புதன், 21 மார்ச், 2018

செல்வ வளம் பெற காயத்ரி மந்திர வழிபாடு

செல்வ வளம் பெற காயத்ரி மந்திர வழிபாடு










‘‘மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாக இருக்கிறேன்’’ என்று பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு காய்திரி  மந்திரம் உயர்வானது. சிறப்பு வாய்ந்தது. இது மகரிஷி விஸ்வாமித்திரர் உபதேசித்த மந்திரம் என்று கூறப்படுகிறது.


ஓம் பூர்புவ ஸ்வஹ
தத் ஸ்விதூர் வரேணியம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்ரசோதயாத்


- இதுதான் காயத்ரி மந்திரமாகும். இதன் பொருள் ‘‘பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தியான அந்தப் பரம ஜோதி சொரூபமான  சத்தியத்தை நான் தியானிக்கிறேன். அந்த பரம சக்தி ஒளி என் அறிவைத் தூண்டி என்னை உண்மையை அறிந்த நிலைக்கு உயர்த்தட்டும்’’  என்பதாகும். காயத்ரி மந்திரம் சூரியனை குறித்தே உருவாக்கப்பட்டது என்பது சிலரது வாதமாகும். காயத்ரி மந்திரம் உலகுக்கு பொதுவானது.  பொதுவான பரம்பொருளை தியானிக்க சொல்வதால் எல்லாரும் இந்த மந்திரத்தை உச்சரித்து பயன் பெறலாம். காலை, மதியம், மாலை மூன்று  நேரமும் காயத்ரி மந்திரம் சொல்வது நல்லது. ஆலய வழிபாடுகளின் போது ஒவ்வொரு சன்னதிலும் இறை மூர்த்தத்துக்கு ஏற்ப காயத்ரி மந்திரம்  சொன்னால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும். காயத்ரி மந்திரத்தை நம் இஷ்டத்துக்கு உச்சரிக்கக் கூடாது. 5 இடங்களில் நிறுத்தி ஜெபிப்பதே சரியான  முறையாகும்.

முதலாவது நிறுத்தம் - ஓம், இரண்டாவது நிறுத்தம் - பூர் புவஸ்வஹ. மூன்றாவது நிறுத்தம் தத் ஸ்விதூர் வரேணியம். நான்காவது நிறுத்தம் - பர்கோ  தேவஸ்ய தீமஹி. ஐந்தாவது நிறுத்தம் ‘‘தியோ யோ நஹ ப்ரசோதயாத்’’ என்று இருத்தல் வேண்டும். காயத்ரி மந்திரத்தை முதலில் சொல்லத்  தொடங்கும் போது 9 தடவை சொல்ல வேண்டும். அடுத்த வாரம் அதை 18 ஆக உயர்த்த வேண்டும். மூன்றாவது வாரம் 27 தடவை சொல்ல  வேண்டும். இப்படி ஒன்பது ஒன்பதாக உயர்த்தி தினமும் காயத்ரி மந்திரத்தை 108 தடவை சொல்லும் வகையில் உங்களை பழக்கப்படுத்திக் கொள்ள  வேண்டும். காயத்ரி மந்திரம் 27 அட்சரங்களைக் கொண்டது. காயத்ரி மந்திரம் எப்படி தோன்றியது? ஒரு சமயம் ஞானம் பெற விரும்பிய முனிவர்கள்  வேதக் கடலைக் கடைந்தனர். அப்போது ‘‘த்ரயீ’’ என்ற வேதசாரம் கிடைத்தது. அதை காரணமதி எனும் மத்தினால் கடைய அது காயத்ரி வடிவமாக  உருவம் பெற்றது.

காயத்ரி தேவிக்கு 5 முகங்கள் உண்டு. பஞ்ச பூதங்களும் காயத்ரி தேவியில் அடக்கம் என்பதை இந்த உருவம் உணர்த்துகிறது. காயத்ரி தேவி ரத்தின  மாலை அணிந்து, கமண்டலம், தாமரை, ஜெபமாலை ஆகியவற்றை ஏந்தி தாமரை ஆசனத்தில் வீற்றிருப்பாள். காயத்ரி மந்திரத்துக்கு சாவித்திரி என்றும்  சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. எனவே இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், மதியம் சாவித்திரிக்காகவும், மாலையில் சரஸ்வதிக்காகவும்  ஜெபிக்க வேண்டும். காலையில் காயத்ரிதேவி குழந்தை வடிவமாக காட்சி அளிப்பாள். அப்போது அவள் ரிக் வேதம் உச்சரிப்பாள். மதியம் நடுத்தர  வயது பெண் போல காயத்ரி காட்சி அளிப்பாள். அப்போது அவள் யஜுர் வேதத்தை சொல்வாள். மாலையில் காயத்ரி முதிர்ந்த பெண்ணாகத்  தோன்றுவாள். அப்போது சாமவேதம் உச்சரிப்பாள். 

இதன் மூலம் காயத்ரி எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் ஆகிறாள். ஆகையால் எப்போதும் காயத்ரி மந்திரத்தை உச்சரித்த பிறகே மற்ற  மந்திரங்களை சொல்ல வேண்டும். காயத்ரி மந்திரத்தை யார் ஒருவர் தினமும் விடாமல் சொல்லி வருகிறாரோ நிச்சயம் அவர் செல்வந்தர் ஆகி  விடுவார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பலர் வாழ்வில் இது நடந்துள்ளது. ஆனால் காயத்ரி மந்திரம் சொல்வதற்கு மனத்தூய்மையும் உடல்  தூய்மையும் மிக, மிக அவசியம். சுத்தமான இடத்தில் இருந்து தான் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். காயத்ரி மந்திரத்தை எப்போது  சொல்லத் தொடங்கினாலும் 27 தடவை சொல்வது மிகவும் நல்லது. காயத்ரி மந்திரத்தை வெளியில் கேட்கும்படி உச்சரித்தால் 10 மடங்கே பலன்  கிடைக்கும். உதடுகள் மட்டும் அசைந்தபடி கூறினால் 100 மடங்கு பலன் கிடைக்கும். 

ஆனால் உதடு கூட அசையாமல் மனதுக்குள் காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால் ஆயிரம் மடங்கு பலன் உண்டாகும். ஞாயிற்றுக்கிழமை மாலை  4.30-6 மணி வரையிலான ராகு காலத்தில் காயத்ரி மந்திரத்தை கூறினால் நாம் எதிர்பார்க்கும் பலன்கள் வந்து சேரும். தினமும் காயத்ரி மந்திரம்  சொல்லி வருபவர்களுக்கு ‘‘ஆத்மசுத்தி’’ கிடைக்கும். ஆலயத்தின் எந்த பகுதியில் நின்றும் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். ஆனால் மனம்  தூய்மையாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறும் போது யாக சாலைகள் அருகில் அமர்ந்து காயத்ரி  மந்திரம் சொல்லாம். இது 100 மடங்கு பலன்களை அதிகமாக தரும். காயத்ரி மந்திரத்தை சொல்ல, சொல்ல குடும்பத்தில் மங்களம் உண்டாகும்.  அதோடு நான்கு வேதங்கள் ஓதியதன் பலன் கிடைக்கும்.

‘‘மூன்று வருடங்கள் காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வருவர், வாயு போல சுதந்திரமாக இயங்கி பிரம்மத்தை சென்று அடைவார் என்று மனுஸ்மிருதி  நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலயத்துக்கு செல்லும் போதும், மற்ற நேரங்களிலும் காயத்ரி மந்திரத்தை ஜெபித்து மனம் பக்குவப்பட்டு விட்டால்,  அவர் எந்த ஒரு செயலிலும் நிதானமாகவும் தெளிவாகவும் இருப்பார். காயத்ரி மந்திரத்தை தினமும் மூன்று நேரம் உச்சரிப்பவர்கள் எல்லா  விஷயங்களிலும் மிகச் சரியான முடிவு எடுப்பவர்களாக இருப்பார்கள். சத்தியவான் உயிரை காப்பாற்ற சாவித்திரி தேவிக்கு காயத்ரி மந்திரமே  உதவியது. முனிவரின் சாபத்துக்கு எதிராக கால கதியையே ஸ்தம்பிக்க வைத்த நளாயினிக்கு உதவியது காயத்ரி மந்திரமே. மும்மூர்த்திகளின்  சோதனையை அனுசுயா தேவி அறிந்து கொள்ள காயத்ரி மந்திரமே உதவியாக இருந்தது. 
தொடர்புடைய படம்
14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமர்-லட்சுமணர் இருவருக்கும் சோர்வு ஏற்படாமல் இருக்க காயத்ரி மந்திரமே உதவியாக இருந்தது. சுருக்கமாக  கூறினால், அவரவர் கோரிக்கைக்கு ஏற்ப, அந்தந்த தெய்வத்துக்கு உரிய காயத்ரி மந்திரங்களை ஆலய வழிபாடுகளின் போது சன்னதி முன்பு அமர்ந்து  ஜெபித்தால், வாழ்வில் எந்த கஷ்டமும் வராது. சில ஆலயங்களில் காயத்ரி தேவிக்கு தனி சன்னதி இருக்கும். அங்கு காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால்  முழுமையான பலன்களைப் பெறலாம். கடவுளுடன் மிக, மிக எளிமையாக நம்மை இணைப்பது காயத்ரி மந்திரங்கள்தான். எனவே காயத்ரி  மந்திரங்களை தெரிந்து கொண்டு ஆலய வழிபாடுகளின் போது அவற்றை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக