திங்கள், 6 ஜூன், 2016

அமாவாசையில் தர்ப்பணம்

 அன்பார்ந்த என் ஆன்மீக நண்பர்களுக்கு என்  நமஸ்காரங்கள்.

அமாவாசையில் பித்ருக்களுக்கு வழிபாடு செய்வார்கள் என்பது  நாம் அனைவரும் அறிந்ததே.

நம்முடன்  வாழ்ந்து ,நம் இன்ப, துன்பங்களில் பங்கு கொண்ட,  இறந்து போன முன்னோர்களை நாம் நினைப்பது மிகவும் முக்கியம். நாம் அவர்களுக்கு செய்யும் வழிபாடும்,தர்ப்பணமும் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து ,நம்முடைய முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவர்.

பித்ருக்கள் பற்றி நான் எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அமாவாசையில் தர்ப்பணம்  

அமாவாசையை தமிழக தெற்கு பகுதியில் நல்ல நாளாக கருதுவது இல்லை .காரணம் அமாவாசை நாளன்று ,முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நாளாக கருதப்படுவதால் .ஆனால் வடக்கு பகுதியில் அன்றுதான் ஒரு புதிய பொருள் வாங்குதல்,நிலம் வாங்குதல் போன்றவற்றை செய்கிறார்கள்.

அமாவாசை தினத்தில் சூரியனும்,சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது .அதாவது ஒன்றையொன்று சந்தித்து கொள்கிறது.இந்நாளில் பித்ருக்களுக்கு பசியும்,தாகமும் அதிகமாக ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பித்ருக்கள்

பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களை குறிக்கும்.தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள்.

நம்முடைய இந்த உடல்,உயிர்,பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே.இதை அனுபவிக்கும்  போது நமது பித்ருக்கள் செய்த பாவம்,பபுண்ணிய பலனை  சேர்த்தே அனுபவித்து வருகிறோம்.

பித்ருக்கள் நமக்கு எப்போதும் நன்மையே செய்பவர்கள்.

பிதுர் கடன்

நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது  அவர்களை பேணி காத்து பசியினை போக்க வேண்டும்.அதேபோல் மறைந்த பின்பும் அவர்களின் பசியை போக்க வேண்டும்.இதுவே பிதுர் கடன்  எனப்படும்.

பித்ரு லோகம் 

சூரியனுக்கு அப்பால்,பல லட்சம் மைல்  தொலைவில் பித்ரு லோகம் இருப்பதாக கருட புராணம் கூறுகிறது.அங்கிருந்து இறந்து போன நம் முன்னோர்கள் தங்கள் குடும்பங்கள் நலமாகவும்,வளமாகவும்  வாழ அருளாசி வழங்க அமாவாசை அன்று  பூமிக்கு வருகிறார்கள். தங்கள் தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள்.அவர்களது வாரிசுகளான நாம்,துவங்கும் காரியங்களை கரிசனத்துடன் பார்க்கிறார்கள்.ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.


நமது பித்ருதான் கடவுளின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத்தரும் வல்லமை பெற்றவர்கள்.நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றி தருபவர்கள் நமது பித்ருக்களே.

எனவே,பித்ருக்களை  சிரத்தையோடு வழிபாடு செய்து அவர்களின் பசியினை போக்க வேண்டும்.அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது பித்ருக்கள் பசியால் வாடுவர்.வருத்தத்துடன் பித்ரு லோகம் செல்வர்.

வருத்தத்துடன் போகும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர்.அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபம் அளிப்பர் .இந்த சாபம் தெய்வ அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது.கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள்.எனவே அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது.மேலும் அவர்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதிபடுத்த வேண்டும்.

நமது வீடு தேடி வரும் பித்ருக்களுக்கு எள்ளு கலந்த தண்ணீரை கொடுக்க வேண்டும். பித்ருக்கள் காக்கை வடிவத்தில் வந்து நாம் கொடுக்கும் உணவை சாப்பிடுவதாகச்  சாஸ்திரங்கள் சொல்கின்றன.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் 


உங்கள் அன்பு தோழி
 ஈஸ்வரி 
























சனி, 4 ஜூன், 2016

நன்மை தரும் இராகு கால பூஜை

நன்மை தரும் இராகு கால பூஜை


சர்ப்ப கிரகங்களான ராகு ,கேது துர்க்கா தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.


ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் 1.30மணி நேரம் ராகுவும்,1.30மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர்.ராகுவுக்கு அதி தேவதை துர்க்கை .


ராகுவை வழிபட ஏற்ற காலம் ராகு காலம் எனவும் ,கேதுவை வழிபடுவதற்கு ஏற்ற நேரம் எம கண்டம் என்றும்  அழைக்கப்படுகிறது.இந்த நேரங்களில் மற்ற கிரகங்களின் ஆற்றல் குறைந்திருக்கும் என்பதாலே ராகு காலத்தில் சுப காரியங்கள் செய்வது தவிர்க்க வேண்டும்.அதே சமயத்தில் ராகு காலத்தில்  அம்மனை ஆராதித்தல்  குறிப்பிடத்தக்கது.சண்டிகையாக துர்க்கா தேவியை வணங்குவது சிறந்த பலன் தரும் என்று தேவி பாகவதம் உள்ளது.

இராகு  கால அட்டவணை

ஞாயிறு ----மாலை 4.30 ---6 மணி 


திங்கள் ----காலை 7.30----9மணி 

செவ்வாய் ---மதியம் 3---4.30மணி 

புதன்   ----நண்பகல் 12--1.30மணி 

வியாழன் ---மதியம் 1.30 --3மணி 

வெள்ளி----காலை 10.30---12மணி  

சனி ----காலை 9---10.30மணி 

 எல்லா நாட்களும் இராகு  காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றுவது நல்லது என்றாலும் செவ்வாய் ,வெள்ளி ,ஞாயிறு போன்ற கிழமைகளில் இராகு  கால நேரத்தில் விளக்கேற்றுவது மிகச் சிறந்த பலனைத் தரும்.

ராகு கால நேரத்தில் முதல் அரை மணிநேரம் மிகவும் மோசமானது.அடுத்துள்ள அரை மணிநேரம் பரவாயில்லை. கடைசி வரும் அரை மணிநேரமானது பூஜை செய்ய முக்கியமான நேரமாகும்.


செவ்வாய் கிழமை இராகு கால பூஜை செய்வது விசேஷமானது.இந்த பூஜையால் திருமணத் தடை ,முன்னேற்றத் தடை,கடன் பிரச்சனைகள்,சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை ,வீடு,மனை தொடர்பான பிரச்சனைகள்,விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கும்.செவ்வாய் கிழமை மதியம் 3மணி  முதல் 4.30 வரை.மங்கள வார பூஜை செய்வாய் கிழமையில் செய்தல் வேண்டும்.அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி  வழிபட வேண்டும்.


வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் செய்யும் பூஜை குடும்ப பலன் சீராகும்.தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும்.பொன் ,பொருள் சேரும்.மக்கட் பேறு கிட்டும்.வெள்ளி கிழமை ராகு காலம் காலை 10.30 மணி முதல் 12மணி வரை.

வெள்ளிகிழமை சுமங்கலி பூஜை செய்வது சிறப்பு.இந்நாளில் துர்க்கை அம்மனுக்கு பூ,மஞ்சள்,குங்குமம் ,வெற்றிலை பாக்கு ,மாங்கல்ய கயிறு இவைகளை வைத்து பூஜித்து சுமங்கலிக்கு வழங்க வேண்டும்.மாதம் 1முறையாவது இதை செய்வது நலம்.


ஞாயிற்றுக் கிழமை இராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால் தீராத நோய்களின் தாக்கம் குறையும்.எதிரிகள் பயம் நீங்கும்.பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும்.வெளி நாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.ஞாயிற்று கிழமை ராகு காலம் மாலை 4.30 மணி முதல் 6மணி வரை.

எலுமிச்சை விளக்கேற்றும் முறை 

இராகு கால துர்க்கை பூஜையை தொடர்ந்து 9 வாரங்கள் செய்வது அவசியம்.இராகு காலத்தில் எலுமிச்சை பழத்தை நறுக்கி பிழிந்து அதன் மூடியைத் திருப்பி , அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி அம்மன் முன் வைத்து வணங்குவார்கள்.விளக்கினை ஜோடியாகதான் வைக்க வேண்டும்.விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள் ,வலம் வந்து  நமஸ்கரிக்க வேண்டும்.

எலுமிச்சை பழத்தை நறுக்கும் போது "ஐம்"என்ற சரஸ்வதி மந்திரத்தையும் ,திறக்கும் போது  
"க்ரீம்" என்ற லட்சுமி மந்திரத்தையும்,எண்ணெய் ஊற்றும் போது "க்லீம் " என்ற காளி மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும் .முப்பெரும் தேவியரை வணங்குவதை குறிக்கும்.

கோவிலில் பூஜை முடிந்தவுடன் பிச்சை இடுதல் கூடாது.ஆலயத்திற்குள் நுழையும் போதே பிச்சையிடுதல் நல்லது.


















புதன், 1 ஜூன், 2016

18 படிகளுக்குரிய தெய்வங்கள்

என்  அன்பு ஆன்மீக நண்பர்களுக்கு என்  இனிய வணக்கங்கள் .

கார்த்திகை மாதம் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு ,விரதம் இருந்து ஐயப்ப பக்தர்கள் வருஷம் தோறும் செல்கிறார்கள்.இது அனைவரும் அறிந்த விசயமே!

போனபதிவில் 18 படிகளில் ஏறும் போது  எதைவிட வேண்டும் என்பதைப் பார்த்தோம் .இந்த பதிவில் அந்த 18 படிகளுக்குரிய தெய்வங்கள் என்ன? என்பதை அறிய இருக்கிறோம் .


ஒவ்வொரு படியிலும் வாசம் செய்யும் தேவதாக்கள் 

முதல் படி ---சூரிய பகவான் 

2ம் படி       ---சிவன் 

3ம் படி      ----சந்திர பகவான் 

4ம் படி       ----பராசக்தி 

5ம் படி      ----அங்காரக பகவான் 

6ம் படி      -----முருகன் 

7ம் படி      ----புத பகவான் 

8ம் படி      ----விஷ்ணு 

9ம் படி      ----குரு பகவான் 

10ம் படி    ----பிரம்மா 

11ம் படி    ----சுக்கிர பகவான் 

12ம் படி    ----லக்ஷ்மி 

13ம் படி    ----சனி பகவான் 

14ம் படி    ----எம தர்ம ராஜன் 

15ம் படி    ---இராகு பகவான் 

16ம் படி    ---சரஸ்வதி 

17ம் படி    ---கேது பகவான் 

18ம் படி     ---விநாயக பெருமான் 



ஒற்றை படை வரிசையில் நவகிரக தெய்வங்களும்,இரட்டை படை வரிசையில் தெய்வ குடும்பமும் வாசம் செய்வதாக ஐதீகம் .

18 படிகளில் ஒவ்வொரு படியாக நாம் அடி எடுத்து ,வைக்கும் பொழுது ,பிறப்பு ,இறப்புக்கு காரணமான பிறவிப் பெருங்கடலை கடக்க விடாமல் செய்து ,முக்தி அடையாமல் தடுத்து ,வாழ்க்கையோடு ஒட்டி நம் கூடவே இருந்து கர்ம வினைகளை உண்டாக்கும் பழக்கங்கள் நம்மை விட்டு விலகுவதாக சொல்லப்படுகிறது.

பகவத் கீதையில் உள்ள 18 அத்தியாயங்களும் 18 படிகளைக் குறிக்கும்.


பூஜை செய்யும் தினத்தில் ஐயப்ப  பக்தர்கள் 18 படிகளையும் பூவாலும்,விளக்காலும் அலங்காரம் செய்து அந்தந்த தெய்வங்களுக்கு பூஜை செய்து வழிபடுகிறார்கள் .ஐயப்ப  பக்தர்கள் சபரிமலை படி பூஜையில் அய்யன் திருப்புகழை பாடியும்  ,கரவோசை எழுப்பியும் வணங்குகிறார்கள் . 



மீண்டும் சந்திப்போம்                                    அன்பு தோழி 
                                                                          ஈஸ்வரி 



செவ்வாய், 31 மே, 2016

18 படியின் தத்துவங்கள்

18 படியின்  தத்துவங்கள் 






தர்ம சாஸ்தாவின் "18"படிகளும் தத்துவத்தை விளக்குகின்றன.ஒவ்வொரு படியிலும் அடியெடுத்து வைக்கும் போது ஒவ்வொரு தீய பழக்கமும் நம்மை விட்டு நீங்குவதாக ஐதீகம்.


முதலாம்  படி -----காமம் 

2ம் படி            -----குரோதம் 

3ம் படி           -----லோபம் 

4ம் படி           -----மோகம் 

5ம் படி          -----மூர்க்கம் 

6ம் படி         ------மாச்சர்யம் 

7ம் படி         ------வீண் பெருமை 

8ம் படி         -----அலங்காரம் 

9ம் படி         -----பிறரை இழிவுபடுத்துதல் 

10ம் படி       -----பொறாமை 

11ம் படி       -----இல்லறப்பற்று

12ம் படி       -----புத்திர பாசம் 

13ம் படி       -----பணத்தாசை 

14ம் படி       -----பிறவி வினை 

15ம் படி       -----செயல்வினை 

16ம் படி       -----பழக்க வினை 

17ம் படி       -----மனம் 

18ம் படி       -----புத்தி 


18 படிகளில் ஒவ்வொரு படியாக நாம் அடி எடுத்து வைக்கும் பொழுது பிறப்பு இறப்புக்கு காரணமான பிறவிப் பெருங்கடலை கடக்க விடாமல் செய்து முக்தி அடையாமல் தடுத்து வாழ்க்கையோடு ஒட்டி நம் கூடவே இருந்து கர்ம வினைகளை உண்டாக்கும் பழக்கங்கள் நம்மை விட்டு விலகுவதாக சொல்லப்படுகிறது .


நன்றி வணக்கம் 





















ஞாயிறு, 29 மே, 2016

பயம் நீக்கும் சரபேஸ்வரர் 100வது பதிவு

ஹாய் ப்ரண்ட்ஸ் , எல்லோருக்கும்  
என்  வணக்கம் .

 என்னுடைய பதிவு 100 யை எட்டி விட்டதை ண்ணி என்  உள்ளம் பூரிப்பு அடைகிறது .இதற்கு முதலில் என் இஷ்ட தெய்வமான முப்பெரும் தேவியரை மனதார வணங்குகிறேன் .


இந்த பதிவை எழுதுவதற்கு  என் குடும்பமும்,நண்பர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதை இங்கு கூறவேண்டியது என்னுடைய கடமை . என்  பதிவைப்  படிக்கும் தெரிந்த ,தெரியாத நண்பர்கள்  அனைவருக்கும் என்  நன்றிகள் பல.


என்  பதிவைப் படித்து , பயன் பெறுகிறார்கள் என்றால் அதுவே  நான் கடவுளுக்கு செய்யும் சேவையாக எண்ணுகிறேன் . இதுவொரு கடவுள் மேல் நான் கொண்ட பக்தி என்றே சொல்லலாம்.



பயம் நீக்கும் சரபேஸ்வரர் 




சரபேஸ்வரர் என்பவர் சிவபெருமானின் அவதாரம் இந்த சரபேஸ்வரரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது.

மனித  உடலும்,சிங்க முகமும், எட்டு கால்களும் ,நான்கு கரங்களும் ,கருடன் போன்ற மூக்கும்,யரளியின் வாய் ,இரண்டு பெரிய இறக்கைகள், அவரது காலடியில் வணங்கும் நரசிம்மம் இதுவே சரபேஸ்வரின்  உருவமாகும் .


நாராயணன், நரசிம்ம அவதாரம் எடுத்த போது  அவரது உக்கிரகத்தை தணிக்க அவரை விட உக்கிரமாக வெளிவந்த சிவ அவதாரமே சரபேஸ்வரர் .

நான் என்ற அகங்காரத்தை அளித்து ,சகல ஐஸ்வரியங்களையும் தந்து அருள்பவர் சரபேஸ்வரர் .

சரபேஸ்வரர் தோன்றிய  காரணம் 

'இரணியன் ' என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகாவரம் வேண்டி தவம் செய்தான் .கடும் தவத்தின் பயனாக பரமனிடம் ," தேவர்,மனிதர் ,விலங்கு முதலிய யாராலும் பகலிலோ அல்லது இரவிலோ ,வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிபுறத்திலோ எவ்வித ஆயுதங்களாலோ தனக்கு மரணம் ஏற்படக்கூடாது "என்ற வரத்தை பெற்றான்.


தன்னை எதிர்ப்பவர் யாரும் இல்லை ,தானே கடவுள் என்று கூறி ,தேவர்கள் உட்பட அனைவரையும் தன்னையே தெய்வமாக வணங்க வேண்டும் என ஆணையிட்டு ,கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தான்.

இரணியனின் மகன் பிரகலாதன்.அவன் அன்னை வயிற்றில் இருக்கும் போதே ,நாரதர் முனிவரின் மூலம்,திருமால் உபன்யாசம் கேட்டு சிறந்ததொரு ஸ்ரீ ஹரியின் பக்தனாய் பிறந்தான்.எந்நேரமும் நாராயணன் நாமத்தை சொல்லி வந்தான் .இதனைக் கண்ட இரணியனுக்கு கடும் கோபம் வந்தது .எவ்வளவு சொல்லியும் தன் நாமத்தை சொல்லாத பிரகலாதனை தன மகன் என்று கூட பார்க்காமல் பல வழிகளில் அழித்திட முயன்றான்.ஸ்ரீ ஹரியின் அருளால் அனைத்திலும் தப்பிய பிரகலாதனை நோக்கி ,"எங்கே உன் நாராயணன்? எனக் கேட்க,பிரகலாதனோ "என் நாராயணன் தூணிலும் இருப்பான்.துரும்பிலும் இருப்பான் "என்று கூறினான்.

கோபம் கொண்ட இரணியன் ,அருகில் இருந்த தூணை தன்  கதை கொண்டு தாக்க,அதிலிருந்து நரசிம்ம உரு கொண்டு வெளி வந்தார் பரந்தாமன்.இரணியனின் வரத்தின்படி,மனிதனாகவோ ,தேவராகவோ ,விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து ,இரவோ பகலோ இல்லாத அந்தி நேரத்தில் எவ்வித ஆயுதங்களுமின்றி தன்  நகத்தினை கொண்டு,வீட்டின் உள்ளும் ,வெளியும் இல்லாது வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார்.


அசுரனின் குருதியை குடித்து மதி மயங்கி ஆக்ரோஷமானார்.நரசிம்மத்தின் கோபத்தை தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் சிவபெருமானை நாட ,சிவனே சரபேசப் பறவை உருவம் எடுத்து ,நரசிம்மத்தின் கோபம் தணித்தார்.இவ்வாறு பிரகலாதன் மற்றும் தேவர்கள் நடுக்கத்தினை தீர்த்ததால் இவர் "நடுக்க தீர்க்க பெருமான் "என்றானார்.


நாராயணின் கோபத்தை தணிக்க ,அபூர்வ பிறவி சரபேஸ்வரர்  தோன்றி,அவர் போட்ட சப்தத்தினால் நரசிம்மர் அடங்கினார்.

சந்தி ,சூரி ,அக்கி 3 கண்களாக,கூர்மையான நகங்களோடும்,காளி ,துர்க்கா  ஆகியோர் தன்  இறக்கையாகவும் கொண்டு வேகமாய்  பறந்து ,பகைவர்களை அளிக்கும் சரபேஸ்வரர் "பட்சிகளின் அரசன்"என்றும்,"சாலுவேஸ்வரன் " என்று அழைக்கப்படுகிறார்கள்.

இவரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்யங்கிரா மற்றும் சூலினி .

காஞ்சி புராணத்தில் ,நரசிம்மரின் உக்கிரத்தை அடக்க பரமசிவன் வீரபத்திரனை அனுப்பினார் .நரசிம்மம் வீரபத்திரரை கட்டி போட்டு விட்டு வேடிக்கை பார்த்ததாகவும் ,அந்த சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரனின் உடலில் புகுந்து,சரபேஸ்வரர் ஆகி நரசிம்மத்தை அடக்கியதாக கூறுகிறது.


திருபுவனம் கோவிலில் சரபேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது.

எத்தகைய விதியையும் மாற்றும் சக்தி சரபேஸ்வருக்கு மட்டுமே உண்டு.நம் கண்களுக்கு புலப்படாத எதிரிகளை அழித்து,நம்முடைய துன்பங்களை  நீக்கி ,தன்னிடம் சரணடையும் பக்தர்களுக்கு  சுகமளிக்கும் தெய்வம் சரபேஸ்வரர் .இவரை ஞாயிற்றுக் கிழமை மாலை 4 1/2 --6 மணி வரை ராகு காலத்தில்  வழிபட பயம் விலகும்.

தூக்கம் நீங்க ,தீய சக்தியிலிருந்து பாதுகாக்க ஸ்லோகம்

ஹராய பீமாயா ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம் சர்பேச்வராய
ஸ்ரீ சரபாஷ்டகம் .

இதை எல்லாம் சொல்ல முடியாது மிகச் சிரமம் என்று நினைப்பவர்களுக்கு தமிழில் மந்திரம்
இது .

அச்சத்தை நீக்கும்  திவ்ய கவசம்

நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என்  கோலே !
ஹரஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுகேசா என்றே
சிரம் இரண்டும் ,கண் மூன்றும் கூரிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே !
பரம் பொருளே! சரபேசா !வாழி  வாழியே !


பில்லி சூனிய ஒழிப்பு,மரண பயம் அகலுதல்,நீண்ட ஆயுள் ,எந்த வியாதியும் நெருங்காத சூழ்நிலை ,எதிரிகள் குலநாசம் என்று பாதுகாப்பு வளையங்களாக சரபேஸ்வரர் வழிபாடு திகழ்கிறது.

சரபேஸ்வரரை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் என்ற மகிழ்ச்சியில் மேலும் என் பணி  தொடர  பராசக்தியை  பிராத்திக்கிறேன் .

உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து கொண்டால் அது எனக்கு ஒரு தூண்டுகோலாக அமையும்.

இந்த சந்தோசத்துடன் ,அடுத்த பதிவில் மற்றுமொரு ஆன்மீகத் தேடலில் சந்திப்போம் .

என்றும் உங்கள் தோழி
ஈஸ்வரி
































சனி, 28 மே, 2016

மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு 6 அம்சங்கள்



ஆன்மீக அன்பர்களுக்கு என் இனிய உளம்கனிந்த  வணக்கங்கள் .

என்னுடைய பதிவில் மகா சிவராத்திரியைப் பற்றி எழுதி இருக்கிறேன்.அதன் தொடர்ச்சியாக இந்த பதிவை எழுதுகிறேன் .



மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு 6 அம்சங்கள் 



சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல்------இது ஆன்மாவை தூய்மைப்படுத்தும்

லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் -------நல்லியல்பையும் ,நல்ல பலனையும் வழங்கும்.


உணவு நிவேதித்தல் -------நீண்ட ஆயுள்,விருப்பங்கள் நிறைவேறும் .

தீபமிடுதல் -----செல்வத்தை வழங்கும்.

எண்ணெய் விளக்கேற்றுதல் ------ஞானத்தை தரும்.

வெற்றிலை அளித்தல் ----உலக இன்பங்களையும்,திருப்தியையும் கொடுக்கும் .

இந்த 6 அம்சங்களையும் கோவிலுக்கு சென்று அல்லது வீட்டிலாவது அனுஷ்டிக்க வேண்டும் என்று புராணங்கள் கூறுகின்றன.

வீட்டில் பூஜை செய்யும் முறை 


வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால் ,மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து, நெற்றியில்  திருநீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலை கொண்டு சிவ பூஜை செய்ய  வேண்டும்.


ஐந்தெழுத்து மந்திரமான "சிவாய நம",ஓம் நமச்சிவாய"என உச்சரித்து பூஜை செய்தல் வேண்டும்.சிவபெருமானின் வெவ்வேறு  பெயர்களான பவாய ,சர்வாய ஈசனாய  ,பசுபதாய ,உக்ராய  ,ருத்ராய  ,பீமாய  மற்றும் மகா தேவா நமஹ  என்று கூறி ,பூஜிக்க வேண்டும். வீட்டில் உங்களுக்கு தெரிந்த பாடல்களை பாடி இறைவனை சந்தோஷப்படுத்தி ,பரம்பொருளான சிவபெருமானின் அருளை  பெறலாம்.

சிவபெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்லி ,சிவபெருமானுக்கு  உகந்த வில்வ இலையை போட்டு பூஜிக்க வேண்டும்.108  போற்றியையும் ,மூல மந்திரத்தையும்  பாராயணம் செய்வது நல்ல பலனை தரும்.

பின்னர் நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் வைக்க வேண்டும் .

பூஜை செய்ய முடியாதவர்கள் 4ஜாமத்திலும் சிவபுராணங்களை கேட்டும்,சிவதுதி சொல்லி,சிவன் கோவிலுக்கு சென்று அந்த இரவை கோவிலில் கழித்து சிவனை வழிபட வேண்டும்.சிவனுக்கு 3 அல்லது 9 நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

நான் கோவில்களில் சில பேர் "ஓம் நமச்சிவாய" என எழுதுவதைப்  பாத்திருக்கிறேன் ,அவ்வாறு நாம் எழுதி நம் கோரிக்கைகளை சிவபெருமானிடம் முன் வைக்கலாம்.அன்று முழுவதும் சிவனை மனதில் இருத்தி ,வழிபட வேண்டும்.


சிவனுக்கு செய்யும் அபிஷேக  பொருட்களை வாங்கிக் கொடுத்து, பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

ஆன்மீக நண்பர்கள் இதைப் படித்து ,பலன் பெற நான் சிவபெருமானை வேண்டுகிறேன் .


நன்றி !வணக்கம் !









பூஜை அறை

என்  அன்பு தோழிகளுக்கு என்  இனிய வணக்கங்கள்.நான் எழுதிய பதிவுகள் பல்வேறு தலைப்புகளில் இருந்தாலும் இப்போது நான் எழுதும் தலைப்பு ஒவ்வொரு இல்லத்தரசிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய தலைப்பாகும்.

இந்துக்கள் ஒவ்வொரு வீடுகளிலும் கோவிலாக விளங்குவது பூஜை அறைதான்.அதைப்பற்றி அறிந்து கொள்வது  நம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத செயல் ஆகும்.

நான் அறிந்த,தெரிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பூஜைஅறை

மன நிம்மதியையும்,சந்தோஷத்தையும் தரக்கூடியது கோவில்கள்.நாம் அன்றாடம் கோவிலுக்கு செல்வது இயலாத காரியம்.அந்த குறையைத்  தீர்க்கவே நாம் வீட்டில்  பூஜையறையை அமைத்து வழிபட வேண்டும்.

இன்றைய காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்வதால் தினமும் கோவிலுக்கு சென்று வருவது இயலாத காரியம்.ஆதலால் இல்லத்தரசிகள் தினமும் பூஜை அறையை சுத்தம் செய்து ,2நிமிடம் மனதை கடவுளிடம் இருத்தி பிராத்தனை செய்ய வேண்டும் .

பூஜைஅறை தகவல்கள்   

முதலில் பூஜை அறையை கிழக்கு பார்த்து இருக்குமாறு அமைக்க வேண்டும்.அது முடியாத போது மேற்கு ,வட  கிழக்கு நோக்கியும்  பூஜையறையை அமைக்கலாம்.


பூஜை அறையில் குல தெய்வத்தை முதலில் வைக்க வேண்டும்.பிறகு நம் இஷ்ட தெய்வங்களையும் ,குருவாக நாம் நினைக்கும் மகான்களின் படங்களை [சாய்  பாபா ,மகா பெரியவா ,ராகவேந்திரா] வைக்கலாம்.நிறைய தெய்வங்களை வைத்து வழிபடுவதில் தவறு இல்லை .ஆனால் அதை சுத்தம் செய்வது கடினம்.

தெய்வ படங்களை சுவரில் மாட்டும்போது தெய்வத்தின் கண்கள் தரையில் படும்படியாக படங்களை மாட்ட வேண்டும்.

இறந்தவர்கள் நம் அன்பிற்கு பாத்திரமானவர்கள் என்று எண்ணி அவர்கள் படங்களை பூஜையறை யில் வைக்கக் கூடாது.இறந்தவர்கள் தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றுவார்களே தவிர ,அவர்கள் தெய்வம் அல்ல.அதனால் இறந்தவர் படங்களை தனியாக வைத்து பூஜை செய்வது நல்லது.


சாந்தமான தெய்வங்களை வீட்டில் பூஜையறையில் வைத்து வணங்கலாம்.உக்கிரமான தெய்வங்கள் வீட்டில் வைத்து வழிபடுவது உகந்தது அல்ல.அவைகள் கடவுளின் ஆவதாரமே ஆனாலும் அதற்கென வீட்டில் வழிபாடுகளும் ,சுத்தங்களும் தேவை .எனவே,அந்த தெய்வங்களை கோவில்களில் வழிபடுவதே நல்லது.

தெய்வ சிலைகளை சில பேர் வீடுகளில் வைத்து பூஜை செய்வது உண்டு.மண் சிலையாக இ ருந்தாலும்,விக்ரங்களாக இருந்தாலும் முறையாக பூஜை செய்ய வேண்டும்.


பூஜை அறை கதவு இரு கதவாக இருக்க வேண்டும். அவை வெளிப்புறம் திறக்கும்படி அமைத்தல் வேண்டும்.பூஜை அறை பக்கத்தில் கழிவறை இருத்தல் கூடாது.மாடிப்படிக்கு கீழும் பூஜை அறை இருத்தல் கூடாது.பெரிய வீட்டில் மேல் மாடியிலும் ,கீழும் வசித்தால்  கீழ் தளத்தில்  பூஜை அறையை அமைத்து கொள்ள வேண்டும்.

தலை வாசலை அருகில் பூஜை அறையை அமைத்தல் கூடாது.

பூஜை அறையை பூஜை முடிந்ததும் சாத்தி வைக்க வேண்டும்.பெண்கள்  சுத்தமாக இருக்கும் நேரத்தில் மட்டுமே வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.

ஒரு படம் வைத்து பூஜை செய்தாலும் அது உருப்படியாக இருக்க வேண்டும்.தூசி ,ஓட்டடை படிந்து இருத்தல் கூடாது.பழைய படங்கள் ,உடைந்த சிலை ,கறை  படிந்த உடைந்த கண்ணாடியுடன் இருக்கும் படங்களை கண்டிப்பாக பூஜை அறையில் வைத்திருத்தல் கூடாது .

வீட்டில் பூஜை அறையில் ஒற்றை குத்து விளக்கு ஏற்றக் கூடாது.இரண்டு குத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

 நம் குல தெய்வமாக காமாட்சி விளக்கை ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து கற்பூரம் ஏற்றுவதோ ,ஊதுவர்த்தி ஏற்றுவதோ கூடாது.அதற்கென ஒரு அகல் விளக்கு ஏற்றி அதில் கற்பூரம் ஏற்றவும்,ஊதுவர்த்தி ஏற்றவும் பயன்படுத்தலாம்.

வீட்டில் பூஜை அறையில் எப்பொழுதும் வடகிழக்கு மூலையில் ஒரு செம்பு தண்ணீர் இருப்பது நல்லது.தண்ணீரை  தினமும் மாற்ற வேண்டும்.முக்கியமாக தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.இரு புறமும் குத்து விளக்கை ஏற்றுவது தவறு ஒன்றும் இல்லை.

பூஜையின் போது ஒரு குத்து விளக்கில் ஐந்து முகம் ஏற்றி பூஜை செய்யலாம் .விளக்கு பூஜை செய்பவர்கள் 5முகங்களை ஏற்றி செய்வதே சிறந்தது.இதனால் நமக்கு எல்லா வளங்களும் கிடைக்கும் .பூஜைக்கு நெய் தீபமே சிறந்தது.


கற்பூரம் ஏற்றினால் மாசு ஏற்படுவதால் கோவில்களில் விளக்கு ஆர்த்தி செய்கிறார்கள்.நாமும் நம் பூஜை அறை  தெய்வங்களுக்கு தீப ஆரத்தி எடுத்து பூஜிப்போம்.

நம் வீட்டை சுத்தமாக வைத்திருந்து பூஜை செய்வது  போல் நம்மிடம் உள்ள தீய பண்புகளை விடுத்து நம் மனதை சுத்தமாக்கி இறைவனின் திருவடிகளை தொழுவோம் .

நாமும் சந்தோசத்துடன் வாழ்வோம்.நம்மை சுற்றி உள்ளவர்களும் எல்லா  வளங்களும் பெற்று சந்தோஷமாக  வாழ இறைவனை பிராத்திப்போம்.

எல்லா வளமும் நம்மை தேடி வரவும்,என் இஷ்ட தெய்வமான முப்பெரும் தேவியரை மனமுருக வணங்கி ,இந்த பதிவை முடிக்கிறேன்.

இன்னும் சில தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் .

உங்கள் அன்பு தோழி 
ஈஸ்வரி