வியாழன், 29 டிசம்பர், 2016

மார்கழியின் சிறப்புக்கள்

மார்கழியின் சிறப்புக்கள் 


வீதியெங்கும் வண்ணக் கோலங்கள் மின்னுவதும், விடியற்காலையில் ஒலிக்கும் பஜனைப் பாடல்களும், மார்கழி மாதத்தின் தனிச் சிறப்புகள்.  ‘மார்கழித் திங்கள்  மதி நிறைந்த நன்னாளாம்’ என்று கோதை நாச்சியார் தனது திருப்பாவைப் பாடல்களால் கண்ணனை கன்னித் தமிழின் துணை  கொண்டு ஆராதனை செய்த  மாதம் இது. ஆண்டாளின் அடிதொட்டு, மணமாகாத பெண்கள் தாங்கள் நினைத்தபடி வரன் அமைய இன்றளவும்  மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து  முடித்து திருப்பாவைப் பாடல்களை மனமுருகப் பாடுவதை சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில்  காண முடிகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நம்  இல்லங்களில் மார்கழி மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் எதுவும் செய்வதில்லை. 


அப்படியிருக்க  மார்கழி மாதத்தை ஏன் உயர்வாகக் கொண்டாட வேண்டும்?

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது தேவர்களைப் பொறுத்த வரை  ஒரு நாள் கால அளவே ஆகும். அந்த வகையில் கணக்கிட்டால்  நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே. ( 1 மாதத்திற்கு 2 மணி  நேரம் வீதம் 12 மாதத்திற்கு 24 மணி நேரம் = 1 நாள்) இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறு மாத  காலம் தேவர்களுக்கு பகல்  பொழுதாக அமைகிறது. இந்தக் காலத்தை உத்தராயணம் என்று அழைக்கிறோம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம்  வரை வருகின்ற ஆறு மாத காலம்  தேவர்களுக்கு இரவுப் பொழுதாக அமைகிறது. இதை தட்சிணாயணம் என்று சொல்கிறோம். இந்த தட் சிணாயணத்தின் நிறைவுப் பகுதி - அதாவது, தேவர்களைப்  பொறுத்தவரை இரவுப் பொழுது - நிறைவடையும் காலமான அதிகாலை 4 மணி  முதல் 6 மணி வரையான நேரமே மார்கழி மாதம் என்று பொருள்  கொள்ளலாம். 

இந்த காரணத்தால்தான் தேவர்களை வரவேற்கின்ற விதமாக மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள்  வண்ணக்  கோலமிடுவதை வழக்கமாகக் கொண்டனர். ஆனால், இன்றைய காலத்தில் அதிகாலையில் எழுவதை சிரமமாகக் கருதும் சில பெண்கள்  முதல் நாள் இரவே  கோலம் போட்டு வைத்துவிட்டு பின்னர் உறங்கச் செல்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று என்பதை நினைவில் கொள்ள  வேண்டியது அவசியம்.  மார்கழியின் தனிச்சிறப்பே அதி காலையில் எழுந்து கோலமிடுவதுதான். அந்த நேரத்தில் கோலமிட்டு கோலத்தின் நடுவே  விளக்கேற்றி வைத்துப் பாருங்கள்,  மனதினில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்கும். மகாலட்சுமியின் அருள் பூரணமாகக் கிட்டும்.

ஜோதிட சாஸ்திர ரீதியாக ஆராய்ந்தால், மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை ‘மார்க்கசிர’  என்று  வடமொழியிலும் மார்கழி என்று தமிழிலும் அழைக்கிறோம். இந்த மிருகசீரிஷ நட்சத்திரம் ம்ருகண்டு மகரிஷிக்கு உரியது. ஜோதிடப்  பிதாமகராகத் திகழ்பவர்  ம்ருகண்டு மகரிஷி. இவரது ‘ம்ருகண்டு சூத்ரம்’ மற்றும் ‘ம்ருகண்டு வாக்கியம்’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே  அந்நாளில் 
பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. என்றும் சிரஞ்சீவியாக விளங்கும் மார்க்கண்டேயரின் தந்தை இந்த ம்ருகண்டு மகரிஷி என்பதும் மார்க்கண்டேயரின்  ஜென்ம  நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை.

சப்த சிரஞ்சீவிகள் என்றழைக்கப்படும் அஸ்வத்தாமர், மகாபலி, வியாஸர், ஹனுமான், க்ருபாசார்யர், பரசுராமர், விபீஷணர் ஆகிய ஏழு பேருக்கு  அடுத்தபடியாக  நேரடியாக சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெற்றவர் மார்க்கண்டேயர். தனது உயரிய பக்தியின் மூலமாக மரணத்தை வென்ற மகாயோகி  அவர். மார்கழி மாதத்திற்கு  உரிய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் உதித்த அந்த இளம் ஞானி தனது 16வது வயதில் மரணம் நிச்சயம் என்பதை  உணர்ந்தும் இவ்வுலக சுகங்களை  நாடாமல் இறைவனை மட்டுமே சிந்தையில் கொண்டிருந்தார். தனது அபரிமிதமான பக்தியினால் சிவலிங்கத்தைக்  கட்டித் தழுவியிருந்த அவரைக் கொண்டு  செல்ல நினைத்த எமதர்மனை சிவபெருமான் வதைத்த கதை நாம் அறிந்ததே. மார்க்கண்டேய சரித்திரம்  மரணத்தை வெல்லும் மார்கழி என்று இந்த மாதத்தின்  பெருமையை நமக்கு உணர்த்துகிறது. எனவேதான் ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்ய மார்கழி  மாதத்தை தேர்ந்தெடுப்பார்கள், விவரம் அறிந்தவர்கள்.

அரங்கநாதனையே மணாளனாக அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டாள் விரதமிருந்த மாதம் இது. அவரது உயரிய பக்தியின்  காரணமாகத்தான்  அவரால் ஆண்டவன் அடி சேர முடிந்தது.
அதே போன்று ராம நாம ஜபத் தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் பிறந்ததும் மார்கழி மாத  அமாவாசை நாளில்.மார்கழி மாதத்தில் வரும் வளர் பிறை ஏகாதசித் திருநாளை வைகுண்ட ஏகாதசி எனக் கொண் டாடுகிறோம்.
வைணவர்கள் மட்டுமின்றி  இந்துக்கள்  எல்லோருமே விரதம் இருக்கும் நாள் வைகுண்ட ஏகாதசி. விவரம் தெரியாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசி நாள் அன்று விரதம் இருப்பதோடு   உறங்காமல் கண் விழிக்கவும் செய்வார்கள். அந்த நன்னாளில் அதிகாலை வேளையில் ஆலயங்களில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அன்றைய தினத்தில்  பெருமாளை சேவிப்பவர்கள் சொர்க்கத்தை அடைவர் என்று நம்பிக்கைக் கொண்டி ருக்கிறோம். இவ்வாறு பக்தி சிந்தனைக்கு உரிய உயரிய மாதமாக மார்கழியை  வைத் திருக்கிறார்கள் நம் பெரியோர்கள்.

மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குரு  பகவான். அதாவது,  குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும்  நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள்  உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக  இணைந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டிய  காலமாக மார்கழியைக் கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள்.
‘மாதங்களில் நான் மார்கழி’ எ ன்று கீதையில் கண்ணன் சொன்னது பக்தி மார்க்கத்தால் என்னை  அடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டவே என்பதை நாம் உணர வேண் டியது அவசியம்.

நமது சொந்தக் காரியங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த ஒரு மாதமாவது இறைவனின் மேல் நமது முழு சிந்தனையையும் செலுத்த  வேண்டும்  என்ற காரணத்தினால்தான் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள். பக்தி மார்க்கத்திற்கு  வழிகாட்டும் மாதமாக  மார்கழியைக் கருதினார்கள். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் இது. பீடு என்றால் பெருமை மிகுந்த  அல்லது உயரிய என்று பொருள். பீடு  உடைய மாதமாகிய இதனை பீடை மாதம் என்று கூறுவது முற்றிலும் தவறு. 

இத்துணை சிறப்பு வாய்ந்த  இந்த மாதத்தில் நாமும் அதிகாலை நேரத்தில்  மட்டுமாவது இறைவனின் மீது சிந்தனையைச் செலுத்துவோம்; வாழ்வினில் வளம் பெறுவோம்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக