புதன், 21 மார்ச், 2018

வெற்றியை விரைந்து அளித்திடும் வாராஹி

வெற்றியை விரைந்து அளித்திடும் வாராஹிவராஹி பூஜை க்கான பட முடிவு




ஆஷாட நவராத்ரி எனும் வாராஹி நவராத்ரி ஆரம்பம்

லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியாகப் போற்றப்படுபவள் வாராஹி தேவி. ‘ஜகத் கல்யாண காரிண்ய’ எனும்படி உலகம் உய்ய வேண்டிய பணிகளில் அருளும் சப்த மாதர்களில் தலையானவள் இந்த வாராஹி. மகாகாளி, தாருகாசுரனோடு போர் புரிந்தபோது அவளுக்குத் துணை நின்றவள். யக்ஞ வராஹ மூர்த்தியின் சக்தி. சும்பாசுரனோடு சண்டிகா புரிந்த போரிலும் உதவியவள். சிங்கமதை வாகனமாய்க் கொண்டு மூவுலகங்களையும் ஆளும் லலிதா பரமேஸ்வரியின் சேனா நாயகியாய் விளங்குபவள், இந்த அம்பிகை. லலிதையின் ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி எனும் பொறுப்பில் தண்டினீ  என இவள் பக்தர்களால் போற்றப்படுகிறாள்.

ஹிரண்யாட்சனைக் கொல்ல வராஹ ரூபம் தரித்து சங்கு, சக்கரம், கதை ஏந்தி அவனை வதைத்து பூமாதேவியை கடலில் இருந்து மீட்டார் திருமால். உலகின் ஜீவாதாரமான பூமிதேவியை உலகிற்கு மீட்டுத் தந்த மூர்த்தியின் அம்சமான வாராஹியும் பராக்ரமங்களில் தன்னிகரில்லாதவள். திருமாலின் ஒப்புயர்வற்ற யக்ஞ வராஹ வடிவத்தை எடுத்துக் கொண்ட சக்தி எவளோ, அவளே அங்கு வாராஹி வடிவம் தாங்கி வந்து சேர்ந்தாள் என தேவி மஹாத்மியம் எட்டாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வராஹ மூர்த்தியின் அம்சமே வாராஹியாவாள். நிகரற்ற அருளும் இணையற்ற ஆற்றலும் கொண்ட வாராஹியைப் பற்றியும் அவளின் பல்வேறு வடிவங்களை பற்றியும் மந்திர சாஸ்திர நூல்கள் பலவாறு பாராட்டிப் பேசுகின்றன. 

தந்திர ராஜ தந்த்ரம் எனும் நூல் இவளை லலிதையின் தந்தை என்றே குறிப்பிடுகிறது. பெண் தெய்வமாக இருப்பினும் காக்கும் திறத்தாலும் ஆற்றல் வளத்தாலும் ஆண் தெய்வமாகவே அது இத்தேவியை வர்ணிக்கிறது. இதே கருத்தை பாவனோபநிஷத், ‘வாராஹி பித்ரு ரூபா’ என ஆமோதிக்கிறது. இத்தேவியை பஞ்சமி தினத்தன்று வழிபடுதல் விசேஷம். ‘பஞ்சமி பஞ்சபூதேஸி’ என லலிதா ஸஹஸ்ரநாமம் இவள் பெருமை பேசுகிறது. ‘பஞ்சமி பைரவி பாசாங்குசை’ என்று அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டரும் இந்த வாராஹியை போற்றுகின்றார். காட்டுப்பன்றியின் முகம், அழகிய பெண்ணின் உடல் என்ற தோற்றத்துடன் காட்சியளிப்பவள் இவள். எட்டு கைகளை இத்தேவி கொண்டிருக்கிறாள். 

என்ன பேசுவது என நடுக்கம் வந்தால் வாராஹி என நினைத்தால் வார்த்தைகள் தானே வரும். வாராஹி காவல் தெய்வம். காலம் எனும் கடலில் நீந்தும் நம்மை கரை சேர்க்கும் கப்பல் அவள். வாராஹி உபாசனை உக்ர நரசிம்ம உபாசனையைப் போல் பயங்கரமானது என்று பாமரரிடையே எண்ணம் உள்ளது. ஸ்ரீவித்யா பூஜை முறையில் மஹாவாராஹியின் இடம் மிக மிக உயர்ந்தது. மஹாவாராஹியை ஏதோ பயங்கர தேவதையாகக் கருதுவது தகாதது. கருணைக்கடலான தேவி அவள். இத்தேவியின் கரங்களில் சங்கு, சக்கரம் இருப்பது, தன் பதி திருமாலைப்போல் கணவனுக்கேற்ற அனந்த கல்யாண குணங்கள் கொண்ட மனைவியாய் இவள் திகழ்வதை உணர்த்துகிறது. வராஹி பூஜை க்கான பட முடிவு

வலக்கரம் அபய முத்திரை காட்டி அடியாருக்கு அடைக்கலம் தந்து, பயத்தைப் போக்குகிறது. இவள் ஏந்தியுள்ள கலப்பை நான்கு விதங்களாகச் செயல்படுகிறது. முதலாவதாக கடினமான பூமியைப் பிளந்து, இரண்டாவதாக ஆழமாக உழுது, மூன்றாவதாக மண்ணை மிருதுவாக்கி, கடைசியில் அதில் பயிர்கள் செழித்து வளர்ந்து, அதனால் நமக்கு உணவு கிடைக்கும்படி செய்கிறது. அதுபோல, நாம் உண்ட உணவு செரிக்காமல் இருந்தாலும் அதையும் உழுது உணவைப் பக்குவப்படுத்தி மிருதுவாக்கி திசுக்கள் வளர உதவி செய்கிறது. நம் ஐம்புலன்களாலும் நுகரும் இறுகிய மனதையும் தெளிவிலா புத்தியையும் மிருதுவாக்கி, மென்மையான நெஞ்சத்தில் அன்பு வளரவும் தெளிவடையும், புத்தியில் இறையுணர்வு வளரவும் வழி வகுக்கிறது. 

மேலும் பல பிறவிகளின் கர்மவினையால் கெட்டிப்பட்ட ஆன்மாவை, பூமியில் புதைந்துள்ள கிழங்கை கலப்பையால் அகழ்ந்து மேலே கொண்டு வருவதைப் போல், ஞானக் கலப்பையால் நம் ஆத்மாவைத் தோண்டி ஞானம் ஏற்படும்படியும் செய்கின்றது. இந்த தேவி வராஹ முகம் கொண்டதேன்? ‘மானமில்லாப் பன்றிபோல் உபமானமுமில்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. தேவர்களுக்கு அதிபதியான அதிரூப சௌந்தர்யம் கொண்ட திருமால் கடலில் புதைந்த உலகை மேலே கொண்டு வர மானமில்லாப் பன்றி வடிவெடுத்ததில் அவனுக்கு நிகருண்டோ என வியக்கின்றனர் சான்றோர். பன்றி மானமில்லாததாகக் கருதப்படுவதாயினும் அதன் உயர்ந்த ஆன்ம குணம் நமக்குப் பாடமாகத் திகழ்கிறது. 

மானம் இல்லையெனில், அவமானமும் இல்லையன்றோ? மான அவமானம் எனும் இரண்டிலும் பாதிக்கப்படாமல் இருப்பதே ஞான சாதனை. சுகத்தையே வேண்டாம் என்பவருக்குத் துக்கம் ஒன்றுமே செய்யாதல்லவா? ‘‘நீ ஞானத்தில் உயரவேண்டுமெனில் துடைப்பம் போலிரு’’ என்பர் பெரியோர். “துடைப்பம் தூசிகளைச் சேர்த்து ஓர்புறமாக ஒதுக்கிவிட்டு, தான் ஒரு மூலையில் ஒதுங்கிக் கொள்கிறது. அது ஒருநாள் தன் பணியைச் செய்யாவிடில் வீடே குப்பைக் கூளமாய் மாறி, நோய்கள் உண்டாகும் சூழ்நிலை உருவாகிறது. அதுபோல் நீயும் கர்வம் கொள்ளாமல் உன் கடமையைச் செவ்வனே செய். உன்னை நினைத்து பெருமைப்படாதே! புகழுக்கு ஆசைப்படாதே. உன் பணி முடிந்ததும் ஒதுங்கிக் கொள். எல்லோரும் நலமுடன் வாழ துடைப்பம்போல் பாடுபடு’’ என்பது ஆன்றோர் வாக்கு. 

அதுபோல் வாராஹியும் தன் அடியார்களின் பாவ பீடைகளை எல்லாம், மாயா மாசுக்களை எல்லாம் களைந்து அவர்களைத் தூய்மைப்படுத்துகிறாள். இவள் ஆரோகணித்து வரும் ரதம், கிரி சக்ர ரதம் என்றும் இவளின் யந்திரம் கிரியந்த்ரம் என்றும் போற்றப்படுகிறது. (கிரி-பன்றி). காட்டுப் பன்றிகளால் இழுக்கப்படுவதால் அந்த ரதத்திற்கு அப்பெயர். பராபட்டாரிகையான லலிதையின் மனக் குறிப்பறிந்து ரதத்தைச் செலுத்துவதால் ‘ஸங்கேதா’ என இவள் போற்றப்படுகிறாள். சண்ட முண்டாசுரர்களை காளி வதம் செய்தபின் சாமுண்டி எனப் பெயர் கொண்டாள். சும்ப நிசும்பர்களுடனும் ரக்த பீஜனுடன் அவள் போரிடும்போதும் வாராஹி துணைக்கு வந்தாள் என்பதை தேவி மகாத்மியம் கூறுகிறது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவள் இவள். இந்த அன்னைக்குரிய காயத்ரி மந்திரங்களுள் ஒன்றான

ஓம் ஸ்யாமளாயை வித்மஹே 
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத் 

எனும் மந்திரத்தை துன்பம் வரும் போது மட்டுமல்ல எப்போதும் ஜபித்துக் கொண்டிருந்தால் தேவியின் திருவருள் சடுதியில் கிட்டும்.

ஆதி வாராஹி

நீலநிறம் கொண்டவள், சந்திரன், சூரியன், அக்னி மூவரையும் த்ரிநேத்ரங்களாகக் கொண்டவள். தேவர்களாலும், மூவராலும் பணிவிடை செய்யப்படுபவள், சகல மாத்ருகா தேவதைகளும், சதுஷ்ஷஷ்டி கோடி பைரவர்களாலும் பாதுகாக்கப்படுபவள். சர்வாலங்கார பூஷிதையாக பக்தர்களின் நோய்களைத் தீர்க்கும் சாத்திரங்களையும் அஸ்திரங்களையும் ஏந்தி கலப்பை உலக்கையுடன் காட்சி தருபவள்.

லகுவாராஹி எனும் உன்மத்த பைரவி

பக்தர்களின் துயரங்களைத் தீர்த்து அவர்களின் பயத்தை நீக்கியருள்பவள். அவர்களின் எதிரிகளின் கொழுப்பை அடக்கி அவரின் அறிவுத்திறனை உன்மத்தமாக்குபவள். வாராஹியின் அங்கதேவி. திருமாலின் ஆத்மசக்தியாய் திகழ்ந்து கடலிலிருந்து பூமியை மூக்கின் நுனியில் சுமந்து வந்த மகாசக்தி. இத்தேவியை மிகப்பெரிய கொம்புகள் கொண்ட சரீரமுடையவளாக தியானிக்க வேண்டும்.

பஞ்சமி

லலிதா திரிபுரசுந்தரியை தாங்கும் பஞ்சமூர்த்திகளில் சதாசிவனின் பத்தினி இந்த பஞ்சமி. அவருடன் இணைந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களைப் புரிபவள். சாலோக்யம், சாமிப்யம், சாருப்யம், சாயுஞ்யம் மற்றும் கைவல்யம் எனும் ஐந்து மோக்ஷ நிலைகளில் கடைசியதான கைவல்ய நிலையை அருள்பவள் இவளே. பக்தர்களை தந்தையைப்போல் காப்பவள். மனிதனின் எலும்புக்கு அதிதேவதை இவள். எலும்பு உறுதியாக இருந்தால்தானே அதைச்சுற்றி ரத்தமும் சதையும் நன்றாக நிலைபெறும். பஞ்சமி பஞ்சபூதேசி என லலிதா ஸஹஸ்ரநாமம் இவளைத் துதிக்கிறது. அபிராமபட்டரோ பஞ்சமி பைரவி பாசாங்குசை எனத் தொடங்கும் அபிராமி அந்தாதிப் பாடலில் இவளை போற்றி மகிழ்ந்தார்.

அஸ்வாரூடா வாராஹி

அபராஜிதம் எனும் யாராலும் வெல்ல முடியாத குதிரையின் மீதேறி வருபவள் அஸ்வாரூடா வாராஹி. இவள் லலிதா பரமேஸ்வரியின் குதிரைப் படைத்தலைவி. ஒரு கரத்தில் தாமரையை ஏந்தி, மறு கரத்தில் பாசம், மற்றொரு கரத்தில் அங்குசம், மேலுமொரு கரத்தில் சாட்டை ஏந்தி பறக்கும் கூந்தலுடனும் கருணை மழை பொழியும் கண்களுடனும் சர்வாலங்கார பூஷிதையாய் இவளை தியானம் செய்தால் கிட்டாததுதான் எது?

ஸ்வப்ன வாராஹி

கருநிறமேக நிறங்கொண்டவள். முக்கண்கள், வராஹ முகம் கொண்டவள், புன்னகை பூத்த முகத்தினள், கத்தி, கேடயம், பாசாங்குசம் ஏந்தியவள். உலகை உய்விக்க குதிரையில் ஏறி வருபவள் என மந்த்ரமஹோததி எனும் நூலும், ஸ்ரீதத்வநிதி எனும் நூலும் இத்தேவியை போற்றிப் பணிகின்றன. இத்தேவியின் மந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்று ஜபித்து வந்தால் அவர்களின் கனவில் தேவி தோன்றி நற்பலன்களை உரைப்பாள். கோர்ட், வழக்கு என அலைந்து கொண்டிருப்பவர்கள் இத்தேவியை வழிபட சிக்கல்கள் தீரும் என்பது நம்பிக்கை. ராஜராஜசோழன் எந்த காரியத்தைத் தொடங்கினாலும் வாராஹியை வழிபட்டுத்தான் ஆரம்பிப்பது வழக்கம். வாராஹியை வெற்றி தெய்வம் என்றே போற்றினார் அவர்.

காசியில் பாதாள வாராஹியாகவும், திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரி வடிவில் மகாவாராஹியாகவும், உத்திரமேரூரில் மஹா வாராஹியாகவும், பள்ளூரில் அரசாலை அம்மனாகவும், தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தில் ஆதி வாராஹியாகவும், இலுப்பைக்குடியில் ஸிம்ஹாரூடாவாகவும், பூந்தமல்லியில் மஹிஷாரூடாவாகவும், நார்த்தாமலையில் ஆதிவாராஹியாகவும் தேவி அருள்கிறாள். ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக் கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட கோரிய பலன் கிட்டுவது உறுதி. மகாவாராஹி யந்த்ரம் பெரிய தொழிலகங்களில் நிறுவப்படுமாயின் தொழில் வளம் சிறக்க உதவும். 

ஒரு நாட்டின் தலைநகரத்தில் மஹாவாராஹி யந்திரமும் மூர்த்தமும் நிறுவப்படுவது மிகமிக அவசியம்.இத்தேவி ஆரோகணித்து வரும் சிம்மம் வஜ்ரகோஷம் என வணங்கப்படுகிறது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு இத்தேவி எருமை மீதும் ஏறி வருவாள். சில சமயங்களில் நாகவாகனத்திலும் அமர்ந்தருள்வாள் என தேவி பாகவதம் கூறுகிறது. இந்த வாராஹி குதிரை மீதேறி வரும்போது அஷ்வாரூடா வாராஹி என போற்றப்படுகிறாள். குதிரைக்காரி என சித்தர்கள் போற்றும் தேவி இவள். மகாவாராஹி எனும் ஆதிவாராஹி, பிருஹத் வாராஹி, லகு வாராஹி, பஞ்சமி வாராஹி, அஷ்வாரூடா வாராஹி, சுத்த வாராஹி, தண்டநாதா வாராஹி, தும்ர வாராஹி, ஸ்வப்ன வாராஹி, வார்த்தாளி என வாராஹியின் வடிவங்கள் பலப்பல.

வாராஹிக்கு பூமிக்கு அடியில் விளையும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு போன்றவற்றோடு கட்டாயமாக பூண்டும் வெங்காயமும் சேர்ந்த பலகாரம் இடம்பெற வேண்டும் என பூஜை முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தவிர சர்க்கரைப் பொங்கல், வெல்லம் சேர்த்த பாயசம், மிளகு, சீரகம் கலந்த தோசை, தோல் எடுக்காத முழு உளுந்தில் செய்த வடை, எல்லா பருப்புகளும் சேர்ந்த ஆமைவடை, வாசனைப் பொருட்கள் சேர்த்த எருமைப் பால், எருமைத் தயிர், எள்ளுருண்டை, தயிர் சாதம், மொச்சை சுண்டல் மற்றும் தேனும் இடம் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. வெண்தாமரையும் செந்தாமரையும் இந்த அன்னையின் பூஜைக்கு உரியவை. இரவு நேர பூஜையே இந்த தேவிக்கு உரியது
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக