும். வழக்குகள் வெற்றியடையும், மனதில் சந்தோசமும், நிம்மதியும் உண்டாகும். 

இந்த பூஜையை குபேர தம்பதிகள் செய்ததால் அவர்களுக்கு சங்கநிதியும், பத்மநிதியும் கிடைத்தன. இந்த பூஜையை வெள்ளிக்கிழமை தொடங்கி 11-வது வெள்ளிக்கிழமை பூர்த்தி செய்வது விசேஷம். இந்த ஸ்ரீவைபவ லட்சுமி பூஜைக்கு கடுமையான நியமங்கள் எதுவும் கிடையாது. தனியாகவோ அல்லது சுமங்கலிகள் (9, 11, 21, 51, 101 எண்ணிக்கையில்) கூடியிருந்தோ பூஜை செய்யலாம்.

1. இந்த பூஜைக்கு இத்தனை வெள்ளிக்கிழமைகள் தான் என்பது இல்லை. பக்தர்கள் தங்கள் மனதில் நினைத்தது நிறைவேறிய பின்னாலும் கூட நன்றி செலுத்தும் பொருட்டு பூஜையைத் தொடர்ந்து செய்யலாம். 

2. பக்தர்கள் ஊர்ப்பயணம் மேற்கொள்ளும் போது ஸ்ரீவைபவ லட்சுமியின் படம் அல்லது தங்க நகைகளைக் கொண்டு இருந்த இடத்திலேயே இனிப்பு நைவேத்தியம் (வெல்லம், சர்க்கரை, பழங்கள்) செய்தாலும் பலன் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக