செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம் 

ஆவணி மாதம் பெளர்ணமி தினம் ஆண்களுக்காகக் கொண்டாடப்படும் பண்டிகைதான் ஆவணி அவிட்டம் ஆகும்.இதுதான் உபநயனம் என்பதும்!பூணுல் அணிந்து கொள்வதால் இப்பிறவியிலேயே  மற்றொரு பிறவி எடுத்ததாக அர்த்தம்.அதனால்தான் பூணூல் அணிபவர்களை "த்விஜர்" என்பர்.


பூணூல் அணியும் தினமான "ஆவணி அவிட்டம் "பிராமணர்களுக்கு மிகவும் புனிதமான பண்டிகை ஆகும்.எப்பொழுது ஒரு பிராமிண இளைஞனுக்கு  பூணூல் அணிவிக்கப்படுகிறதோ,அப்போது அவனுடைய மூன்றாவது கண் அதாவது ஞானக்  கண் திறந்து விடப்படுவதாக  நம்பிக்கை.


காயத்ரி ஜெபம் உபதேசம் பெற்றவர்கள்,பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூல் அணிந்து கொள்கிறார்கள். இதை குரு முகமாகத்தான் செய்ய வேண்டும்.

பூணூல் அணியும் வயது- எட்டு முதல் பதினாறு வயது ஆகும்.ஒரு குரு  மூலமாக காயத்ரி மந்திரம் ஓதி,குழந்தையை தந்தையின்  மடியில்  அமரவைத்து முதன்முதலாகப் புதிய பூணூல் போட்டு விடுவார்கள்.இதை ஒரு திருமண விழா போல் கொண்டாடுவார்கள்.அவ்வாறு பூணூலை அணிந்து கொண்டப்பின்,தினம் காயத்ரி மந்திரத்தை காலை,மதியம்,இரவு என 3வேளைகளிலும்  தவறாமல் ஓத  வேண்டும்.

காயத்ரி ஜெபம் தினமும் மனத்தூய்மையுடன் செய்வதால்  மனோபலம் உண்டாகிறது.காயத்ரி ஜெபம் பொருள் அறிந்து ஜபிப்பது  மிகவும் விசேஷம்.


உபகர்மம் 

'உபகர்மம்' என்பதுதான் தமிழில் 'ஆவணி அவிட்டம்' என்றழைக்கப்படுகிறது.ஆவணி அவிட்டத்தன்று வேதபாராயணம் செய்வது விஷேச பலனைத் தரும்.பிதுர்க்களைக் குறித்தும்,ரிஷிகளைக் குறித்தும் தர்ப்பணம் செய்ய வேண்டியது முக்கியமானதாகும்.இதுவே உபகர்மாவின் உட்பொருள்!


நான்கு வேதங்களை பின்பற்றுபவர்கள் அவரவர்கள் வேதம் சொன்ன நான்கு வெவ்வேறு தினங்களில் இந்த உபகர்மாவை நடத்திக் கொள்கின்றனர்.
விசுவாமித்திரால் காயத்ரி ஜெபம் ராமபிரானுக்கு உபதேசிக்கப்பட்டு அதன் பலனாக ராமன் ராவணனை வென்றார் .இதை 27முறை ஜெபிப்பது நலம்.



காயத்ரி ஜெபம் ஜபிப்பதால் என்ன பலன் ?

பூணூல் அணிவிக்கும்போது குரு சொல்லி தருவது  காயத்ரி ஜெபம். 


"ஓம்,பூர்புவ,சுவஹ,தத் ,ஸவிதுர்,வரேண்யம்,பர்கோ ,தேவஸ்ய,தீமஹி,தியோ யோந,ப்ரசோதயாத் என்பதாகும்.இம்மந்திரத்தை 108 அல்லது 1008முறை ஜெபிக்க பாவம் நிவர்த்தியாகும்.

காயத்ரி மந்திரம் விளக்கம் 

பூலோகம்,புவர்லோகம்,ஸ்வர லோகம் முதலிய மூன்று உலகங்களைப் படைக்கக் காரணமான ஒளி பொருந்திய,வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம்.நாங்கள் மேலான,உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். 



இம்மந்திரம் உள்ளத்தை இதமாக்கும்.மந்திரங்களிலேயே  உயர்வான மந்திரம் இது.ஆரோக்கியம்,பலம்,வீரியம் முதலியவற்றை தருகிறது. ஜெபிக்கும் போது உள்ள தூய்மையுடனும் ,ஒழுக்க நெறியோடும் இருக்க வேண்டும்.


வாயால் உச்சரித்து ஜெபித்தால் 1பங்கு பலன் தரும்.
அதிக சப்தமில்லாமல் ஜெபித்தால் 10மடங்கு  பலன் கிடைக்கும்.
உதடு அசைத்து ஜெபித்தால் 100மடங்கு பலன் கிட்டும். 
மனதில் ஜெபித்தால் 1000மடங்கு பலன் தரும்.
























 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக