புதன், 28 ஜூன், 2017

ஏகாதசி விரத மகிமையை விளக்கும் கதை

ஏகாதசி விரத மகிமையை விளக்கும் கதை 

வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. ”மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்” என்பது திருமால் வாக்கு. இதனால் இவ்விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.ஆண், பெண் அனைவரும் பின்பற்ற வேண்டிய பெருமைமிக்க விரதமானது வைகுண்ட ஏகாதசி விரதம்.பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பக்ஷம் என்கிறோம். கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை), சுக்லபக்ஷம் (வளர்பிறை) ஆகிய இந்த இரண்டு பக்ஷங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளின் (திதியில்) வருவது ஏகாதசி ஆகும். இதில் மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக வணங்குகிறோம்.கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஆகிய இந்த பதினொரு இந்திரியங்களால் செய்யபடும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் ஏகாதசி விரதம் இருந்தால் அழிந்து விடுவது உறுதி என்று முன்னோர்கள் கூறுவர்.


காயத்ரியை காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை. தாயை விஞ்சிய தெய்வம் வேறு இல்லை. காசிக்கு விஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை. ஏகாதசியை விஞ்சிய வேறு விரதம் இல்லை. அந்த அளவிற்கு ஏகாதசி விரதம் மகத்துவம் வாய்ந்தது.


இராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்ம தேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு “முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது. துவாதசியன்று  மஹாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்கு, திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார்.
அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் “சொர்க்கவாசல்” வழங்குவதாக புராணங்களில் கூறப்படுகிறது.


ஏகாதசி விரத மகிமை பற்றி பத்ம புராணத்தில் கூறப்படும் கதை வருமாறு : திரேதாயுகத்தில் “முரன்’ என்ற பெயரில் ஒரு கொடிய அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் தேவர்களுக்கும், தவ முனிவர்களுக்கும் பல கொடுமைகள் செய்தான். அவனது தொல்லைகளைத் தாங்க முடியாத தேவர்களும், முனிவர்களும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அரக்கன் முரனை அழித்து தேவர்களைக் காக்க திருமால் முடிவு செய்து சக்கராயுதத்துடன் முரனுடன் போருக்கு புறப்பாட்டார்.

அசுரனுக்கும், திருமாலுக்கும் கடும்போர் நடந்தது. ஆண்டவனின் சக்கராயுதத்திற்கு முன் அரக்கன் சக்தியற்றுப் போனான். இருந்தாலும் அவன் பல மாய வடிவங்களில் போர் புரிந்து வந்தான். தினமும் காலையில் சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் ஆகும்வரை போர் நடக்கும். தினமும் போர் முடிந்ததும் திருமால் வத்திரிகாசிரமத்தில் உள்ள ஒரு குகைக்கு சென்று இளைப்பாறுவார். பொழுது விடிந்ததும், அரக்கனுடன் போர் புரிய போர்களத்திற்கு செல்வார். ஒரு நாள் ஆசிரமத்தில் திருமால் படுத்து இருந்த போது அங்கு வந்த முரன், அவரை திடீரென்று தாக்கத் தொடங்கினான். அப்போது பெருமாளின் உடலில் இருந்து ஒரு மகத்தான சக்தி, பெண் வடிவில் எழுந்து அரக்கன் முன் வந்து நின்றாள். அழகியைக் கண்டதும் அவளது அழகில் அரக்கன் மயங்கினான். ஆனால் படைக்கலங்களுடன் விசுவரூபத்துடன் தோற்றமளித்த அந்தப் பெண் ஆங்காரத்துடன் அரக்கனை அழித்தாள்.


இதனால், திருமால் மனம் மகிழ்ந்தார். தமது எதிரில் நின்ற சக்தியை நோக்கி, “”சக்தியே, அசுரனை அழித்த உனக்கு ஏகாதசி என்று திருநாமம் சூட்டுகிறேன். அரக்கன் முரனை அழித்த இம்மார்கழி மாதத்தில் உன்னை விரதம் இருந்து வழிபடுவோருக்கு, யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்.” என்று கூறினார். திருமால் கொடுத்த வரமே ஏகாதசியின் மகிமைக்கு காரணமாயிற்று. அரக்கனை வென்று சக்தி வெளி வந்த மார்கழி மாதம் பதினோராவது நாளாக இருந்ததால், திருமாலின் சக்திக்கே “ஏகாதசி’ என்ற பெயர் ஏற்பட்டது.தேவர்களும், முனிவர்களும் ஏகாதசியன்று விரதம் இருந்து இழந்த தங்களது சக்தியை மீண்டும் பெற்றனர்.

ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு மற்றும் ஏகாதசியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும்.இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்லுவதுமாக இருக்க வேண்டும். ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி என்பர். துவாதசி அன்று உணவு அருந்துவதை பாரணை என்று கூறுவர்.துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை இவைகளைச் சேர்த்து பல்லில் படாமல் “”கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!!” என்று மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு இட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று  பகலில் தூங்காமல் இருக்க வேண்டும். 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 80 வயதிற்குட்பட்ட பெரியவர்கள் ஆகியோர் விரதம் மேற்கொள்ளத் தேவையில்லை என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்?

சொர்க்கவாசல் திறக்கப்படுவது பற்றி புராணங்களில் ஒரு கதை கூறப்படுகிறது. அவதார புருஷரான எம்பெருமானுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர், தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி ஆண்டவனிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களும் அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக் கொண்டார். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.அது என்னை ஊக்குவிக்கும் விதமாக அமையும்.

எனது பதிவை படித்ததற்கு நன்றி தோழிகளே

செவ்வாய், 27 ஜூன், 2017

கோலம் போடுவது ஏன் ?

கோலம் போடுவது ஏன் ?



கோலம் போடுவதற்கும் நம் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கோலம் போடுவது பூமிக்கு செய்யும் மரியாதை. அதிகாலையில் வீட்டுமுன் சாணம் தெளித்து கோலம் போடுவதில் அர்த்தம் உள்ளது. சாணம் கிருமி நாசினி வீட்டுக்குள் கிருமிகளை நுழையவிடாது. 
மார்கழி பனிக் காற்றில் மருத்துவ குணமுள்ள ஓசோன் இருப்பதால் அதிகாலையில் கோலம் போடும் பெண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். கோலத்தை வைத்தே ஒரு வீட்டின் சூழ்நிலையை, அன்று எத்தகைய நாள் என்பதை முன்னோர்கள் கணிக்கும் வழக்கம் இருந்தது. 
நம் மூதாதையர்கள் அரிசி மாவில்தான் கோலம் போட்டனர். அது அன்னதானத்துக்கு சமமாக கருதப்பட்டது. அறிவியல் வளர்ச்சியால் நம் வாழ்க்கை சூழல் மாறி இன்று கோலம் போடும் கலாச்சாரம் குறைந்துவிட்டது. 
கோலம் போட சில விதிகள் உள்ளது. அதற்கு ஏற்ப கோலமிட்டால் வாழ்க்கையில் வளம் சேரும். 
* சூரியன் உதிப்பதற்கு முன்பு பசுஞ்சாணம் தெளித்து கோலம்போட வேண்டும். 
* வீட்டு வாசலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் எனவே புது தண்ணீரே தெளிக்க வேண்டும். 
* தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம்போடக்கூடாது. 
* கோலம் போட்டதும் காவி இடுவது மும்மூர்த்திகளை குறிக்கும். சாணத்தின் பசுமை விஷ்ணுவையும், கோல மாவின் வெண்மை பிரம்மாவையும் காவியோட செம்மை சிவனையும் குறிக்கிறது. 
* கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும். * வியாழக்கிழமை துளசி மாட கோலம், வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரை கோலம் போடுவது நல்லது. 
* சனிக்கிழமை பவளமல்லி கோலம் போட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். 
* பவுர்ணமி தினத்தன்று தாமரைப்பூ கோலம் போடுவது சிறப்பு. 
* ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை கோலம், திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலம் போடுவது நல்லது. 
* வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம் தீய சக்திகளை உள்ளே விடாது. 
* செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம், புதன் மாவிலைக்கோலம் போடவேண்டும். 
* விழா நாட்களில் இலை கோலம் போடுவது சிறப்பாக இருக்கும். 
* கோலத்தின் 8 பக்கத்திலும் பூக்கள் வைத்தால் திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். 
* இறந்தவர்களுக்கு செய்யும் விஷேசம், பித்ரு நாட்களில் கோலமிடக்கூடாது. 
* இடது கையால் கோலம் போடக்கூடாது. 
* பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும் உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும். 
* கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும். 
* கோலம் போட்ட பிறகே அடுப்பு பற்றவைக்க வேண்டும். 
* ஞாயிற்றுக்கிழமை சூரிய கோலம் நல்லது. 
* ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும். 

* கிழமைக்கு ஏற்ப வாசலில் கோலமிட்டால் கெட்ட ஆவிகள் நம் வீட்டை நெருங்காது. 
சுபகாரியங்களுக்கு ஒரு கோடு போடக்கூடாது.அசுப காரியங்களுக்கு இரட்டைக்கோடு கூடாது.வேலைக்காரர்களைக்கொண்டு கோலமிடக்கூடாது.

கோலம் 

கோலமானது குடும்பத்தின் வாசலிலும், பூஜையறையிலும் பெண்கள் அரிசி மாவினால் மண்ணின் மீது வரையும் ஓவியக்கலையாகும். இது பெரும்பாலான இந்துக்களால் தென்னிந்தியாவில் வரையப்படும் வழக்கமான ஒரு கலையாகும். கோலமும் ஒரு வகையான வழிபாடே. இக்கோலமானது குறிப்பிட்ட என்ணிக்கையிலான புள்ளிகளை மையமாக வைத்து அதனைச் சுற்றி வளைகோடுகளாக வரையப்படும் கலையாகும். கோலம் ஈரமான நிலத்தில் அரிசி மாவினால் பெரும்பாலும் வரையப்படும். நிலத்தை நீரினை மட்டும் தெளித்தோ அல்லது பசுஞ்சானத்தை நீருடன் கலந்து தெளித்தோ ஈரப்படுத்துவர். பசுஞ்சானம் மூலம் நிலத்தை ஈரப்படுத்துவதால் அரிசி மாவினால் வரையப்படும் கோலத்திற்கு நல்ல நிறம் கிடைக்கும், அதே சமயம் அது வீட்டிற்கு கிருமிநாசினியாகவும் செயல்படும்.
கோலத்தின் அமைப்பானது வீட்டிற்கு லஷ்மி கடாஷத்தை அளித்து துர்தேவதைகளை துரத்தும் என இந்துக்கள் நம்புகின்றனர். அரிசி மாவினால் கோலமிடுவதால் சிறு பூச்சிகளான எறும்புகளுக்கு அது உணவாகவும் பயன்படுகிறது. வெள்ளை கல்லின் மாவானது கோலம் வரைவதற்கு எளிதாக இருப்பதாலும் நல்ல நிறத்தை அளிப்பதாலும் தற்போது வெள்ளை கல்லின் மாவினை கோலத்தை வரைய பயன்படுத்துகின்றனர். கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் கோலம் எளிதில் கலையாமல் இருக்க ஈரமான அரிசி மாவினால் கோலம் இடுவர். 

கிருஷ்ன ஜெயந்தி தினத்தன்று வாசல் முதல் பூஜையறை வரை சிறு குழந்தைகளின் பாதம் போன்ற கோலம் இடுவர். இதன் மூலம் பகவான் கிருஷ்னரே வீட்டிற்கு வருவதாக இந்துக்களால் நம்பப்படுகிறது.

கோலம் வரைவது மனிதனுக்கு ஒழுக்கத்தையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலையும் தந்து நமது பிரச்சினைகளுக்கு தீர்வு கானும் மனப்பக்குவத்தை அளிக்கிறது எனவும் நம்பப்படுகிறது. கோலத்தில் நிறைய வகைகள் உள்ளன. வட இந்தியாவில் வன்னமயமான கோலத்தை ரங்கோலி என்று அழைப்பர். தென்னிந்தியாவில் புள்ளி கோலமும், நெளி கோலமும் பிரசித்திப் பெற்றது. கோலத்தில் இடும் புள்ளிகளானது நமது வாழ்வின் அன்றாட பிரச்சினைகளாகவும் வளைகோடுகள் வாழ்வின் நமது பயனங்களாகவும் கருதப்படுகிறது

வீட்டின் முன் கோலம் - ஏன்? 



ஆதி காலத்தில் மனிதன் மரங்களிலும், குகைகளிலும் வாழ்ந்து வந்தான். பின்னர் காலம் செல்லச் செல்ல சிறு சிறு வீடுகளை கட்ட ஆரம்பித்தான். அவ்வாறு வீடு கட்டும் போது, கண்ணுக்கு தெரியாத பல நுண்ணுயிர்கள் மடிந்தன. உயிர்களை கொல்வது பாவச் செயலாகும். இது மனிதனை மிகவும் வதைத்தது. ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தான்.
வீடு கட்டி முடித்த பின்னர், அரிசி மாவை மணல் போல திரித்து அதில் வீட்டின் முன் கோலம் போட ஆரம்பித்தான். கோலத்தில் இருக்கும் அரிசியை சாப்பிட எறும்பு மற்றும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் வந்தன. இதனால் உயிர்களை கொன்ற பாவங்கள் தீர்ந்து விட்டது என்று நிம்மதியாக இருந்தான். கோலமும் வீட்டின் முன் மிகவும் அழகாக இருந்தது.

ஆனால் இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, அரிசி கோலம், ரசாயன கோலமானது பின்னர் ஜவ்வு காகிதத்தில் கோலம் அச்சு அடிக்கப்பட்டு வீட்டின் முன் ஒட்டப்பட்டது. இதனால் மேலும் பல நுண்ணுயிர்கள் மடிந்தன, மடிந்து கொண்டிருக்கின்றன. இதனோடு கோல போட்டிகள் வேறு உருவானது.

அற்புதங்கள் நிறைந்த ஆடி மாதம்!


அற்புதங்கள் நிறைந்த ஆடி மாதம்!




ட்சிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான் பூமாதேவி அவதரித்ததாகச் சொல்கின்றன புராணங்கள். இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தன என்று ஞானநூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன. மேலும், கோ பத்ம விரதம், நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு ஆடிப்பால் அளித்தல்... இப்படி, நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஆடி மாத விசேஷ வைபவங்கள் பல உண்டு. தெரிந்துகொள்வோமா?

ஆடியில் செவ்வாய் விரதம்!

ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிப்பார்கள். ஆடி - செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கெளரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.


திருவிளக்கை ஏற்றி வைப்போம்!

ஆடி மழைக்காலத்தின் துவக்கமாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறும்.
திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளியில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்கள். மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால், குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

பிள்ளை வரம் அருளும் வளையல் பிரசாதம்!

ஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம். இந்தத் திருநாளில் சுமங்கலி பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம், வெற்றிலை-பாக்கு, ரவிக்கை வைத்து கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஸ்ரீவில்லிபுத்தூர், மன்னார்குடி  ஸ்ரீராஜ கோபாலசாமி திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலை கோயில்களில் பத்து நாட்களும், கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் மூன்று நாட்களும் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறும்.
ஆடிப்பூரத்தன்று அனைத்து ஆலயங்களிலும் அம்பாள் சந்நிதிகளில் வளையல்கள் சாற்றி வழிபாடுகள் சிறப்புற நடைபெறும். இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், பிரசாதமாகத் தரப்படும் வளையலை பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால், அங்கு சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகுகம்; பிள்ளை இல்லாதவர்களுக்கு விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கருடன் பிறந்த ஆடிச் சுவாதி!
பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வ தாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும்; மாங்கல்யம் பலம் பெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும். நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள். அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும்.

அழகன் முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை!



வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை: உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
ஆடி அமாவாசை
தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசை. சிறப்பான இந்த ஆடி அமாவாசை தினத்தில் சமுத்திர ஸ்நானம் செய்வதும், பித்ருக்களான நம் முன்னோர்களுக்கு தில தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது.
ஆடி மாதம் பெளர்ணமி தினமும் விசேஷமானதுதான். அன்று அம்மன் ஆலயங் களில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.ஞானக் கடவுளாம் ஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பெளர் ணமி என்பதால், அன்று அவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்; பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள்.

ஆடிக்குருவி

காவிரி தீரத்தில் வாழும் ஒருவகை பறவைகளை அக்கோ குருவிகள் என்று அழைப்பார்கள். இந்தப் பெயருக்குப் பின்னணியாக சுவாரஸ்ய கதையொன்று உண்டு!
காவிரிக்கரையோரம் சகோதரிகளான இரண்டு குருவிகள் வசித்தன. காவிரி வறண்டு காணப்பட்ட ஒருநாள், மணற்பரப்பில் உலர்த்தி இருந்த பொருட்களை தின்றுகொண்டு இருந்தபோது, காவிரியில் வெள்ளம் திடீரென வந்தது. தங்கைக்குருவி உடனடியாக பறந்து மரத்தில் அமர்ந்துவிட்டது. அக்காள் குருவி கவனிக்காததால், வெள்ளத்தோடு அடித்து சென்று விட்டது. அதைக் கண்ட தங்கைக்குருவி, ‘அக்கோ, அக்கோ’ என கதறி அழுதது. அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போதெல்லாம் அக்காள் குருவி திரும்ப வந்து விடும் என்ற நம்பிக்கையில் காவிரி கரை ஓரத்தில் மறத்தில் அமர்ந்து கொண்டு, அக்கோ.... அக்கோ.... என்று குரல் எழுப்பி, அக்காள் குருவியை தேடுமாம். இப்போதும் காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடும் தருணங்களில் அந்தக் குருவியின் குரலைக் கேட்கலாம் என்கிறார்கள் அந்தப் பகுதியில் வாழும் பெரியவர்கள்!

’ஆடி வேல்' வைபவம்!

இலங்கையில் மிகவும் கோலாகலமாக கொண் டாடப்படும் விழா ஆடிவேல் வைபவம். ஆடி மாதத்தில் வேல் எடுத்து கொண்டாடப்படுவதால் ஆடிவேல் என அழைக்கிறார்கள்.
கதிர்காமத்தில் இவ்விழாவை கண்டுகளிக்க பக்த பெருமக்கள் பெருந்திரளாக வருவார்கள். இந்த ஆடிவேல் திருவிழா நான்கு தினங்கள் நடைபெறும்.

ஆடித்தபசு

சங்கரன்கோவில் ஆடித்தபசு பிரசித்தி பெற்ற திருவிழா. ’ஹரியும் அரனும் ஒன்றே' என உலகுக்கு உணர்த்த விரும்பிய கோமதியம்மன்,  அதன் பொருட்டு இறைவனை வேண்டி ஒற்றைக் காலில் தவமிருந்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த  சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார். இந்த வைபவமே ஆடித்தபசு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
திருமணம், மகப்பேறு வேண்டும் பெண்கள், ஆடித்தபசு திருநாளுக்கு முதல்நாள் நீராடி, ஈரப் புடவையுடன் கோயில் பிராகாரத்தில் படுத்து விடுவார்கள். இரவு கனவில் அம்மன் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

ஆடிக் கூழ்

பசிப்பிணி போக்கி, எளியவர் அடையும் மகிழ்ச்சியில் இறைவனைக் காண்போம் என்ற கோட்பாடே கஞ்சி வார்த்தல் வழிபாட்டின் தாத்பரியம். சமயபுரம், புதுக்கோட்டை - நார்த்தாமலை முதலான அம்மன் தலங்களில் கஞ்சி வார்க்கும் வழிபாடு சிறப்புற நடைபெறும்.

ஆடி விரதங்கள் வழிபாடுகள்...


ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் (துவாதசி வரையில்) துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.
ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கடைப் பிடிக்கப்படுவது, ஆடி கோபத்ம விரதம். இந்த தினத்தில் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும். அதேபோல், ஆடி வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்வதால், நாகதோஷம் நிவர்த்தியாகும்; குடும்பம் சுபிட்சமாக இருக்கும். 
மேலும், ஆடி மாதப் பிறப்பில், ஆடிப்பால் தயாரிப்பார்கள். புதிதாக திருமணம் ஆன மணமகனை அழைத்து, ஆடியில் ஆடிப்பால் கொடுப்பது வழக்கம்.

ஆடி வரலட்சுமி விரதம்

ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக் கிழமை அனுசரிக்கவேண்டிய விரதம் இது. விரத நாளன்று திருமகளை கலசத்தில் எழுந்தருளச் செய்து, தேங்காய், பழம், வெற்றிலை-பாக்கு, கொழுக்கட்டை முதலானவற்றைச் சமர்ப்பித்து, திருமகளுக்கு உரிய துதிப்பாடல்களைப் பாடி, தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.
இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும் நோன்பு கயிற்றை வயதில் மூத்த சுமங்கலிகளிடம் ஆசி பெற்று, அவர்கள் மூலம் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இதனால் கன்னிப்பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும்; சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் பெருகும்.

வளம் பெருக்கும் ஆடிப்பெருக்கு!

நதியைப் பெண்ணாக வணங்கும் நாள்! மழை பெய்து காவிரி முதலான நதிகளில் வெள்ளம் பெருகியோடும் ஆடி மாதத்தின், 18-ம் நாள் ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்படுகிறது.  அன்று புத்தாடை அணிந்து, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம், வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று, நதிக் கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதி பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள். இந்த தினத்தில் செய்யப்படும் மங்கல காரியங்கள் பன்மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம்.

விராலி மலை முருகன்!

விராலி மலை முருகன்! 



தல வரலாறு 

வேடன் ஒருவன் குரா மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் வேட்டையாட வந்தான். வெகு நேரமாகியும் வேட்டைக்கு ஒரு விலங்கும் காணாமல் தவித்தபோது அந்தப் பக்கம் ஒரு வேங்கைப்புலி வந்தது. அதை வேட்டையாட முயன்றால், அது இலேசில் அவன் கையில் கிட்டவில்லை. இங்கும் அங்குமாக ஓடிப் போக்குக் காட்டியது. அவனும் அதைப் பிடித்தே தீருவது என்று துரத்தினான். ஆனால், அது ஒரு குரா மரத்தின் பின் ஒளிந்து கொண்டது. அவன் அருகில் வந்து பார்த்தவுடன் அது மறைந்து போயிற்று. வேடன் பிரமித்துப்போய் நிற்க, அந்த இடத்தில் ஒரே விபூதி வாசனை வீச ஆரம்பித்தது. ஒரு மயிலும் பறந்து வந்து அமர்ந்து கொண்டது."ஆஹா! நான் என்ன பாக்கியம் செய்திருக்கிறேன்! இந்த இடத்தில் என் தெய்வமான முருகன் அல்லவா இருக்கிறான்" என்று மன மகிழ்ந்து போனான் வேடன். பின்னர், அவனது முயற்சியால் அங்கு முருகன் சிலை ரூபத்தில் வந்து அமர்ந்தார். அது மிகவும் சக்தி வாய்ந்த முருகன் கோயிலாக மாறியது. அதுதான் திருச்சியிலிருந்து மதுரை போகும் வழியில் வரும் ‘விராலி மலை முருகன் கோயில்’!


இங்கு இருக்கும் முருகன் பெரிய மயிலில் அமர்ந்தபடி ஆறுமுகங்களுடன் மயில்வாகனராக அருள் புரிகிறார். சுமார் 2000 வருடங்கள் ஆன மிகப் பழமையான கோயில். இங்கு போனால் பார்க்கும் இடமெல்லாம் அழகான மயில்கள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. சுமார் 2000 மயில்கள் இங்கு இருக்கலாம் என்று மக்கள் சொல்லுகின்றனர்.


ஒரு சமயம் ஸ்ரீ அருணகிரிநாதர் ஒவ்வொரு தலமாகச் சென்று முருகனைக் கண்டு களித்துப் பல பாடல்கள் பாடினார். பின், அவர் வயலூர் வந்தார். அப்போது முருகன் அவர் முன் தோன்றி, "அருணகிரிநாதா! என்னைப் பார்க்க விராலி மலைக்கு வா" என்று திருவாய்மலர்ந்து மறைந்தார். அருணகிரிநாதருக்கு விராலிமலைக்குச் செல்லச் சரியான வழி தெரியவில்லை. சுற்றிச் சுற்றி வந்து, இடம் தெரியாமல் களைத்துப் போனார். அப்போது முருகன் தன் பக்தனின் தவிப்பைப் பொறுக்க முடியாமல் ஒரு வேடன் போல் வந்து விராலி மலையை அடையாளம் காட்டினாராம். அவர் அங்கு வந்தவுடன் அவருக்கு அஷ்டமாசித்திகளையும் கற்றுக் கொடுத்தாராம்.விராலி மலை முருகனை எல்லோரும் உடல் நோய் தீர முக்கியமாக வேண்டிக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்காக அப்படி வேண்டிக் கொள்ளும்போது குழந்தையின் ஆயுள் விருத்திக்காக முருகனுக்கே அந்தக் குழந்தையைத் தத்துக் கொடுக்கும் பழக்கமும் இருக்கிறது. அதே போல், முருகன் திருமுன் குழந்தையின் தாய்மாமன் தவிட்டைக் கொடுத்துக் குழந்தையைப் பெறுவதும் நடக்குமாம். புதிதாக வீடு வாங்கவோ, மனை வாங்கவோ முனைபவர்களும் இந்த விராலி மலை முருகனை வணங்கி வேண்டிக் கொள்கின்றனர்.


இந்தக் கோயிலில் முருகனுக்குச் சுருட்டை நைவேத்தியமாக வைக்கிறார்களாம். 

இதன் காரணம்?… 

ஒரு முறை, இந்தக் கோயிலில் ஒரு பக்தர் தன்னையும் மறந்து கோயில் திருப்பணி செய்து கொண்டிருந்தார். அவர் கோயிலுக்குப் போக நாள்தோறும் ஆற்றைக் கடக்க வேண்டும். ஒரு நாள், திடீரென்று புயல் வீசும் அறிகுறி தென்பட்டது. மழை வேகமாகப் பொழிந்து எங்கும் வெள்ளக்காடானது. இதனால் அவருக்கு ஆற்றைக் கடந்து கோயிலுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. ஓர் ஓரமாக நின்றபடி, "கந்தா! உன்னைப் பார்க்க வர முடியவில்லையே! என்ன செய்வேன்?" என்று மனம் கலங்கியபடி நின்றார். குளிரோ தாங்க முடியவில்லை. ஒரு சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டார். அப்போது அந்தப் பக்கமாக ஒரு வயதானவர் வந்தார்.
"என்ன, மனம் கலங்கி நிற்கிறாயா? எனக்கு ஒரு சுருட்டு கொடு! உன்னை நான் ஆற்றைக் கடக்க வைத்து அழைத்துச் செல்கிறேன்" என்றார். பக்தரும் அவரிடம் சுருட்டைக் கொடுத்தார். முதியவரும் அந்த பக்தர் ஆற்றைக் கடக்க உதவி செய்தார். கோயில் வந்தாயிற்று. பக்தர் உள்ளே செல்ல, ஓர் அதிசயம் காத்திருந்தது! முருகன் அருகில் பாதி சுருட்டு ஒன்று கிடந்தது.
மிகவும் ஆனந்தமடைந்த பக்தர் இந்த நிகழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு இந்தக் கோயிலில் முருகப்பெருமானுக்குச் சுருட்டு நைவேத்தியம் ஆரம்பமானது.
ஆனால், இது சரியல்ல என்று புதுக்கோட்டை மஹாராஜா இதற்குத் தடை விதித்தார். அன்றிரவு முருகன் அவரது கனவில் வந்து, "இதற்குத் தடை விதிக்காதே! இது தொடர்ந்து நடக்கட்டும்! பிறருக்கு உதவும் மனப்பான்மை வர வேண்டும்! நம்மிடம் இருப்பதை அடுத்தவருக்குக் கொடுக்கும் நல்ல எண்ணம் வர வேண்டும்! இதை விளக்கவே அந்த நிகழ்ச்சி நடந்தது" என்றார். ஆகையால், இன்றும் இந்தச் சுருட்டு நைவேத்தியம் தங்கு தடையின்றி நடந்து வருகிறது.


விராலி மலை முருகனுக்கு அரஹரோஹரா!


நல்லாடை அக்னீஸ்வரர் திருக்கோயில்

நல்லாடை அக்னீஸ்வரர் திருக்கோயில்


பெரிய யாகம் செய்யும்போது அதன் முடிவில் அழகான புடவை, அல்லது வேட்டியுடன் பழங்களும் அக்னிக்கு ஸ்வாஹா என்று அளிக்கப்படுகின்றன. நாம் அளிக்கும் அந்த ஆடை, குறிப்பிட்ட கடவுளிடம் போய்ச் சேர்ந்து விடுகிறதாம். இதைச் செய்யும் அக்னியின் பெயர் பரணி.

அக்னியில் பலவகை உண்டாம். அதில் பரணி எனும் ருத்ராக்னி நாம் அளிக்கும் எல்லாப் பொருட்களையும் இறைவனிடம் கொண்டு சேர்க்கிறது என்பது ஐதீகம். இந்த நம்பிக்கையைக் உறுதிப்படுத்தும் விந்தை அரங்கேறிய ஊர்தான் ‘நல்லாடை’. இங்கு இருக்கும் கோயிலில் அருள்புரிபவர் ஸ்ரீ அக்னீஸ்வரர்; இறைவியாய் விளங்குபவள் சுந்தரநாயகி. 

ஊரின் பெயர் நல்லாடை என்பதற்கான காரணம் 


மிருகண்டு மகரிஷிக்குச் சிவனை நோக்கி ஒரு பெரிய யாகம் செய்ய வேண்டி இருந்தது. அதற்காக, இந்தத் தலத்திற்கு வந்தார். யாகத்திற்கும் ஏற்பாடு செய்தார். பல சிவ பக்தர்கள் யாகத்திற்கு வந்து கூடினர். அவர்கள் மிருகண்டு ரிஷியிடம் "முனிவரே! யாகத்தின் புண்ணியம் எங்களுக்கும் கிடைக்க அருள்புரிய வேண்டும்" என்று வேண்டினர்.


"அப்படி என்றால் பக்தர்களே, யாகத்திற்கு வேண்டிய பொருட்களில் சில நீங்கள் வாங்கி அதில் பங்கு பெறுங்கள்" என்றார் மகரிஷி."அப்படியே செய்கிறோம். எங்களால் இயன்ற வரை பொருட்கள் வாங்கி வருகிறோம்" என்றனர் பக்தர்கள்.


அந்த பக்தர்களில் ஊரின் நெசவாளர்களும் இருந்தனர். அவர்கள் ஒன்று சேர்ந்து, தங்கச் சரிகை பின்னி மூன்று பட்டாடை நெய்தனர். அதில் ஒன்று இறைவனுக்கு, மற்றொன்று இறைவிக்கு, மூன்றாவது மகரிஷிக்கு என்று கொண்டு வந்து சேர்ப்பித்தனர்.


நாதஸ்வரத்துடன் ஹோமம் ஆரம்பமாகியது. பின், வேத கோஷங்கள் முழங்கப் பூஜை ஆரம்பமாயிற்று. முடிவில் மகரிஷி மிருகண்டு மூன்று பட்டாடைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அக்னியில் இட்டார். நெசவாளர்கள் ஒருவர்க்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர். ‘என்ன இது! நாம் இறைவன், இறைவிக்கு நெய்த ஆடைகளையும் அக்னியில் போட்டுவிட்டாரே!’ என்ற வருத்தம் அவர்களுக்கு மேலோங்கியது. ஒரு நெசவாளி தைரியமாய், "என்ன சுவாமி, நாங்கள் இறைவன், இறைவிக்கென்று செய்த ஆடைகளையும் தீயீட்டுக் கருக வைத்துள்ளீரே! இது நியாயமா? உங்களுக்கென்று அளித்ததை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை உண்டு. ஆனால்………"


"ஏன் தம்பி முடிக்கவில்லை?" என்று புன்முறுவலுடன் கேட்ட மகரிஷி தொடர்ந்தார்."நான் யாககுண்டத்தில் இட்ட புடவையும் வேட்டியும் எங்கு போய்ச் சேர்ந்தன என்று தெரியுமா உங்களுக்கு? அவை வேறெங்கும் போகவில்லை. கருகிச் சாம்பலாகவும் இல்லை. அவை இறைவனுக்கும், இறைவிக்கும் போய்ச் சேர்ந்துவிட்டன.""எங்கே, நாங்கள் போய்ப் பார்க்கிறோம்" என்று அனைவரும் கர்ப்பகிரகத்திற்குச் சென்று பார்த்தனர். என்ன ஆச்சர்யம்! அந்த சிவலிங்கத்தில் நெசவாளர்கள் கொடுத்த பட்டாடை மிளிர்ந்தது.


அன்று முதல் இந்தக் கோயிலுக்கு ‘நல்லாடை’ என்ற பெயர் வந்தது. பரணி எனும் அக்னி பட்டாடைகளை இறைவனிடம் கொண்டு சேர்ப்பதனால் இந்தக் கோயில் பரணி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய கோயிலானது. ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். சுந்தரநாயகிக்கென்று தனி சந்நிதியும் உண்டு. 

சோழ மன்னர்கள் இந்தக் கோயிலைப் புதுப்பித்ததற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒன்று என்பதால் இது மிகப்பழமை வாய்ந்த கோயில் என்பது தெரிய வருகிறது. இதுவே குலோத்துங்க சோழபுரம் எனப்பட்டது. கோயிலுக்காக ஏராளமான நிலங்களும் வழங்கப்பட்டன.


இங்கு சிவராத்திரி, திருவாதிரை ஆகியவை மிகவும் விமரிசையாக நடக்கும். சித்திரை விசாகம் மிகவும் பெரிய அளவில் நடக்கும். கோயில், நடக்க நடக்க சென்றுகொண்டே இருக்கிறது; சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துள்ளது! மூன்று கோபுரங்கள், பெரிய பிராகாரங்கள் நம்மை அதிசயிக்க வைக்கின்றன. சிவலிங்கத்தைச் சுற்றி அகழி போல் நீர் இருந்து கொண்டே இருக்கிறது. சிவபெருமானைக் குளிர வைக்கும் நோக்கமாக இருக்கலாம்; பெயர் அக்னீஸ்வரர் ஆயிற்றே!இந்த நல்லாடை, திருக்கடையூர் அருகில் இருப்பதால், புகழ் பெற்ற திருக்கடையூர் அபிராமி கோயிலுக்குப் போகும் பக்தர்கள் இங்கும் போய் தரிசனம் செய்து அருள் பெற்று வரலாம்.

புதன், 14 ஜூன், 2017

மஹாளய அமாவாசை நாள் ஏன் முக்கிய நாளாக கருதப்படுகிறது?


மஹாளய அமாவாசை நாள் ஏன் முக்கிய நாளாக கருதப்படுகிறது?



முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை!





ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது. ஆனால், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசையை நமது முன்னோர்கள் சிறப்பித்து வழிபட்டு வந்துள்ளனர். இவை அனைத்தையும் விட புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே 'மகாளய அமாவாசை' எனப்படுகிறது.


மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது.


பல தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.


இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம். ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி"  என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.

மற்ற அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, நாம் இந்த மஹாளய அமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான். அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். 


மஹாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றாகல், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம். 


மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது. மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். 


மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன. 1ம் நாள் - பிரதமை - செல்வம் சேரும் 2ம் நாள் - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம். 3ம் நாள் - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும் 4ம் நாள் - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம். 5ம் நாள் - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும். 6ம் நாள் - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும். 7ம்நாள் - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும். 8ம் நாள் - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும். 9ம் நாள் நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும். 10ம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும். 11ம் நாள் - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும். 12ம் நாள் - துவாதசி - ஆபரணங்கள் சேரும். 13ம் நாள் - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும். 14ம் நாள் - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும். 15ம் நாள் - மஹாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும். 
இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 


மஹாலக்ஷ்மிக்கு உகந்த வெள்ளிக்கிழமை விரதம்

 மஹாலக்ஷ்மிக்கு உகந்த  வெள்ளிக்கிழமை விரதம்!


ஒருசமயம் வைகுண்டத்தில் மஹாவிஷ்ணு பாம்பணையில் படுத்திருந்தார். மஹாலக்ஷ்மி அவருடைய கால்களைப் பிடித்துவிட்டுக்கொண்டிருந்தாள். அப்போது லக்ஷ்மிக்கு ஒரு சந்தேகம் வந்தது. படைப்பால் மனிதர்கள் எல்லோரும் சமம்தானே; அப்படியிருக்க, அவர்களுக்கிடையே ஏன் ஏற்றத்தாழ்வு? படிப்பில், பொருளாதாரத்தில் வாழ்க்கை முறையில் என்று எல்லாவற்றிலும் வித்தியாசம் இருக்கிறதே ஏன்?

தான் செல்வத்துக்கு அதிபதியாக இருந்தும், மக்களுக்குப் பொதுவாக, எல்லோரும் ஒரே மாதிரியாக அனுபவிக்கும் வகையில் செல்வம் போய்ச் சேரவில்லையே என்ற ஆதங்கம் இருக்காதா? ஒரு உண்மையான தாயார் தன்னுடைய எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரிதானே பாவிப்பாள்? பாரபட்சம் என்னிடமிருந்தே ஆரம்பிக்கிறதே, அது எந்த வகையில் நியாயம்? தன்னுடைய இந்த சந்தேகத்தைப் பரந்தாமனிடமே கேட்டாள்; விளக்கம் சொல்லச் சொன்னாள். ‘மனிதர்கள் எல்லோரும் ஒரேமாதிரியாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவரவருக்கென்று முன்வினைப் பயன் என்று உள்ளது. அதற்கேற்றார்போலத்தான் இந்த ஜென்மத்தில் அவர்களுடைய வாழ்க்கை அமையும்’ என்று பதிலளித்தார் மஹாவிஷ்ணு. அதேசமயம், அவர்கள் நல்ல ஒழுக்கங்களை மேற்கொண்டு, நல்லதையே நினைத்து, நல்ல செயல்களை மட்டுமே செய்துவந்தால், அவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

எல்லோரும் நல்லதையே நினைத்து, நல்லதையே செய்யவேண்டுமென்றால், அப்படி அவர்கள் செய்வதற்கு வழிகாட்ட வேண்டியதும் நம்முடைய பொறுப்புதானே?’ என்று மஹாலக்ஷ்மி கேட்டாள். அதற்கு மஹாவிஷ்ணு, ‘அதுவும் உன் கையில்தான் இருக்கிறது’ என்று சொன்னார். ‘ஒருவருக்கு எல்லா நலன்களும் கிடைக்கவேண்டுமென்றால், அவருக்கு லக்ஷ்மி கடாட்சம் இருக்க வேண்டும்.

அதாவது, உன்னுடைய அருட்பார்வை. இந்த கடாட்சம் பெறுவதற்கு அவர்கள் சில விஷயங்களைக் கடைப்பிடிக்கிறவர்களாக இருத்தல் வேண்டும்,’ என்றார். ‘அப்படி என்னென்ன விஷயங்களை அவர்கள் கடைப்பிடிக்கவேண்டும்?’ - லக்ஷ்மி கேட்டாள். ‘அதையும் நீயே நேரில் போய்ப் பார்த்துவிட்டு வாயேன். நீ வாசம் செய்ய வேண்டிய இடம் எது என்று உனக்கே புரியும். அப்படிப்பட்ட இடங்களில் இருப்பவர்களுக்கு நீயே ஆசியும் அருளும் வழங்கிவிட்டு வா’ என்று சொல்லியனுப்பினார்.

பூலோகத்துக்கு வந்த லக்ஷ்மிக்கு அங்கு வசிக்கும் எல்லோர் வீடுகளுமே, தான் தங்கத் தகுதியான இடம்தான் என்று நினைத்திருந்தாள். ஆனால், அவளுக்கு ஏமாற்றம்தான் பதிலாக அமைந்தது. ஆமாம். விடிந்து வெகு நேரமாகியும்கூட பெரும்பாலான வீடுகளில் வாசல் தெளிக்கப்படவில்லை. வீட்டுக்கு வெளியேதான் இப்படி என்றால், வீட்டுக்குள்ளேயும் ஒவ்வொரு அறையும் குப்பையும் கூளமுமாக இருந்தன. அதைப் பார்த்ததுமே முகம் சுளித்தாள் லக்ஷ்மி.

அந்த வீடுகளுக்குள் போகவே பிடிக்கவில்லை அவளுக்கு. பெருத்த மனவேதனையுடன் தெரு வழியே போய்க் கொண்டிருந்த அவள், ஒரு வீட்டு வாசலில் பளிச்சென்று அழகாகக் கோலம் போடப்பட்டிருந்ததைக் கண்டாள். பசுஞ்சாணம் கரைக்கப்பட்ட நீரால் அந்த வீட்டு வாசல் மெழுகப்பட்டிருந்தது. அதில் அழகான கோலம். அதற்கு செம்மண்ணால் ஓரங்கள் வரையப்பட்டிருந்தன. மிகவும் மங்களகரமாகத் தெரிந்த அந்த வீட்டைப் பார்த்ததுமே லக்ஷ்மிக்கு உடனே பிடித்துப் போயிற்று.

சந்தோஷத்தோடு அந்த வீட்டுக்குள் எட்டிப் பார்த்தாள். வீட்டுக்குள்ளேயும் சுத்தம் ஒளிர்ந்தது. சிறிய வீடுதான் என்றாலும் சுத்தமாகப் பெருக்கி குப்பைகள் முழுமையாகக் களையப்பட்டிருந்தன. வீட்டில் வசிப்பவர்களுடைய தேவைக்கு மட்டுமான பொருட்களை வாங்கி வைத்திருந்ததால் அடைசல் இல்லை. அந்த சில பொருட்களையும் அப்போதுதான் புதிதாக வாங்கியவைபோல பளிச்சென்று துடைத்து வைத்திருந்தார்கள். அந்த வீட்டை அவ்வளவு தூய்மையாக வைத்திருந்த வீட்டுப் பெண்மணியின் பெயர், சோமதேவம்மா.

தன் கணவர் பிைக்ஷ எடுத்துக் கொண்டு வரும் பொருட்களை வைத்து, மிக நல்ல மாதிரியாகக் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தாள் அவள். லக்ஷ்மி தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் வாயிலில் நின்றபடியே குரல் கொடுத்தாள். தன் பசிக்கு ஏதாவது தரும்படி கேட்டாள். வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த சோமதேவம்மா, லக்ஷ்மியை வீட்டுக்குள் வரச்சொன்னாள். தன் கணவர் பிைக்ஷ எடுத்துக்கொண்டு வரும் பொருட்களை வைத்து அவளுக்கு உணவு தயாரித்துத் தருவதாகச் சொன்னாள்.

அவளுடைய உபசரணை லக்ஷ்மியைப் பெரிதும் கவர்ந்தது. தான் வறுமையில் உழன்றாலும் தன்னைக் காத்திருக்கச் சொல்லி, உணவளிப்பதாகவும் சொல்கிறாளே இந்தப் பெண் என்று சந்தோஷப்பட்டாள். வெகு எளிதாக, ‘எதுவும் இல்லே, போ,’ என்று சொல்லி விரட்டியிருக்கலாம். ஆனால், அவள் அப்படிச் செய்யவில்லை. அதனால் சோமதேவம்மாவுக்கு தன்னுடைய முழு கருணையையும் அருளவேண்டும் என்று நினைத்தாள். 

லக்ஷ்மி எங்கே தங்குகிறாளோ, அங்கெல்லாம் சுபிட்சம் பொங்கும், சகல ஐஸ்வர்யங்களும் நிறையும். ஆனால் லக்ஷ்மி உடனே அப்படி எல்லாவற்றையும் அப்போதே, ஒரேயடியாக அனுக்ரகித்துவிடவில்லை. வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அந்த விரத மகிமையால் அவளுக்கு எல்லா வசதிகளும் கிடைப்பதுதான் முறை என்று லக்ஷ்மிக்குத் தோன்றியது. அதனால் சோமதேவம்மாவின் கணவர் வரும்வரை, அவளுக்கு அந்த விரதம் கடைப்பிடிக்கும்  முறையைச் சொல்லிக் கொடுத்தாள்.

பிறகு கணவர் வந்தப் பிறகு அவர் பிைக்ஷ எடுத்துக் கொண்டு வந்திருந்த பொருட்களில் தயாரித்தளிக்கப்பட்ட எளிமையான உணவை உட்கொண்டு சந்தோஷத்துடன் விடைபெற்றுக் கொண்டாள் லக்ஷ்மி. சோமதேவம்மா, லக்ஷ்மி தனக்குச் சொல்லிக்கொடுத்த விரதம் பற்றி கணவரிடம் விவரித்து அடுத்த வெள்ளிக்கிழமையே தான் அந்த விரதத்தை மேற்கொள்ளப்போவதாகச் சொல்லி அப்படியே கடைப்பிடித்தாள்.

அந்த விரதத்தின்போது மஹாலக்ஷ்மியே ஒரு சுமங்கலிப் பெண்ணாக வந்திருந்து, சோமதேவம்மா கொடுத்த மஞ்சள், குங்குமம், தாம்பூல பிரசாதத்தை அன்போடு வாங்கிக்கொண்டாள். விரதத்தின் பலனாக, சோமதேவம்மாவின் குடும்பத்தில் வளம் கூடியது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றபடி, தனக்குக் கிடைத்த இந்த நற்பலன்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பி, அக்கம்பக்கத்துப் பெண்களுக்கும் அந்த விரதம் பற்றிச் சொல்லி, அவர்களும் பயனடையும்படி செய்தாள் சோமதேவம்மா. சரி, இந்த வெள்ளிக்கிழமை விரதத்தை எப்படி அனுஷ்டிப்பது?

ஏதாவது ஒரு தமிழ் மாதத்தில் வரும் மூன்றாவது அல்லது நான்காவது வெள்ளிக்கிழமையன்று விரதம் மேற்கொள்ளலாம். அன்று விடியற்காலையிலேயே எழுந்து, மஞ்சள் பூசி குளித்துவிட்டு (விரும்பாதவர்கள் மஞ்சளை விட்டுவிடலாம்) நெற்றியிலே குங்குமப் பொட்டு வைத்துக்கொள்ளுங்கள். பசுஞ்சாணம் கரைத்த நீரால் வாசல் தெளியுங்க. ஃப்ளாட்டில் வசிப்பவர்கள் சுத்தமான நீரை கொஞ்சமாகத் தெளித்து, வழுக்கிவிடாதபடி துடைத்துவிட்டு, அதன்மேல் அழகாக ஒரு கோலம் போட்டு, அதுக்கு செம்மண் பார்டர் போடலாம்.

வீடு முழுவதும் பெருக்கி, துடைத்து சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்.  பூஜையறையையும் சுத்தமாக்கி தூய்மைப்படுத்திக்கொள்ளுங்கள். அங்கே தீபம் ஏற்றி, ஊதுவத்தி கொளுத்தி வைக்கலாம். சாம்பிராணிப் புகை போடலாம். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி அழகுபடுத்தலாம். ஒட்டுமொத்தமாக வீடு முழுவதும்  அன்றைக்குப் பளிச்சென்று இருப்பது நல்லது. அன்று முழுவதும் மஹாலக்ஷ்மி ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம் அல்லது ஆடியோ ஸிடி போட்டுக் கேட்கலாம்.

லக்ஷ்மி ஸ்லோகங்கள் மட்டுமில்லாமல், தெரிந்த அம்பாள் பாடல்களையும் சொல்லலாம். அன்று முழுவதும் எளிமையாக பால், பழம் என்று மட்டும் சாப்பிட்டு விரதமிருக்கலாம். முடியாதவர்கள் அல்லது அவரவர் உடல்நலத்தைப் பொறுத்து பகலில் ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக்கொள்ளலாம். இப்படி விரதம் மேற்கொண்டபிறகு தொடர்ந்து பதினோரு வெள்ளிக்கிழமைகளில் கடைபிடிக்கலாம். நடுவே ஏதேனும் காரணத்துக்காக ஏதாவதொரு வெள்ளிக்கிழமை முடியாமப் போனால், அதற்கடுத்த வெள்ளிக்கிழமையிலேர்ந்து தொடரலாம்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை நேரத்தில் பக்கத்துப் பெருமாள் கோயிலில் தாயாரை தரிசிப்பது முக்கியம். இதை முதல் வெள்ளிக்கிழமை விரதத்தன்றாவது செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் வந்தபிறகு, முடிந்த பிரசாதங்களை (சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி மாதிரி) தயாரித்து, வீட்டு பூஜையறையில் மஹாலக்ஷ்மிக்கு நிவேதனம் செய்யுங்கள். அவரவர் வசதிகேற்ப சுமங்கலிகளை அழைத்து, அவங்களுக்கு குங்குமம், மஞ்சள், பூ, பழம், வெற்றிலை பாக்கு, ரவிக்கைத் துணி என்று அளிக்கலாம்.

இதே மாதிரி பதினொரு வெள்ளிக்கிழமைக்கும் செய்தால் நல்லது. சில குடும்பங்களில் பரம்பரை வழக்கப்படி எல்லா வெள்ளிக்கிழமைகளிலேயும் இந்த விரதத்தை அனுசரிப்பதுண்டு. கீழ்க்காணும் ஸ்லோகத்தை வெள்ளிக்கிழமை விரதத்தன்று சொல்லி வரலாம்.
நம: கமலவாஸின்யை, நாராயண்யை நமோ நமஹ
க்ருஷ்ண ப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ
வைகுண்டே யா மஹாலக்ஷ்மீ: யா லக்ஷ்மீ: க்ஷீரஸாகரே
ஸ்வர்க்க லக்ஷ்மீ ரிந்த்ரகேஹே, ராஜலக்ஷ்மீ: ந்ருபாலயே
க்ருஹலக்ஷ்மீஸ்ச க்ருஹிணாம், கேஹே சக்ருஹதேவதா
இதம் ஸ்தோத்ரம் மஹா புண்யம், த்ரிஸந்த்யம்: ய: படேந் நரஹ
குபேர துல்யஸ் ஸ பவேத் ராஜராஜேஸ்வரோ மஹான்

பொதுப் பொருள்: தாமரையில் வாசம் புரியும் திருமகளே நமஸ்காரம். நாராயணியாய் திகழ்பவளே, கிருஷ்ணருக்குப் பிரியமுள்ளவளே, மஹாலக்ஷ்மியாய் துலங்குபவளே, வைகுண்டத்தில் மஹாலக்ஷ்மியாகவும், பாற்கடலில் ஸ்வர்க்க லக்ஷ்மியாகவும், தேவேந்திரனின் மாளிகையில் ராஜலக்ஷ்மியாகவும், அன்பான குடும்பத்தில் கிரக லக்ஷ்மியாகவும் திகழும் தாயே, நமஸ்காரம். முடிந்தால் நாகை மாவட்டம், சீர்காழியில் உள்ள  அண்ணன் பெருமாள் (வெங்கடாசலபதிக்கே அண்ணன்!) கோயிலுக்குச் சென்று மஹாலக்ஷ்மி தாயாரை வழிபடுங்கள். அல்லது பக்கத்திலுள்ள வெங்கடாசலபதி கோயிலில் தாயாரை வணங்குங்கள்.